| படத்திற்கு நன்றி வெங்கடரங்கன் |
ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். கண்காட்சி தொடங்கிய அன்றே போய்விட்டேன். அப்போதுதான் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.எல்லாக் கடைகளும் தயாராகாமல் இருந்தது. மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தது.
உள்ளே நுழைவதற்கு டிக்கெட் வழங்குவது தொடங்கப் படவில்லை. டிக்கெட் இன்றியே (ஒசின்னா எவ்வளோ சந்தோஷம்) எல்லோரும் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். சில கடைகள் அப்போதே புத்தக விற்பனைக்கு தயாராக இருந்தது. அமைப்பாளர்கள் கடை வைத்திருப்பவர்களுக்கு பேட்ஜ் கொடுப்பதற்காக மைக்கில் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படியே சும்மா ஒரு சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன். முதல் நாள் நீண்ட தூரம் நடந்த அனுபவம் காரணமாக அடுத்த நாள் இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.
உள்ளே நுழைவதற்கு முன் புலவர் ஐயாவை சந்தித்தேன்.இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் அதனால் இந்த தடவை முன்னெச்சரிக்கையாக அந்தத் தவறை செய்யவில்லை. காட்சி அமைப்பாளர்கள் தொலைபேசி உள்ளிட்ட இந்த விவரங்களை அளிப்பது சரியா என்று யோசிக்க வேண்டும்.
முதல் வரிசையில் எஸ்.ராமகிருஷ்ணன் பெரிய
பேனரில் கொஞ்சம் இளமையாக காட்சி தந்து கொண்டிருந்தார்.கடந்த முறை சுகி
சிவத்தின் போஸ்டர்கள் இதேபோல் இருந்ததாக ஞாபகம்.
+2 வில் எனக்கு தமிழாசிரியராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களும் ப்ளக்சில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார் அவருடைய நூல்களும் இடம்
பெற்றிருந்தன. தமிழ் இலக்கணம் எளிமையாக நடத்துவதில் வல்லவரான இவர்
திருக்குறளுக்கும் உரை எழுதி இருக்கிறார்.
ஆங்காங்கே ஷாருக்கானின் தலையை வெட்டி ஒட்டி இணைக்கும் போட்டோ ஷாப் பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த சி.டி வாங்க விரும்பினாலும் இதை கொண்டு போய் போட்டுப் பார்த்தால் பெரும்பாலும் நமக்கு தெரிந்ததையே கற்றுத் தருவார்கள் என்பதால் அதை தவிர்த்து விட்டேன்.
நிறையப் பேர் பாராட்டிய பூமணி எழுதிய "அஞ்ஞாடி" (இப்படிதான் தெரியாத பேரை எல்லாம் சொன்னா இலக்கியவாதின்னு அர்த்தம்) புத்தகத்தை பார்தத்தேன், தலையணை சைசில் இருந்தது .விலையும் மிரட்டியது.அங்கிருந்து விரட்டியது. சாகித்ய அகடமி விருது பெற்ற தோல் நாவலும் தென்பட்டது. ஜெயமோகன் இந்தப் புத்தகத்தைப் பற்றி காராசாரமாக கருத்து கூறி இருந்ததால் அதையும் வாங்க மனம் வரவில்லை. அப்புறம் "பாபர்நாமா" தமிழில் இருந்தது அதை வாங்க ஆசை இருந்தாலும் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் வாங்கலாம் என்று அடுத்ததற்கு தாவி விட்டேன்.
யாருமே இல்லாத இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் ஸ்டாலில் 2011 தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கினேன். அவர்களே கொஞ்சம் ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தனர். இதற்கே மூன்று மணிநேரம் செலவாகி விட சுஜாதாட்ஸ், லெனின் பற்றிய புத்தகம் ஒன்று,30 நாட்களில் தெலுங்கு,இசைக்கலைஞர் யானி ,HTML அடிப்படையைக் கற்றுக்கொள்ள புத்தகம்,தமிழ் கம்பூயூட்டரின் பழைய இதழ்கள், பாரதியார் பாடல்கள், இவற்றை அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். எங்க வீட்டம்மா கேட்ட புத்தகம் கிடைக்கவில்லை (தேடினாத்தானே!)
நம்ம முன்னணிப் பதிவர்கள் அங்குதான் அன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். புலவர் ஐயாவை மட்டுமே சந்தித்தேன்.
புத்த வெளியீட்டு விழாவையும் எட்டிப் பார்த்தேன், திருமாவளவன். புத்தரைப் பற்றி பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.
நூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
*****************************************************************************************************************
















