என்னை கவனிப்பவர்கள்

முகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஜனவரி, 2013

நீயா? நானா? முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரிந்துரைகள்

   புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவியில் நீயா நானா முகங்கள் 2012 என்ற நிகழ்ச்சி சற்று புதுமையாக இருந்தது.சினிமா பற்றி மட்டுமே பேசாமல் இலக்கியம் ஓவியம்,சேவை என்று பலவற்றிலும் கவனத்தை ஈர்த்த முகங்கள் பற்றி பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சொன்னது நன்றாகவே இருந்தது. அவற்றில் ஒரு சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

   சிறந்த அரசு பள்ளியாக எதை பரிந்துரைக்கிறீர்கள் என்று கேட்டபோது எஸ்.ராமகிருஷ்ணன்   இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியையும்  அழகேச பாண்டியன்  கோவில் பட்டிக்கு அருகில் உள்ள சிந்தனைக்கரை ஊராட்சி ஒன்றிய பள்ளியையும் தான் பார்த்ததில் சிறப்பாக உள்ளது என்று கூறினர். 

    நான் அந்தப் தொலைபேசியில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர் பிராங்க்ளினுக்கும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.  

  இராமம்பாளையம் பாளையம்  பள்ளியைப் பற்றி எஸ் ராமகிருஷ்ணன்  ஏற்கனவே எழுதி இருக்கிறார். அரசு பள்ளி என்றாலே கேவலமாகப் பார்க்கும் சூழ்  நிலையில் இப்படிப்பட்ட ஒரு பள்ளி  இருக்கிறதா என்று ஆச்சர்யம் ஏற்படக் கூடும். இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இப் பள்ளியில். தலைமை ஆசிரியை மற்றும் உதவி ஆசிரியர் பிராங்க்ளின் இந்தப் பள்ளியை அனைவரும் கவனிக்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.கடந்த ஆண்டில் 30 க்கும் கீழ் இருந்த மாணவர் எண்ணிக்கை இந்த ஆண்டில் 60 க்கு மேலாக உயர்ந்திருக்கிறது. மாணவர்கள் குறைவு என்றாலும் வகுப்புகள் 5 உள்ளதால் ஒரு ஆசிரியர் பல்வகுப்பு கற்பிக்க வேண்டிய சூழ்நிலை. அவசரத்திற்கு விடுப்பு எடுப்பது கூட கடினம். இந்நிலையில் மிகச் சிறந்த உதாரணமாக மாற்றியதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர் பிராங்கிளின் பதவி உயர்வுக்குக் காத்திருக்கிறார். அவர்  அந்தப் பள்ளியை விட்டு செல்வது அந்தப் பள்ளிக்கு நஷ்டம் என்றாலும் இன்னொரு பள்ளி பயனடையும் என்று உறுதியாக நம்பலாம்.

    இப்பள்ளியை அடையாளம் காட்டிய எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் அதை அங்கீகரித்த விஜய் டிவிக்கும், நன்றிகள் சொல்லலாம். இதை பார்க்கும்  பள்ளி ஆசிரியர்களும் இதைப் போல் செயல்பட்டு அரசு பள்ளிகள் மீதான அவப் பெயரை நீக்க முயற்சிக்க வேண்டும்.

அந்தப்  பள்ளியைப் பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்  
(பள்ளியின் வலைப்பூ முகவரி;http://rmpschool.blogspot.in)

    வட்ட மேசைகள், மாணவர்கள் எழுதும் அடிமட்டக் கரும்பலகைகள்,ஆடியோ, வீடியோ சாதனங்கள் குடி நீர் வசதிகள் போன்றவை இன்று நிறைய அரசு பள்ளிகளில் உள்ளன. இது போன்ற வசதிகளை புற்றீசல்களாய் முளைத்துள்ள நர்சரி பள்ளிகளில் காண முடியாது. அரசு பள்ளிகளில் செயல் வழிக் கற்றல்,படைப்பாற்றல் கல்வி முறை போன்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன.(இவற்றைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவு  எழுதுவேன்) மெட்ரிகுலேஷன் பள்ளிகளோ மனப்பாட முறையையே இது நாள் வரை பின் பற்றுகின்றன. எனக்குத் தெரிந்து கற்றல் கற்பித்தலில் பெரும்பாலான ஆங்கிலப் பள்ளிகளில் துணைக் கருவிகள் பயன் படுத்தப் படுவதில்லை.ஆனால் அரசு பள்ளிகளில் இவற்றை பார்க்கலாம். துணைக் கருவிகள் தயாரிப்பதற்கென்றே பயிற்சிகளும் நடத்தப் படுகின்றன, ஆனால் இவ்வளவு இருந்தும் அரசுபள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முன் வருதில்லை. காரணம், ஆங்கிலக் கல்வியின் மீது கொண்டுள்ள மோகமே.இரண்டு மூன்று  ஆண்டுகளுக்கு ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டுபின்னர் பணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் சேர்வது வழக்க மான ஒன்றாக இருக்கிறது. இவர்கள் ஆங்கிலமும் வராமல் தமிழும் வராமல் அவதிப் படுவதும் உண்டு.
  நாம்கூட அருகிலுள்ள அரசு பள்ளிகளை பார்வை இடலாம்.குறைகளையே கண்டு பழக்கப் பட்ட நாம் அவற்றில் காணும் நல் அம்சங்களை அறிந்து பாராட்டி தட்டி கொடுக்கலாம். குறைகள் இருப்பின் தட்டியும் கேட்கலாம்.
**************************************************************************************
  2012 இல் முகங்களில்  இன்னொரு சிறந்த முகம் இளையராஜா. இசை அமைப்பாளர் அல்ல! ஓவியர் இளையராஜா. இவரது ஓவியங்களில் சிலவற்றை வலைப் பதிவுகளில்  பார்த்திருக்கிறேன். இவரைப் பற்றி இதற்குமுன்னர்  கேள்விப்பட்டதில்லை. இவரது ஓவியங்களை பார்த்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அப்பப்பா! என்ன உயிரோட்டமுள்ள ஓவியங்கள். நிறையப் பேர் இவரைப் பரிந்துரைத்தனர்.
இதோ ஒரு உதாரணம். ஓவியமா? புகைப்படமா? இரண்டும் கலந்த கலவையா? நான் இந்த ராஜாவுக்கும் ரசிகனாகிவிடேன்.

****************************************************************************************
2012 இன் சிறந்த நாவலாக அறியப்பட்டது. எழுத்தாளர் பூமணி அவர்களின் அஞ்ஞாடி என்ற நாவல். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருப்பதாக  பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
**************************************************************************************
    மிகச்  சிறந்த பத்திரிகைத் தொடராக ராஜூ முருகன் விகடனில் எழுதி வரும் 'வட்டியும் முதலும்' என்ற தொடர் அறிவிக்கப் பட்டது.எஸ் ராமகிருஷ்ணன் புதிய தலை முறையில் இறையன்பு  எழுதிவரும் 'போர்த்தொழில் பழகு' என்ற தொடரை பரிந்துரை செய்தார்.

   'போர்த்தொழில் பழகு' தொடரை தவறாமல் படித்து வருகிறேன்.எனது தேர்வும் அதுதான். போர் என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றோம் ஆனால் போரினால் விளைந்த நன்மைகளையும் அதை அன்றாட வாழ்விலும் நிர்வாகத்திலும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதை அற்புதமாக எழுதி வருகிறார் இறையன்பு.அநேகமாக உலகில் நடந்த அத்தனை போர்களின் பின்பற்றப்பட பல்வேறு உத்திகளையும் அதனால் கிடைத்த வெற்றி தோல்விகளையும்  ஒரு நாவல்போல படு சுவாரசியமாக விவரித்துள்ளார்.

   ராஜு முருகன் பற்றி அவ்வளவாக நான் அறிந்ததில்லை. நேற்று விகடன் வலை தளத்தில்  வட்டியும் முதலும் தொடரின் ஒன்றிரண்டு பகுதிகளை வாசித்தேன். அனுபவங்களையும் சமூக நிகழ்வுகளையும் நன்றாகவே எழுதி இருக்கிறார்.

இருந்தாலும்  எனது ஒட்டு "போர்த் தொழில் பழகு" விற்கே 
************************************************************************************
கொசுறு: அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ - என்ற நண்பன் படப் பாடலை 2012 இன் சிறந்த பாடலாக தனது சாய்சாக எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது(ஆனால் தேர்வானது வேறு பாடல்) 

**************************************************************************************************************
இதையும்  நேரம் இருந்தால் படியுங்கள்!
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?