(என்ன வினை வந்ததுன்னு பதிவின் கடைசியில் பாருங்க!)
கடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு ஆச்சர்யம் என்னவெனில் இன்றும் பள்ளிச் சிறுவர்கள் விரும்பும் விஞ்ஞானியாக இருப்பது ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்.
முக நூல் பக்கங்களில் அடிக்கடி இவரது படங்களை காணமுடிகிறது. நிறையப் பேருடைய ப்ரொஃபைல் படங்களாக இருக்கிறார். இத்தனைக்கும் இவருடைய விஞ்ஞானக் கருத்துக்கள் கல்லூரிகளில்தான் பாடப் பொருளாக உள்ளது.
இவரைப் போன்றவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் கதைகளாகக் கூறப் படுகின்றன. இவை உண்மையாக நடந்திருக்குமா என்பது ஐயம் என்றாலும் அவை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
இதோ அதுபோல் ஒன்று.
ஐன்ஸ்டீன் ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்து கொண்டிருந்தாலும் அவரது சிந்தனை வேறெங்கோ அறிவியல் கருத்தை அடைய பயணம் செய்துகொண்டிருந்தது.சூழ் நிலை மறந்து சிந்தனை வயப் பட்டிருந்த அவரை ரயில் டிக்கெட் பரிசோதகர் அவருடைய பயணச் சீட்டைக் காட்டும்படி கேட்டு அவரது சிந்தனையைக் கலைத்தார்.
ஐன்ஸ்டீன் டிக்கட்டைக் எடுப்பதற்காக பாக்கெட்டில் கைவிட்டார். அங்கு அதைக் காணவில்லை.வைத்த இடம் நினைவுக்கு வராமல் விழித்தார் அந்த விஞ்ஞானி.
டிக்கெட் பரிசோதகருக்கு அவரை எங்கோயோ பார்த்த நினைவு வந்தது.பின்னர் கண்டு பிடித்து விட்டார் அவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்று.
"ஐயா, நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டேன். நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம். நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். டிக்கெட்டைத் தேட வேண்டாம். பரவாயில்லை." என்று சொல்லிவிட்டு அடுத்தபெட்டிக்கு சென்றுவிட்டார்.
நீண்ட நேரம் கழித்து மீண்டும் வந்தார் பரிசோதகர், அங்கே, ஐன்ஸ்டீன் தன் பையில் உள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு ஆடைகள், புத்தகங்கள் என்று என்று அலசி டிக்கெட்டை இன்னமும் தேடிக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த டிக்கட் பரிசோதகர் "ஐயா, நான்தான் சொன்னேனே டிக்கட் தேவை இல்லை என்று. நாடறிந்த விஞ்ஞானியை நாங்கள் நம்பாமலிருப்போமா? தயவு செய்து தேடவேண்டாம்" என்றார்.
ஐன்ஸ்டீன் சொன்னார், "உங்களுக்காகத் தேடவில்லை.நான் எங்கு போக வேண்டும் என்பதை நான் மறந்து விட்டேன். டிக்கட்டைப் பார்த்துத்தான் அந்த இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதனால்தான் தேடுகிறேன்" என்றார்
மேலும் "என் மனைவி டிக்கட்டை பையில் பத்திரமாக வைத்ததாகத் தானே சொன்னார்? கிடைக்கவில்லையே!." என்று தேடலைத் தொடர்ந்தார்.
சிரித்த டிக்கெட்பரிசோதகர் "கவலைப் படாதீர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மனைவிக்கு போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
அடுத்த ஸ்டேஷன் வந்ததும் டிக்கட் பரிசோதகர் ஐன்ஸ்டீனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்று உங்கள் மனைவிக்கு போன் செய்து கேளுங்கள் என்றார்.
தயங்கினார் ஐன்ஸ்டீன்.
"ஏன் தயங்குகிறீர்கள். மிஸ்டர் ஐன்ஸ்டீன்!. மனைவி திட்டுவார் என்று பயமா?" என்றார் டிக்கட் பரிசோதகர் கிண்டலாக!
ஐன்ஸ்டீன் பரிதாபமாக "மனைவியின் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டேன்"என்றார்
************************
இந்த கதையைத்தான் என் மனைவிகிட்ட சொன்னேன். அதனால என்ன வினை நடந்தது? எப்ப நடந்ததுன்னு கேக்கறீங்களா?
ஒரு நாள் டூ வீலருக்கு பெட்ரோல் போடறதுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பினேன் எங்க வீட்டம்மாவும் நானும் வரேன். என்ன கோவில்ல விட்டுட்டு உங்க வேலைய முடிச்சிக்கிட்டு வரும்போது திருப்பி என்ன கூப்பிட்டுக்கிட்டு வந்துடுங்க என்று சொல்ல, நானும் கோவில்ல விட்டுட்டு பெட்ரோல் போட போயிட்டேன்.வேற சில வேலைகள் இருந்தது அதையும் முடிச்சிகிட்டு திரும்பி அதே வழியா வந்தேன்.
இங்கதாங்க என்னோட வினை ஆரம்பமாயிடுச்சு.ஏதோ ஞாபகத்தில கோவில் வாசல்ல எனக்காகாக் காத்துக் கிட்டிருந்த வீட்டம்மாவை கவனிக்காம நான் பாட்டுக்கும் தாண்டி போயிட்டேன். கிட்டத்தட்ட வீட்டுக்கிட்ட போனதும் ஞாபகம் வந்தது. திரும்பி போனதும் கோவில்ல இன்னொரு அம்மனா (பத்ரகாளியா?) நின்னுக்கிட்டிருந்த மனைவியை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்தேன்.
அப்புறம் எப்படி வாங்கிக் கட்டிக் கட்டிகிட்டிருப்பேன்றதை உங்க கற்பனைக்கு விட்டுடறேன்.
அதோட சும்மா இருந்திருக்கலாம்தானே! சமாதானப் படுத்தறதுக்காக இந்த ஐன்ஸ்டீன் கதைய சொன்னேன். அவ்வளவுதான்.
பொங்கி எழுந்த ஹோம் மினிஸ்டர், "ஐன்ஸ்டீன் அறிவாளி, விஞ்ஞானி, மேதை அவர் மறந்தார் னா அதுல நியாயம் இருக்கு. அவர் எவ்வளோ விஷயங்களை கண்டுபுடிச்சி இருக்கார். நீங்க என்ன கண்டுபுடிச்சீங்க! காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க! எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன்?. யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு விவஸ்தை இல்லையா?........" என்று தொடர அந்த நேரத்தில வழக்கமா மிஸ்டு கால் குடுக்கிற ஒரு மகராசன் கால் பண்ண அது மிஸ்டு கால் ஆறதுக்குள்ள பட்டனை அழுத்தி "ஹலோ'...........ஹலோ" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினேன்.
பொங்கி எழுந்த ஹோம் மினிஸ்டர், "ஐன்ஸ்டீன் அறிவாளி, விஞ்ஞானி, மேதை அவர் மறந்தார் னா அதுல நியாயம் இருக்கு. அவர் எவ்வளோ விஷயங்களை கண்டுபுடிச்சி இருக்கார். நீங்க என்ன கண்டுபுடிச்சீங்க! காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க! எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன்?. யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு விவஸ்தை இல்லையா?........" என்று தொடர அந்த நேரத்தில வழக்கமா மிஸ்டு கால் குடுக்கிற ஒரு மகராசன் கால் பண்ண அது மிஸ்டு கால் ஆறதுக்குள்ள பட்டனை அழுத்தி "ஹலோ'...........ஹலோ" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினேன்.
**************
கற்றுக்கொண்ட நீதி:
தெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.
வீட்டில யாரு கிட்டயும் சொல்லக்கூடாது. குறிப்பா வீட்டம்மா கிட்ட சொல்லக்கூடாது. ஹி..ஹி,,ஹி,,ஹி,,ஹி
*********************
குறிப்பு: இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை.
********************************************************************
இன்னொரு ஐன்ஸ்டீன் கதை :நேரம் இருந்தா இதையும் படியுங்க!
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்
இன்னொரு ஐன்ஸ்டீன் கதை :நேரம் இருந்தா இதையும் படியுங்க!
என்னைவிட புத்திசாலி நீதான்—ஐன்ஸ்டீன்
