என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை

    இரும்பு குதிரைகள் நாவலில்கதையின் நாயகன் விஸ்வநாதனின் வாயிலாகச் சொல்லும் கடைசி கவிதை. தன் கணவனுக்கு பிடித்தது கவிதை இலக்கியம்.தனக்கும் தன் குடும்பத்திற்காகவும் பிடிக்காத வேலையை செய்கிறானா என்ற எண்ணம் கவிதைகளை படித்த எண்ணம்  விஸ்வநாதனின் மனைவி தாரணிக்கு ஏற்படுகிறது.அவன் எதையும் வெளிக்காட்டாது சகஜமாக நடந்து கொள்வது சிறிது குற்ற உணர்வையும் அவளுக்கு ஏற்படுத்துகிறது. இதோ அவளது வார்த்தைகளில்
  "உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? என் மேல கோபமில்லையே! சினிமா பீல்ட் கூடாதுன்னு சண்டை போட்டு அனுப்பினோமேன்னு ரொம்ப வேதனையா இருந்தது அதுக்கு தண்டனை மாதிரி நெனச்சிண்டு நீங்க எழுதின எல்லாக் கவிதைகளையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில நம்பர் போட்டு விடாப்பிடியா எழுதினேன்.  நன்னா இருக்கா ஏன் கையெழுத்து?தாரிணிக்கு சமர்ப்பணம்னு போடுவேளா? என்ன தலைப்பு வைக்கலாம்.?
"இரும்பு குதிரைகள்" என்றான் விஸ்வநாதன் 
"ஹா! நல்லா  இருக்கு. இரும்பு குதிரைக்கு "க்" உண்டா?
"இல்லை தாரிணி"
"க் உண்டு போலிருக்கே. ஒற்று வரணுமே!"
"நம்ம தலைப்பில வேண்டாமே!"
 நாவலின்  இறுதிப் பகுதியில் இடம் இந்த பெரும் உரையாடல் மனதுக்குள் பல உணர்வுகளை எனக்கு ஏற்படுத்தியது. 
அப்போது பதிவுலகம் இருந்திருந்தால் ஒரு வேளை அவனது கனவுகளை பதிவுகள் மூலம் கவிதைகளாய் வெளிப்படுத்தி இருப்பான். இப்போது கூட எத்தனையோ விஸ்வநாதன்கள் தங்கள் உணர்வுகளை பதிவுலகில் விதைக்கிறார்கள். நீங்களும் நானும் கூட அவர்களில் ஒருவராக இருக்கலாம்.

ஒன்பது பகுதிகளாக வெளிவந்த பாலகுமாரனின் கவிதைகளுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

                            இரும்பு குதிரைகள்

                வட துருவம் தென் துருவம் அச்சாய் வைத்து
                புவியுருண்டை  சூரியனை சுற்றும் என்றார் 
                பூமியது தேரேன்றால் புரவிஎங்கே?
                எங்கிழுத்துப் போகிறது இத்தனைக் காலம் 
                யாரிதற்கு தேர்ப்பாகன் எங்கே வார்த்தோல்?
                ஏன் ஓட்டிப் போகின்றான் எதனைத் தேடி?
                நரநரத்து பூமித் தேர்  போகும் சத்தம்
                இரவெல்லாம் என்னுள்ளே தினமும் கேட்கும்
                இழுக்கின்ற குதிரையதை இருட்டில் தேடும் 
                காணாமல்  வாய்பொத்தி தவிக்கச் செய்யும் 
                நுகத்தடியில்  பூட்டாது பரியை உருக்கி 
                தேருக்குள் அடைத்துவிட்டு செல்லுதல் போல் 
                பூமிக்குள் ஏதேனும் குதிரை உண்டா?
                யார் உருக்கி அடைத்தார்கள் உருண்டைப் புவியில் 
                பூமியது தேர்தானா குதிரை  உடலா?
                தெரு முழுதும் ஓடுவது தேரா பரியா?
                உயிர்போல ஒர் பொறியை உள்ளே பொதித்து
                இரும்பான குதிரைகள் ஓடக் கண்டேன் 
                பூமியெனும் குதிரைகள் சக்தி யூட்டி 
                பொழுதெல்லாம் ஓட்டுவது எந்த ஞானி 
                ஏன்ஓட்டிப் போகின்றான் இத்தனைக் காலம்?
                              ************************************

  இதைப் படித்தீர்களா?
பாலகுமாரனின் கவிதைகள்!l
மன்னன் என்ன சொன்னான்? பாலகுமாரன் கவிதை.
***************************************************************************************

இன்று மகா கவி பாரதியின் நினைவு நாள் அந்த தேசிய கவிக்கு ஒரு கவிதாஞ்சலியைப்  படித்து தங்கள் மேலான கருத்தைக் கூறுவீர்.