என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 11 அக்டோபர், 2011

தாய்

சொல்லவே முடியாத் துயரில்
    சோர்ந்தே விழுந்தாலும் மழலையை
மெல்ல எடுத் தணைத்து
    மேனியை இதமாய்த்  தடவி
வெல்லக் கட்டி என்றும்
    வேங்கையின் மகனே என்றும்
செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
   சேயினைக் காப்பாள் அன்றோ?            1

காலை  எழுந்த  உடன்
    கடிகாரம் கடிது ஓட
சேலையை சரியாய்க்  கட்ட
    சிறிதுமே நேரமும் இன்றி
வேலை செய்து கொண்டே
   விரைவாய் இடையில் வந்து
பாலை வாயில் இட்டு
 பக்குவமாய்  சுவைக்க வைப்பாள்        2

சத்துணவு நமக்கே தந்து
    சுவையுணவு  மறந்த போதும்
பத்தியம் பலவா ரிருந்து
    பகலிரவாய் விழித்த போதும்
நித்திய வாழ்க்கை தன்னில்
   நிம்மதி இழந்த போதும்
சத்தியத்  தாய் தன் அன்பில்
    சரித்திரம்  படைத்தது நிற்பாள்        3

பச்சிளம் பாலகன் தன்னை
    அம்மா என்றழைக் கும்போதும்
அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
    அறிஞனாய் ஆகும் போதும்
மெச்சி அவன் புகழை
   மேலோர்கள் சொல்லும் போதும்
உச்சியே குளிர்ந்து போவாள்
   உவகையில் திளைத்து நிற்பாள்        4

பேய்குணம் கொண்டே பிள்ளை
    பெருந்துயர் தந்திட் டாலும் 
சேய்குனம் சிறிதும் இன்றி
    சிறுமையை அளித்திட் டாலும்
நாய்குணம் மனதில் கொண்டே
    நல்லன மறந்திட் டாலும்
தாய் குணம்  மாறா தம்மா
    தரணியில் உயர்ந்த தம்மா!               5 

விண்ணைத் தொடும் அளவு
    வளர்ந்திட்ட தென்னை போல்
என்னையே எடுத்துக் கொள்
    என்றீயும்   வாழை     போல்
தன்னையே நினையா நெஞ்சம்
    தன்னலம் பாரா நெஞ்சம்
அன்னையின் அன்பு நெஞ்சம்
    அவனியில் இதை எது மிஞ்சும்?       6



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895