என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

பெட்டிக்கடை-இளையராஜா நிகழ்ச்சியில் வைகோ பேச்சு +சூப்பர்சிங்கர்


பெட்டிக்கடை  10 
திறந்து நீண்ட நாட்களாகி விட்டது. இனி அவ்வப்போதாவது எழுத வேண்டும் 

வைகோ பேச்சு :


        கலைஞரைப் பற்றிய வைகோ  பேசிய  பேச்சு  கண்டனத்துக்குள்ளாகி இருப்பது அனைவரும் அறிந்ததே. சிறந்த பேச்சாற்றல் வாய்ந்த வைகோ சமீப காலங்களில் தடுமாறி வருவது பரிதாபத்திற்குரியதுதான்
  வைகோ சிறந்த பேச்சாளர் என்பது எல்லோர்க்கும் தெரியும் சில ஆண்டுகளுக்கு முன்பு  . இளையராஜா இசையமைத்த திருவாசகம் இசை வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய அற்புதமான உரை பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இணையத்தில் தேடிப் பார்த்தேன் அந்த ஆடியோவோ, வீடியோவோ கிடைக்கவில்லை.  இப்போது யு ட்யூபில் கிடைத்தது முழுமையாக கேட்டேன். மதிமுக வலை தளத்தில் எழுத்து வடிவிலும் காணப்படுகிறது. என்ன ஒரு சொற்பொழிவு! அழகு தமிழில் மழை எனப் பொழிந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.ஏதோ இளையராஜாவை அடுக்கு மொழியில் பாராட்டி இருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியின் திறந்த வெள்ளம்போல் பிரவாகம் எடுத்து ஓடியது போலிருந்தது பேச்சு. அரசியல் சிறிதும் கலக்காமல் தமிழ் இசை பற்றியும் இசை தொடர்பான பல்வேறு தகவல்களுடனும் இலக்கியக் குறிப்புகளையும் பாடல்களையும் சரளமாக சுட்டிக்காட்டி   அவர் பேசிய அந்தப்  பேசிய அந்த பேச்சு வைகோவின்  சிறந்த பேச்சுகளில் ஒன்றாகக் கொள்ளலாம். ஒரு ஆய்வே நடத்தி விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அரை மணிநேரத்திற்கு மேலாக அவர் பேசிய உரை அத்துணை பேரையும் கட்டிப் போட்டதாக சொல்லபடுகிறது. ரஜினி அந்தப் பேச்சுக்கு உணர்ச்சி வசப்பட்டு நீண்ட நேரம் கை தட்டுவதை வீடியோவில் காண முடிந்தது 
அப்படிப் பேசிய வைகோ வா இன்று இப்படிப் பேசுகிறார்  என்ற ஐயம் எழுவதில் வியப்பில்லை./ ஹூம் ! எப்படி இருந்த வைகோ ?
வைகோவின் அந்த உரையை கேட்க விரும்புவோர் இங்கு கிளிக்குங்கள்
இளையராஜாவின் திருவாசகம் 
வெளியீட்டு விழாவில் வைகோ பேசிய பேச்சு

         நான் பல முறை கவனித்திருக்கிறேன். பொதுவாக வயதுக்கும் பேச்சுக்கும் தொடர்பு இருக்கிறது . சிறுவயதில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவது இயல்பு. அப்போது யோசித்து பேசும் பக்குவம் குறைவாகவே இருக்கும் 
    ஆனால்  நடுத்தர வயதுப் பேச்சில் ஒரு கட்டுப்பாடு இருப்பதை காணமுடியும். மனதுக்குள் இருப்பதை அப்படியே  சொல்லாமல் நாகரீகமாகவும் யாரும் தவறாக எண்ணாத வகையில் எச்சரிக்கையுடன் பேசுவார்கள். பின் விளைவுகளை சிந்தித்துப் பார்ப்பதாக பேச்சு அமையும் . வயது அதிகம் ஆகஆக அந்தக் கட்டுப்பாடு குறையத் தொடங்குகிறது நாசூக்காக சொல்லும் திறமை குறைகிறது. குடும்பங்களிலும் பெரியவர்கள் சட்டென்று ஏதாவது சொல்லிவிட்டு பின்னர் வருந்துவதை காண முடியும். சிலர் தான் சொன்னது தவறு என்று தெரிந்தும் பின்னரும் அதனை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதம்  பிடிப்பவரும் உண்டு. உறவினர்களுக்குள் பிரச்சனைகக்குக்கூட இவை  காரணமாக  அமைகிறது.
     பேச்சு மட்டுமல்ல எழுத்தும்கூட இந்த விதி பொருந்துகிறது. நான் கவனித்தவரை  இணையத்தில்  இளைஞர்களை விட சில மூத்தவர்களின் எழுத்தில் வெளிப்படை தன்மை அதிகம்  காணப்படுகிறது. அவர்கள் என்ன நினைப்பார்களோ இவர்கள் என்ன நினைப்பார்களோ  என்று எண்ணாமல் மனதில் பட்டதை அப்படியே பிரதிபலிப்பார்கள்.
  நா பிறழ்வுக்கு வயது ஒரு காரணமாக அமைவது கண்கூடு கலைஞர் வைகோ,இளையராஜா, விஜயகாந்த் போன்றோரின் பேச்சுக்கள் இவற்றிற்கு உதாரணம்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால் வயது ஆக ஆக எங்கு பேசும்போதும் கவன்ம் வேண்டும் என்பதே .அதுவும் பொது வாழ்க்கையில் அரசியலில் இருப்பவர்கள்  மிக கவனமாகஇருக்க வேண்டும்

****************************************************************************
சூப்பர் சிங்கர் 
நான் சூப்பர் சிங்கர் பைனல்ஸ் பார்க்கவில்லை. அப்படி என்னதான் பாடினார்கள் என்று இணையத்தில் பார்த்தேன். அப்படி ஒன்றும் சுவாரசியமாகப் படவில்லை . 
   சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற ஆனந்த். ஏதோ ரெண்டு சினிமாவில் பாடல் பாடிவிட்டார். அப்படிப் பட்டவரை தேர்ந்தெடுத்தது தவறு என்று விஜய் டிவியை வருத்தெடுதனர் நெட்டிசன்கள் . யார் சூப்பர் சிங்கர் பட்டத்தை  வென்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சை இருக்கத்தானே செய்கிறது. ராஜகணபதியை விஜய் டிவி பிக்ஸ் செய்திருக்கும் என்று நினைத்தேன். பரீதா வெல்லவேண்டும்  என்ற உணர்வை பார்ப்போரிடையே  ஏற்படுத்தி வைத்திருந்தது  டிவி. ஆனால் எதிர்பாராவிதமாக ஆனந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது.  எல்லோருமே நன்றாகவே பாடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள் . (இன்னும் கொஞ்ச காலத்திற்காவது நிகழ்ச்சியை நிருத்ஹ்டி வைத்தால் நன்றாக இருக்கும் )
       இதில் வெல்பவர்கள் எல்லாம் இசையை தொழிலாகக்  கொண்டு பிழைக்க முடியுமா என்ற ஐயம் எனக்கு ஏற்படுவதுண்டு . இதில் வென்றவர்களுக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்து வருவது உண்மைதான். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் இசையை பிழைப்பாக இவர்கள் கொள்ள முடியுமா என்ற ஐயமும் எழுகிறது. (வீட்டுக்கு வீடு எஞ்சினியர்கள் போல வீட்டுக்கு வீடு பாடகர்கள்) 
இசைத் துறையில்  ஏற்கனவே புகழ் பெற்றவர்கள் தங்கள் வாரிசுகளையே முன்னிலைப் படுத்துகிறார்கள்.
அது கிடக்கட்டும் . சூப்பர் சிங்கர் பைனல்ஸ் பற்றிய சுந்தர் என்பவரின் சுவாரசியமான விமர்சன  வீடியோவை  பாருங்கள் .


(சூப்பர் சிங்கர் முடிஞ்சி எவ்வளோ நாளாச்சு இப்போ  இதைப் பத்தி எழுதறது தேவயான்னு கேக்கலாம்? நானெல்லாம்  போன மாசம் சொன்ன ஜோக்குக்கு இந்த மாசம் சிரிக்கற ஆளு. அதனால கண்டுக்காதீங்க.)
------------------------------------------------------------------------------------------------------------------------

அட! என்னைப் போல் ஒருவன் 
அவ்வப்போது என்னுடைய பெயரில் யார் யார் இருக்கிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று இணையத்தில்  தேடுவது வழக்கம். அப்படி தேடியபோது  முகநூலில் கிடைத்தவர் முரளிதரன் . தன்னை விவசாயி மகன் என்று பெருமையோடு கூறிக் கொள்ளும் இவரது முகநூல் பதிவுகளில் கிராமம் சார்ந்த பதிவுகளை இட்டு அசத்தி வருகிறார். கிராமத்து விவசாய மாந்தர்களின்  புகைப்படங்கள் மூலம் கிராம வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அவற்றைப் பார்த்தால் கிராமங்கள் மீது நமக்கும் காதல் உண்டாகிவிடும்.
அவரது கவிதை ஒன்று


விளைவித்தவன்
பிச்சைக்காரன்!
விலை வைத்தவன்
இலட்சக்காரன்!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...
எங்களையோ அல்லது நாங்கள் 
விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....
இப்படிக்கு விவசாயிகள்...
நன்றி முரளிதரன் 
https://www.facebook.com/murali.arun.509

*****************************************************************************************************************
எனது முகநூல் கிறுக்கல்கள் 

மக்கு முக ராசிதான் இல்லன்னு பாத்தா முக நூல் ராசிகூட இல்ல போலிருக்கு .  நம்ம நட்பு வட்டத்துல 304 பேர் இருக்காங்க. முன்பெல்லாம் என்னோட வலைப்பதிவில எழுதியத மட்டும் முக நூல இணைப்பு கொடுப்பேன். அதுக்கு லைக்கோ கம்மெண்டோ கிடைக்கிறது ரொம்ப ரொம்ப  கம்மி. அப்படி வர்ற கம்மெண்டும் லைக்கும் நம்ம வலைப்பதிவு நண்பர்கள் போனாபோகுதுன்னு போடறதுதான்ஆமாலும் விடுவமா என்ன?  அவ்வப்போது  முகநூலல கிறுக்கறத விடமாட்டோம் இல்ல. 

சரி என்னோட கிறுக்கல்களை படிச்சிட்டு  கிறுக்கு புடிச்சா நன் பொறுப்பு இல்ல.

  • பல தோல்விகளைத் தாண்டி பெற்ற ஒரே ஒரு வெற்றி அத்தனை தோல்விகளையும் மறக்க செய்துவிடுகிறது. ப்ல வெற்றிகளுக்குப் பின்சந்திக்கும் ஒரேஒருதோல்வி அத்தனை வெற்றிகளையும் ஒன்றுமில்லாததாக்கிவிடுகிறது.
  • வெற்றிபெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும்ஒருபெண்தான்இருக்கிறாள்.... 
  • மக்களுக்காக மக்களே மக்களால் வேறு வழியின்றி ஏமாறும் நிகழ்வு  தேர்தல்
  • மனிதன் மிருகத் தனமாக நடந்துகொள்ளும் போதெல்லாம் சொல்லும் வார்த்தை 'நானும் மனிதன்தானே!'
  • அன்பினால் இந்த உலகத்தை திருத்த முடியும் என்றால் வள்ளுவன் புத்தன் ஏசு  போன்றோர் போதித்த அன்றே அராஜகங்கள் அழிந்திருக்க வேண்டும். சட்டங்களாலும் தண்டனைகளாலும் முடியும் என்றால் சிறைகள் எல்லாம் காலியாக அல்லவா இருக்க வேண்டும். இரண்டும் கலந்த கலவை தேவைப்படுகிறது . எது எவ்வளவு சதவீதம் என்பதுதான் புரியாத புதிர்

(இந்த மாதிரி எழுதினா யார் படிப்பாங்கன்னு கேக்கப் படாது )

******************************************************************************************

ரசித்தது 

மூங்கில் சிற்பம் 

கலைஞன்டா!

**************************************************************************************************************************
முந்தைய பெட்டிக்கடை சரக்குகள் 



பெட்டிக்கடை9-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?




20 கருத்துகள்:

  1. முரளீ! பெட்டிக்கடை சரக்கு அத்தனையும் கூடச்சுடச் சுவைத்தேன். அத்தனையும் அருமை அய்யா.. எத்தனை வெரைட்டியான ரசிகர், கலைஞர், மனிதர் நீங்கள் என்பதைக் கவனித்து உங்கள் ரசிகனானேன். சூப்பர் சிங்கரைப் பற்றிய கருத்து வேறுபாடுகளை நானும் எழுதியிருக்கிறேன். நீங்கள் இணைப்புடன் கூடுதல் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். வைக்கோ எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரேன்னு சொன்னதும் அழகு. மூங்கில் காற்று முரளியை மூங்கில் சிற்பம் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை, எங்களையும் கவரந்தது! அடுத்த பெட்டிக்கடை சரக்கு எப்போ வரும்? இப்பவே முன்பதிவு செய்துவிட விரும்புகிறேன். த.ம.1

    பதிலளிநீக்கு
  2. பெட்டிக் கடைப் பேச்சு , வெட்டிப்பேச்சாக இல்லாமல் நல்ல சரக்கோடு பேசியதை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  3. பல்சுவைக்கதம்பம் பெட்டிக்கடை.

    பதிலளிநீக்கு
  4. அற்புதமான பதிவு. அனைத்தையும் ரசித்துப் படித்தேன்.
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. பெட்டிக்கடை சரக்கு அனைத்தும் பூக்கடை போல மணத்தது நண்பரே அருமை வாழ்த்துகள் மூங்கில் சிற்பம் என்னிடம் ஒரு பதிவுக்காக வைத்திருக்கின்றேன் நண்பரே..
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  6. பெட்டிக்கடையில் திரு சுந்தர் அவர்கள் சூப்பர் சிங்கர் பற்றி சொன்ன கருத்தை இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மூங்கில் சிற்பம் (சிற்பம் என்று சொல்வது சரிதானா?) மிக அழகு.

    பதிலளிநீக்கு
  8. அனைத்துமே இரசிக்கும்படி இருந்தன.

    முரளி எனும் முக நூல் அன்பர் எழுதிய கவிதை...
    அவல நிதர்சனம்!!!

    பதிலளிநீக்கு
  9. பல்சுவைக் கதம்பம். சில ஆழமாக இருந்தன. அனைத்தையும் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பெட்டிக்கடையில் உள்ள சரக்குகள் அனைத்தும் தரமான சரக்குகளாக இருக்குகின்றன... பெட்டிக்கடை வைச்சே இந்த அளவு கலக்குறீங்கனா சூப்பர்மார்க்கெட் போல வைச்சிருந்தா இங்கிருக்கும் பதிவர்கள் எல்லாம் மூட்டையை கட்டிக்கிட்டு போகவேண்டியதுதான் போல இருக்கிறது பாராட்டுக்கள் முரளி

    பதிலளிநீக்கு
  11. //நான் கவனித்தவரை இணையத்தில் இளைஞர்களை விட சில மூத்தவர்களின் எழுத்தில் வெளிப்படை தன்மை அதிகம் காணப்படுகிறது. அவர்கள் என்ன நினைப்பார்களோ இவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ணாமல் மனதில் பட்டதை அப்படியே பிரதிபலிப்பார்கள்.///

    நீங்கள் எந்த அளவிற்கு கவனமாக பதிவுகளை படிக்கிறீர்கள் என்பதை இந்த கருத்து தெளிவாக விளக்குகிறது

    பதிலளிநீக்கு
  12. பல்சுவையில் சுவாரஸ்யமான தொகுப்பு. வைகோ பற்றி நீங்கள் சொல்லி இருப்பதுதான் என் கருத்தும்
    ...

    பதிலளிநீக்கு
  13. வைகோ மிகவும் சரியே! அவரது அந்த திருவாசகம் ---பேசிய பேச்சு மொழி திரு வாசகமே!!

    சூப்பர் சிங்கர் கொஞ்ச நாள் நிறுத்தி வைப்பது நல்லதே என்பதுதான் என் கருத்தும். மற்றபடி பார்க்காததால் தெரியவில்லை...

    இளைஞர்கள்ம் வயதானவர்கள் நடுத்தரவயதுக்காரர்களின் பேச்சு, எழுத்து பற்றிய உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். வயதாக வயதாக மனம் முதிர்ச்சி ஏற்படும், அதனால் எல்லாம் அடங்கும் அப்படி ஆனால்தான் நாம் வளர்கின்றோம் என்பதற்கான அடையாளங்கள் போய் வயதாகும் போது பிறழ்தல்தான் நடக்கின்றது...இவை நமக்கு நல்ல உதாரணங்கள் வயதாகும் போது எபப்டிப் பேசக் கூடாது என்பதற்கு.

    மூங்கில் சிற்பம் அருமை என்றால் விவசாயியின் வரிகள் நச். குத்திக் கீறுகின்றது. அருமைஅயன வரிகள்..

    பெட்டிக்கடை செம

    கீதா

    பதிலளிநீக்கு
  14. முக நூலில் எழுதியதையே வலைத் தளத்திலும் இடும் காரணம் அதிக வாசகர்களை ஈர்க்கவா அல்லது சீரியஸ் வாசகர்களை ஈர்க்கவா. வயதாகும் போது வெளிப்படையாகக் கருத்துக் கூறுவது விரும்பவில்லையா பிறர் மனம் நோகுமோ என்று உண்மைகளை ஒளித்து வைக்க வேண்டுமா பதிவை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ அளவுக்கு எனது முக நூல் பதிவுகள் அதிகப் பேரை சென்றடைவதில்லை. இந்தப் பதிவு ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நாளில் பார்த்திருக்கிறார்கள் பொதுவாக வலைப் பதிவில் பதிவிட்டவற்றை முகநூலில் பகிர்வதை வழக்கமாக வைத்திருந்தேன். முதல் முறையாக முக நூலில் இருந்து வலைப் பதிவில் பகிர்ந்திருக்கிறேன். முகநூல் பதிவுகள் குறுந்தகவல் போல இருப்பதால் அவற்றை தனியாக ஒரு பதிவாக வலைப்பூவில் வெளியிடாமல் நான்கைந்து பதிவுகளை சேர்த்து வெளியிடுகிறேன்.

      நீக்கு
  15. அவரது கொள்கைகளுக்கு எதிரான தேசிய தலைவர்கள் கூட நேசிக்கும் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி, உலக அரசியல் முதல் இலக்கியம் வரை அறிந்த பேச்சாளர், ஊழல் கறை படியாத மனிதர் என்பது போன்ற எத்தனையோ சிறப்புகளை கொண்டவர் சறுக்கியது ஏனோ ?!!!

    தேர்தல் பற்றியது கிறுக்கல் அல்ல... சாசனம் !

    பெட்டிக்கடையின் அத்தனை சரக்குகளும் நயம் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  16. //மனிதன் மிருகத் தனமாக நடந்துகொள்ளும் போதெல்லாம் சொல்லும் வார்த்தை 'நானும் மனிதன்தானே!'

    நிஜமாவா சொல்றீங்க?!

    பதிலளிநீக்கு
  17. நேரம் எடுத்துக் கொண்டு வைகோவின் உரையைக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அப்படி என்ன பேசினார் வைகோ? அதற்கும் இணைப்பு இருந்தால் கொடுங்களேன். திருவாசக உரையை விட ஆர்வத்தைக் கிளப்பி விட்டதே?!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895