என்னை கவனிப்பவர்கள்

மன்னிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜூலை, 2012

கபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா?

     வணக்கம். இந்தியாவின்  தென்பகுதியான தமிழகத்தின்  வசிக்கும் சாதாரண  கிரிக்கெட் ரசிகர்களில் ஓருவனாகிய நான் எழுதும் மடல் .
   கிரிக்கெட்டில் வல்லமையோ புள்ளி விவரங்களில் புலமையோ இல்லாத என்னைப் போன்ற சராசரி ரசிகர்கள்கூட  சமீபத்தில் பத்திரிகையில் படித்த செய்தி கண்டு வேதனை அடைந்தோம்.
    கபில்தேவை பொது மன்னிப்பு கேட்க வைப்பதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களாமே! .மன்னிப்பு கேட்டால் ஒரு கோடி ரூபாய், பென்ஷன், மற்றும் இதர சலுகைகள் கிடைக்குமாம்.
     நன்றாக இருக்கிறது. கபில்தேவுக்கு இழைக்கப்பட்ட அநீதி, புறக்கணிப்பு, அவமதிப்பு  இவற்றிற்கு பி.சி.சி.ஐ அல்லவா அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்?.
     பொதுமன்னிப்பு கோரும் அளவிற்கு அவர் செய்த குற்றம்தான் என்ன?
     இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது அந்த மாவீரன்தானே? அவர் உலகக் கோப்பையை வென்று தந்த பிறகுதானே உலகின் கிரிக்கெட் வல்லரசாகத் நாம் திகழ முடிந்தது!.மற்ற நாடுகள் இந்திய கிரிக்கெட்டை எள்ளி நகையாடிய வேளையில் எதிர் பாராத வகையில் உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு மிகப் பெரிய கௌரவத்தை பெற்றுத் தந்தது கபில்தேவ்தானே!

    ஆமை வேகத்தில் பந்து  வீசுபவர்களை பார்த்து பழக்கப்பட்ட நாம் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வாய் பிளந்து பார்த்துக்கொண்டு இப்படி நமக்கு கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்  இந்தியத் துணைக் கண்டத்தில் புயலாய் நுழைந்த வேகப் பந்து வீச்சாளரல்லவா அவர்? வேகமாக ஓடி வந்து அழகாக எகிறி குதித்து பந்து வீசி எதிரணியைத் திணறச் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எப்படி நினைவில்லாமல் போனது?அவரது பந்து வீச்சு அசைவுக்கு மயங்காதவர்கள்  யாரேனும் உண்டா?
      இந்திய வேகப் பந்து வீச்சும் எதிரணியை மிரளச் செய்யும் என்பதை முதலில் உணர்த்தியவர் அவர்தானே? இன்று வரை அவருக்கு ஈடான வேகப் பந்து வீச்சாளரை உங்களால் உருவாக்க முடியவில்லையே!
      அப்போதெல்லாம் டெஸ்ட் பந்தயங்களில் நமது முன்னணி வீரர்கள்கூட 6ம், 4ம் அடிப்பது அரிதாக அல்லவா இருக்கும்? ஆறாவது விக்கட்டுக்கு மேல் களத்தில்  புயல் போல் நுழைந்து வான வேடிக்கை நிகழ்த்தி ஆறும் நான்கும் அடித்து ரசிகர்களை  பரவசப்படுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை  என்றாலும் கேள்விப் பட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியாதா என்ன?
      இத்தனைக்கும்  மேலாக 1983 உலகக் கோப்பையில்  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி உறுதி என்ற நிலையில் சூறாவளி ஆட்டம் அடி  175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததை எந்த  கிரிக்கெட் ரசிகனாலும் மறக்க முடியுமா? அந்த  ஆட்டம்தானே உலகக் கோப்பையை நம் வசமாக்க வாய்ப்பளித்தது.
   என்றாவது அவர் சுயநலமாக விளையாடி இருக்கிறாரா?சொந்த சாதனைக்காக அணியின் வெற்றியை விட்டுக் கொடுத்திருக்கிறாரா? ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிராறாரா? இருக்கிறவரை தூய்மையாகத்தானே இருந்திருக்கிறார் 
    சாதரண நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர்களும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று இளைஞர்களுக்கு  நம்பிக்கை ஏற்பட்டது இவர் வரவுக்குப் பின்தானே!
     ரிச்சர்ட் ஹார்ட்லி யின் சாதனை முறியடித்தது மட்டுமில்லாமல் 
434 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கெட் எடுத்தவர்  என்ற சாதனையை நீண்ட  நாட்கள் தக்கவைத்துக் கொண்ட தன்னிகரற்ற ஆட்டக்காரரை மன்னிப்பு கேட்கச் சொல்கிறீர்களே! இது நியாயமா?
 என்றாவது அவருக்கு உரிய மரியாதை அளித்திருக்கிரீர்களா?
   நுனி நாக்கு ஆங்கிலம் பேசி போர்டு உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு வாரியத்தின் ஏதேனும் ஒரு பதவியை பெறத்  தெரியாதவராக இருந்ததும்  அவர் செய்த குற்றமோ?
    அவரது ஒய்வுக்குப் பின் உங்களில் ஒருவருக்குக் கூட அவருடைய திறமையை இந்திய கிரிக்கெட் எதிர்காலத்திற்கு பயன்படுத்த தோன்றவில்லையா? என்ன விந்தை இது?

   கிரிக்கெட்டை வளர்க்க நீங்கள் எந்த முயற்சியும் செய்யாத நிலையில் கிரிக்கட்டை வளர்க்கவும் புதிய திறமை மிக்க வீரர்களை அடையாளம் காணவும் ICL என்ற அமைப்பை உருவாக்கியதுதானே அவர் மீது நீங்கள் சுமத்தும் குற்றம்?
    பி.சி.சி.ஐ க்குப் போட்டியாக ICL வந்துவிடுமோ என்று எண்ணிதானே அப்போட்டிக்கு தடை விதித்தீர்கள்?.அதில் பங்கேற்றால் தேசிய அணியில் விளையாட இடம் கிடைக்காது   என்று வீரர்களை மிரட்டினீர்கள்.  ICL ஐ பார்த்துத்தானே IPL உருவானது?  விளையாட்டை  வியாபாரம் செய்து கோடிகளில் இன்று குளித்துக் கொண்டிருப்பதெல்லாம் அவரது எண்ணத்தின் விளைவுதானே!அந்த நன்றியை கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?
  
     இது நாள் அவரை ஓரம் கட்டிவிட்டு இன்று மன்னிப்பு கேளுங்கள் பணமும் சலுகைகளும் தருகிறோம் என்று மன்றாடிக் கொண்டிருக்கிறீர்களே? இது எதற்காக? உங்கள் வற்புறுத்தலால் அவர் மன்னிப்பு ஏதும் கேட்டுவிடக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.

   உண்மையாகவே அவரது திறமையும் அனுபவமும் இந்தியக் கிரிக்கெட்டுக்குத் தேவை என்று நினைத்தால் நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி மன்னிப்பு கேட்க மனம்  இல்லை என்றால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் அந்த சாதனை வீரனை வரவேற்று உரிய மரியாதை அளியுங்கள். ரசிகர்களாகிய நாங்கள் உங்களை மன்னிக்கிறோம்.

நன்றி !


இப்படிக்கு
              
******************************* 
இதையும் படியுங்க! 

திங்கள், 30 ஜனவரி, 2012

படிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய சம்பவம்


       இதோ இந்த படத்தில் உள்ள பெண்ணின் பெயர் ஷ்ரவாணி. வயது 17. இவரைப் பற்றி வெளியான செய்திதான். நெஞ்சை அதிர வைத்தது. "கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!" என்று அவ்வை சொன்னது இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் அதை செய்து காட்டிவிட்டார் இந்தப் பெண். ஆம். ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கான பணம் சேர்ப்பதற்காக கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
      ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் நரசிம்மன்னா என்பவரின் மகள்தான் ஷ்ரவாணி. இதய நோயாளியான நரசிம்மன்னா தன் இளைய மகளான ஷ்ரவாணியை +2 விற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. ஷ்ராவாணி ஆசிரியையாக விரும்பினார். +2 வில்  அவர் எடுத்த மதிப்பெண்கள் 752 / 1000. ஏழ்மை காரணமாக தந்தையால் தன்னை தொடர்ந்து படிக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்த ஷ்ரவாணி எப்படியாவது தனது கனவான ஆசிரியர் பயிற்சியில்  சேர பிச்சை எடுக்கவும்   துணிந்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்தவராம் ஷ்ராவாணி. அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமை அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்ததாம்.
       அதே மாவட்டத்தை சேர்ந்த ஜங்கலப்பா என்பவரின் உதவியுடன் ஆலப்புழாவிற்கு வந்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவிற்கு  கட்டிடத் தொழிலாளியாக இவரது தந்தை வந்திருக்கிறார், அவருடன் ஷ்ரவாணியும் உடன் வந்திருக்கிறார்.

    ஒன்பது நாட்களாக பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஷ்ரவாணி ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் சம்பாதித்ததாகவும் தற்போது 2834 ரூபாய் பிச்சையின் மூலம் சேர்த்திருப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கு மொத்தம் 24000 ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
       ஓரிரு முறை மட்டுமே தன்னை சந்தித்த ஜங்கலப்பா தனக்கு எந்தவித கமிஷனும் பெற்றுக்கொள்ளாமல் உதவியதாகவும், தங்குமிடத்திற்கு ஒரு நாளைக்கு பத்து ரூபாய் மட்டும் தந்ததாகவும் தெரிவித்தார்.
         ஆலப்புழாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஷ்ரவாணியை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி மீட்டு மகிலாமன்றம் அமைப்பிடம் ஒப்படைத்தது. பின்னர் அவர் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
         பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ஷ்ரவாணி  படிப்பதற்கு நிதி உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். எப்படியோ நல்லபடியாக ஊர் சேர்ந்து அவரது கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
       இதில் நெஞ்சை உறுத்துகிற விஷயம் என்னவென்றால் சுதந்திரம்  பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏழைகள் கல்வி பெற எத்தனை போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.? ஒருவேளை அந்தப் பெண் சமூக விரோத கும்பலிடம் சிக்கி இருந்தால் என்னாவது? எத்தனையோ திட்டங்கள் இருக்கிறதாகச் சொல்கிறார்கள்? ஆனால் இந்தப் பெண்ணுக்கு அவை என்ன உதவி செய்தது? இதற்கு காரணம் அரசியவாதிகளா? சமூகமா? ஒட்டுக்கேட்க ஓடிவரும் அரசியல் வாதிகள் எங்கே போனார்கள்? தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் பயனில்லாத வெட்டிப் போராட்டங்களை நடத்துவதற்குத்தானே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது?.
       ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பணம் சேர்த்து படிப்பை தொடரலாம் என்று அவனால் முடிந்த அவனுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறானே? ஆனால் நாம் என்ன செய்தோம்? சுற்றி இருப்பவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை வாய் மூடி மௌனிகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டியவர்களே.
     அம்மா ஷ்ராவாணி! மனசாட்சி உள்ளவர்கள் சார்பாகக் கண்ணீருடன் கேட்கிறேன். எங்களை மன்னிப்பாயா?
************************************************************
இதையும் படியுங்க!