என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 25 மே, 2014

புதுக்கோட்டையில்பதிவர் பயிற்சி-புது முயற்சி

   
    அரசியல்,எழுத்து என்று எந்த வகை பிரபலங்களாக இருந்தாலும் இணையத்தை தவிர்க்க இயலாத சூழ்நிலை இன்று உள்ளது. அதனால் அரசியல் வாதிகள்  எழுத்தாளர்கள் இணையத்தின் மூலமாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். கெளரவத்திற்காகவேனும் இணையதளமோ முகநூல் பக்கங்களை வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. பத்திரிகைகளும் வலைப்பூ  முகநூல்,டுவிட்டர் பக்கங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன.
     
       லியோனி பட்டிமன்றக் குழுவின் ஆஸ்தான பேச்சாளர்களில் ஒருவர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் . ஏராளமான  கதை கவிதை  கட்டுரை என்று முன்னணி பத்திரிகைகளில் எழுதி வருபவர். புதுக்கோட்டையில்வசித்து வரும் இவரை இணையம் தன் பக்கம் ஈர்த்துவிட்டது.  பட்டிமன்றங்களில் முழங்கிய இவர் இணைய வெளியிலும் " வளரும் கவிதை" எனற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். கடந்த பதிவர் சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

   இணையத்தில் தமிழ்ப் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதும்  எழுத்தாற்றல் மிக்க பலரையும் வலைப்பூக்களில் எழுத  ஊக்குவிக்க வேண்டும் என்பதும் இவரது விருப்பம்.இப்பகுதியில் திறமையான எழுத்தாளர்கள் பலர் இருகிறார்கள். அவர்களை வலையில் எழுதவைக்கவேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் புதுக்கோட்டை பகுதி ஆசிரியர்களை அழைத்து வலைப்பூ தொடங்கி எழுத ஊக்குவிக்கும் வகையில்  நன்கு அறிந்தவர்களைக் கொண்டு பட்டறை ஒன்றை நடத்தினார். அப்போது பதிவெழுத தொடங்கிய சிலர் தொடர்ந்து எழுதி வருவது பாராட்டத் தக்கது. அரும்புகள் மலரட்டும் பாண்டியன் இன்று தமிழ்மணத்தின் முதல் 20 தர வரிசைக்குள் இடம் பிடித்து விட்டார்

   முதல் பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக  இரண்டாவது முறையாக பயிற்சியை நடத்த திட்டமிட்டு  வெற்றிகரமாக நடத்தியும் காட்டி விட்டார் கவிஞர் முத்து நிலவன்.  புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரையும் இணையத்துக்குள் இழுத்து விட வேண்டும் என்ற அவரது தன்னலமற்ற செயல்பாடுகள் ஆச்சர்யத்தை அளித்தன. இணையத்துடன் கூடிய கணினி வசதியுடன் உள்ள இடத்தைப் பிடித்தது முதல் அத்தனை ஏற்பாடுகளும் அவரது தலைமையில் சிறப்பாக இருந்தன.  17.05.2014 மற்றும் 18.05.2014 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது இப்பயிற்சிக்கு வந்து ஆலோசனைகளையும் கூறவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.(மனசாட்சி:  உனக்கு  என்ன தெரியும். உங்களை கூப்பிட்டது ஆச்சர்யம்தான். ஒரு வேளை  எப்படி எழுதக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்குமோ?.)

    நானும் வருவதாக சொல்லி இருந்தேன் ஆனால் எதிர்பாராஅலுவல் காரணமாக முன்பதிவு செய்து வைத்திருந்தும் புறப்பட முடியவில்லை சனிக்கிழமை இரவு புறப்பட்டேன்.புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  முத்துநிலவன் அவர்கள்  பாண்டியன் மற்றும் கஸ்தூரி ரங்கன் ஆகியோருடன் தயாராக இருந்து என்னை அழைத்து சென்றனர்.
பின்னூட்டப் புயல், வலையுலக மந்திரவாதி திண்டுக்கல்  தனபாலன் வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். 
    இதற்குள் பெரிய மீசையுடன் கம்பீரமாக வந்து நின்றார் கரந்தை ஜெயகுமார். ஏற்கனவே வலைப்படத்தில் உள்ள தோற்றத்திலேயே இருந்ததால் அறிமுகம் தேவைப் படவில்லை. அற்புதமான எழுத்துகளுக்கு சொந்தக்காரரான அவர்  ராமானுசம் பற்றிய தொடர்பதிவால்  என்னை வெகுவாகக் கவர்ந்தவர். 

    முதல் நாள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பயிற்சியை  தொடங்கி வைத்தார் என்பதை அறிய முடிந்தது. இப்பயற்சியில் கலந்து கொண்ட பலர் தொடக்க நிலையில் உள்ளவர்கள் . முதல் நாளில் மின்னஞ்சல் உருவாக்குவது முதல் வலைப்பூ தொடங்குவது  எப்படி எழுதுவது,தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த மென்பொருள்கள் பயன்படுத்தலாம்   என்பதோடு என்னவெல்லாம் எழுதலாம் எனது பற்றியும்   வல்லுனர்கள் பயிற்சி அளித்ததாக கூறினர் . பங்கு பெற்றவர்கள்  அங்கேயே வலைப்  பூவை தொடங்கி விட்டனர் .

     முதல் நாளில் சொன்னது போக நாம்  என்ன சொல்ல முடியும்ஐயம் மனதுக்குள் இருந்து . நமது அனுபவங்களை மட்டும் சொல்வோம் என்று முடிவு செய்து கொண்டேன்.
கவிஞர் ஐயா வீட்டில் காலை உணவருந்தி விட்டு பயிற்சி நடக்கும் இடமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றோம் . தனபாலனும் வந்து விட்டார்.

    முதல் பகுதியாக முதன்மைக் கல்வி அலுவலர் "நட்ட கல்லும் பேசும்" என்ற தலைப்பில் புதுக் கோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் வழியாக பயன்படுத்தப்பட்ட   ராஜராஜன் பெருவழி பற்றி தான் செய்த ஆய்வை பவர் பாயிண்ட்டி ல்  அற்புதமாக விளக்கினார் . கல்வெட்டுக்கள் நினைவு சின்னங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை  அளித்ததோடு அந்த வழியை அடையாளம் கண்டு பயணம் செய்தும் பார்த்ததும்  அந்த அனுபவத்தை விவரித்ததும் குறிப்பிடத் தக்கது.  முதன்மைக் கல்வி அலுவலர் பணியில் ஒய்வு என்பதே மிகக் குறைவு. 24 மணி மேரமும் பணியைத் தவிர பிறவற்றை நினைத்துப் பார்ப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்று. இந்நிலையில் அவரது ஆர்வம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
      பட்டறைக்கு தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருந்தது.

    அதற்குள் உணவு இடைவேளை வந்து விட்டது. பிற்பகலில் நீங்கள் பாதியும் தனபாலன் பாதியும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப் பட்டாலும் எதிர்பாரா விதமாக விக்கி பீடியா பங்கேற்பாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ் பெரியார் விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குமேல் விளக்கமளித்தார் . ஒரு தகவல் களஞ்சியமாக தமிழ் விக்கி பீடியாவை உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எழுதியதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்றும் கூறினார்.விக்கி பீடியாவை  பலரும் ஆதாரங்களாகக்  கொண்டு அதுதான்  சரி என்று கூறும் நிலையில் தவறான  கருத்துக்கள்  அல்லது தான் விரும்பும் கருத்துக்களை  பதிவு செய்ய முடியும் என்பதும் மாற்றுக் கருத்துடையவர் அதை திருத்த முடியும் என்பதும் விக்கி பீடியாவின் நம்பகத் தன்மை  சற்று ஐயத்துக்கு இடமாக்கியது  போல் தோன்றியது . மேலும் சில குறைபாடுகளும் உள்ளதையும் கூறினார்.தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தால் அதன் நிர்வாகக் குழுவிலும் சேர்க்கப்படுவார்களாம்.

   தேநீர் இடைவேளைக்குப் பிறகு திண்டுக்கல் தனபாலன் வலைப் பூ பற்றிய பல தகவல்களை தனக்கே உரிய பாணியில் விவரித்தார். HTML மற்றும் ஜாவா நிரல்களை எங்கு எப்போது பயன்படுத்துவது அதனால் என்ன பயன் என்பதையும் விளக்கினார் . பதிவு எழுதுவதற்கு HTML MODE யே  தனபாலன் பயன்படுத்துகிறார். தான் எப்படி வேகமாகப் பின்னூட்டம்  இடுகிறார் என்பதன் ரகசியத்தை சொன்னார்.
மென்பொருள் படித்தவர்கள்  போல   நிரல்கள் எழுதும் ஆற்றலை தனபாலன் பெற்றிருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. ஏற்கனவே அடிப்படைகளை அறிந்தவர்கள் இவரது ஆலோசனைகளைப் பின்பற்றினால் வலைபதிவை, வடிவமைப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும்.

    நிறைவடையும் நிலையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது . தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு வலைப்பூ  தொடர்பான அடிப்படை  செயல்பாடுகளை எனக்கு தெரிந்தவரை எடுத்துக் கூறினேன். அனைவரும் அதிகமாக எதிர்பார்த்தது பதிவுகளை திரட்டிகளில் இணைப்பது பற்றி . ஆனால் நேரமின்மை காரணமாக  விரிவாக கூற முடியவில்லை.

   திண்டுக்கல் ஏற்கனவே தனபாலன் வலைப்பூ  எழுதும் பலருக்கு அவர்கள் பதிவுகளை திரட்டிகளில் இணைத்து உதவி  இருக்கிறார்.நானும் சிலருக்கு  வலைப்பூ வடிவமைக்கவும்  திரட்டிகளில்  இணைக்கவும் உதவி செய்திருக்கிறேன். இப்போதும் தேவைப்படின் உதவத் தயாராக இருக்கிறோம்.

   விடுமுறை தினமாக இருந்த போதிலும் சுமார் 40 பேருக்கு மேல் வந்திருந்து மாலை 5.30 மணி வரை இருந்தது அவர்கள் ஆர்வத்தை காட்டுகிறது. இதில் பெண்களும் கலந்து கொண்டு இணையத்தில் எழுத முன் வந்தது உண்மையில் பாராட்டுக் குரியது.

   நிகழ்வுகள் அனைத்தையும் அவ்வப்போது சுற்றி சுற்றி வந்து சுறுசுறுப்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் மூத்த பதிவர் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல. "எனது எண்ணங்கள்" தமிழ் இளங்கோ ஐயாதான் அவர். அவரது புகைப்பட  ஆர்வத்தை பதிவுகள் மூலம் அறிந்திருந்த போதிலும் நேரில் அதை உறுதி செய்தார் .
சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப் பதிவில் எழுதி வரும் முனைவர் ஜம்புலிங்கம்  போன்ற அறிஞர் பெருமக்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது புதுக்கோட்டை பயிற்சி

இடை வேளையின்போதும் ஆலோசனை வழங்கும் தனபாலன்
புகைப்படம்: தமிழ் இளங்கோ  


   அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து தான் பெற்ற இன்பம் பெருக அனைவரும் பெருக இவ்வையகம் என்ற நோக்குடன் செயல்பட்டு பட்டறையை வெற்றிகரமாக நடத்திய பெருமை முத்துநிலவன்  அவர்களையே சாரும். அவருடன் உடன் இருந்து பணியாற்றிய வர்களுக்கும் , இடம் தந்து இணைய இணைப்புடன் கணினியும் தந்து மதிய  உணவும் தந்து  உதவிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா  பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் .



********************************************************************************


கொசுறு: 

எல்லா பதிவர் சந்திப்பிலும் நடக்கிற சிறப்பு நிகழ்ச்சி, கற்றது, புகைப்படங்கள். பதிவர் பட்டறைனு எல்லாரும் எழுதுறாங்க. இது தவிர "பிஹைண்ட் த சீன்" நடப்பதை யாருமே எழுதுவதில்லை! நீங்க எதுவுமே சொல்லாவிட்டாலும், சந்திப்பின்போது யார் யாரு தலையெல்லாம் யாரு யாரிடம் உருளும் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

நன்றி:வருண்

*********************************************************************************
 

24 கருத்துகள்:

  1. புதுக்கோட்டையில் தங்களைச் சந்தித்தது, பசுமையான நினைவுகளாய் நெஞ்சில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது ஐயா.
    இது போன்ற சந்திப்புகள் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம் ஐயா
    தங்களின் அன்பும் நட்பும் கிடைத்ததை எண்ணிப் பெருமைப் படுகிறேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா
    பயிற்சியில் தங்களிடம் பழகிய தருணங்கள் இன்னும் விழிவிட்டு அகலவில்லை ஐயா. முத்துநிலவன் ஐயா அவர்களின் வருகையை ஏற்று வெகுதொலைவில் இருந்து வருகை தந்து பயிற்சியைச் சிறப்பித்தமைக்கு முதலில் நன்றிகள். தாங்கள் வருகை தந்ததிலிருந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக தொகுத்து காட்சியாக்கி விட்டீர்கள். தான் கற்றதை/அறிந்த விசயங்களை மற்றவர்களுக்கு பயன்படும் வண்ணம் உதவ தயாராக இருக்கும் தங்கள் நற்குணத்திற்கு நன்றிகள். இது போன்ற சந்திப்புகள் நம்மை இன்னும் நெருக்கமாக்கும். நேசங்கள் வலுப்படும். மீண்டும் வேறொரு பயிற்சியில் சந்திப்போம். எனது திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும். முறையாக அழைக்கிறேன். அன்று மீண்டும் நம் வலைச்சொந்தங்களோடு இணைவோம். நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  3. அனுபவங்கள் மனிதனை செம்மைப் படுத்தும் வாழ்த்துக்கள் திரைக்குப் பின் தலைகள் உருளும் என்று அறிவதும் அனுபவமே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. புதுக்கோட்டையில் நடைபெற்ற பதிவர் பயிற்சி குறித்து சொல்லும்போது ஆசிரியரும் கவிஞரும் வலைப்பதிவரும் ஆன நா.முத்துநிலவன் அவர்களின் “புது முயற்சி” என்று குறிப்பிட்டது சரிதான். அவரைப் போல மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது குழுவினர் இது மாதிரியான வலைப் பதிவ பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

    அந்த பதிவர் சந்திப்பின் போது பதிவுகள் சம்பந்தமாக உங்களிடமும் திண்டுக்கல் தனபாலனிடமும் சில சந்தேகங்களை கேட்பதாக இருந்தேன். உரையாட கால அவகாசமும் சந்தர்ப்பமும் அமையாமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, வலைச்சித்தர் எப்போது கேட்டாலும் சலிக்காமல் சந்தேகம் தீர்ப்பார். அவரது வலைப்பக்கத்திலும் எழுதிவருகிறார். அவரைத் திண்டுக்கல்லில் இருந்தும், முரளி அய்யாவை சென்னையிலிருந்தும் வர அழைத்தது வெறும் நட்பக்காக மட்டுமல்ல, அவர்களின் வலைஅனுபவத்தை மற்றவர்க்குத் தரத் தயங்காத பண்புக்காகவும் தான்! இவர்களால் நல்ல கணித்தமிழ் வளரும்.

      நீக்கு
  6. பயிற்சிப் பட்டறை புது நல்முயற்சி. தொடரட்டும்...
    நிழ்கவுகளை அழகாக தொகுத்தீர்கள். சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. முரளி,

    நல்ல முயற்சி!

    #//பட்டறைக்கு தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருந்தது.//

    இதான் ரொம்ப தொடர்பு உடையது, ஏன் எனில் பதிவுக்கு அவசியமானது "கண்டென்ட்" அதனை எப்படி பிடிப்பது ,உருவாக்குவது என்பதை இவ்வனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாமே?

    வலைப்பதிவை உருவாக்குவதோ, திரட்டியில் இணைப்பதோ "தன்னாலே" கற்றுக்கொள்ளக்கூட முடியும், எப்படி ஒரு கருத்தினை அறிந்து அதனை டெவெலப் செய்து கட்டுரையாக்குவது என்பது தான் செலஞ்சிங்கான விடயம்.


    #நல்ல கண்டென்ட் என்றால் என்னனு தெரியாததால் தான் பலபேரு சினிமா விமர்சனம், சூப்பர் சிங்கர், டீவி நிகழ்ச்சிகள் என எழுதி மொக்கை போடுறாங்க..

    ஆங்கிலத்தில் பலர் ,வரலாறு,இலக்கியம்,கலை என "தீவிரமான தளத்தில்" தகவல்ப்பூர்வமாக எழுதி இயங்குகிறார்கள், தமிழில் அப்படி முயற்சிக்க ஆள் இல்லை,அப்படியெ எழுதினாலும் படிக்க நம்ம அப்பாடக்கர்களுக்கு விருப்பம் இல்லை அவ்வ்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு பக்கம் நல்லா எழுதுகிற பதிவர்களெல்லாம் சில வருடங்களில் கடையை அடைத்துவிட்டு போயிக்கொண்டு இருக்காங்க, திரட்டிகளும் மறைந்துகொண்டும் புதியவர்களை வரவேற்காமல் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த ஒரு சூழலில் நல்லா எழுதத் தெரிந்தவர்களுக்கு வலையுலகில் காலெடுத்து வைக்க நீங்கள்எடுக்கும் இம்முயற்சி பாராட்டத்தக்கது.

    நாம் மறையும்போது (எல்லாரும் மறையத்தான் போறோம்) நம்மைவிட திறமையுள்ள நாலுபேருக்கு வழிகாட்டி, வழிநடத்தி, அவர்களை ஊக்குவித்து வளர்த்துவிட்டுப் போகணும். அதுதான் நாம் தமிழுக்கு செய்யும் சிறு தொண்டு. அதைத்தான் நீங்க செய்றீங்க. வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்ச்சியை பாராட்டுவோம் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நன்றி சகோ !அப்படியே எல்லாம் ஒப்புவித்து விட்டீர்கள். கண் முன்னே காட்சிகளாய் விரிந்தன. வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  11. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் "நட்ட கல்லும் பேசும்" பற்றிய விளக்கங்கள், அவரின் ஆர்வம் வியக்க வைத்தது...

    அன்று இன்னும் நேரம் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கம் இப்போது கூட உண்டு...

    முத்துநிலவன் ஐயா அடுத்த முறை காலையிலிருந்தே ஆரம்பிப்போம் என்று சொல்லி உள்ளார்... காத்திருக்கிறேன்(ப்போம்)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குத தேவையிருக்கிறது தனபாலன் அய்யா. கூட்டத்தில் கேட்க முடியல என்று வருந்துவோர், இன்னும் தெரிந்துகொள்ள ஆர்வப்படுவோர், வாய்ப்பை ஏற்படுத்துவோம். பத்துப்பேர், பத்துக்கணினி, நீங்கள் மட்டும் ஒருநாள். மற்றொருநாள் முரளி அய்யா எனத் திட்டமிடுவோம். தொடரட்டும் பணி. உங்களிருவரையும் வலையுலக இரட்டைப்புலவர்கள் என்றனர் நண்பர்கள்!

      நீக்கு
  12. நல்ல முயற்சி முரளிதரன். கவிஞர் முத்துநிலவன் ஐயாவினை பாராட்டுவோம்.

    17.05.2014 மற்றும் 18.10.2014 - இரண்டு நாட்கள் என்பதால் 05 * 2 = 10 ஆகிவிட்டதோ? :)

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா26 மே, 2014 அன்று PM 12:39

    எனக்கு இப்படி ஒரு வகுப்பு தேவையாக உள்ளது...
    என்ன செய்வது.....
    நன்றி...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  14. நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
    இந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
    உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
    நிகழ்வை நடத்தியோர்
    நிகழ்வின் பங்காளிகள் என
    எல்லோருக்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் முரளி அய்யா. சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு இதற்காகவே வந்து -கல்வித்துறையின் மாவட்ட அலுவலரான- உங்களின் நேரத்தை எங்களுக்காகச் செலவிட வந்ததே முதலில் வணங்குதற்கும் நன்றிக்கும் உரித்தானது. இரண்டாவது அப்படியிருந்தும் உங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் போன நேரநெருக்கடி பற்றியும், எங்கள் திட்டமிடுதலில் இன்னும் சரியாக இருந்திருக்கவேண்டும் என்பதுமே எங்கள் நண்பர்களின் கருத்தாக உள்ளது. மூன்றாவதாக உங்களின் சென்னைப் பயணத்தில் ஏற்பட்ட சிரமம் என்னை என்றும் மறக்கவியலாத வருத்ததத்தில் ஆழ்த்திவிட்டது. எல்லாவற்றையும் மீறி உங்களின் அன்பும் நேர்மையும் கலந்த இந்தப் பதிவை எங்கள் நெஞ்சில் எழுதிவிட்டீர்கள். பலகோடி நன்றிகள். இன்னும் திட்டமிடுவோம். இன்னும் சேர்ந்து உழைப்போம். அடுத்த முறை --நம் வலைச்சித்தர் டிடி சொன்னதுபோல-- முழுமையாக உங்களிருவரையும் பயன்படுத்த உறுதியேற்கிறோம். நன்றி (என் வலையில் இரண்டாம்நாள்பற்றி எழுத உட்கார முடியாத அளவிற்கு எனக்குச் சில நேர நெருக்கடிகள்-விரைவில் எழுதுவேன்) வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. மிக நல்ல முயற்சி! விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    முரளி (அண்ணா)

    நல்ல முயற்சி வரவேற்கா வேண்டியவை... எந்த வழிகளில் எமது மொழியை வளர்க்க முடியுமோ அந்த வழிகளில் வளர்கிறது அதில் ஒன்றுதான் தங்களின் பயிற்சிப்பட்டறை தலைமை தாங்கி நடத்திய முத்து நிலவன் ஐயா. மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்அனைவருக்கும் எனது நன்றிகள்.... இது சம்மந்தமான பதிவை பார்த்தவுடன் நானும் தங்களுக்கு பக்கத்தில் இல்லை என்ற எண்ணம் தோன்றியது.... கிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
    த.ம 7வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.பதிவிற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  19. மிகுந்த சிரமத்துடன் (சிட்டிங் சீட்) சென்னை அடைந்ததாக சொன்னார் அண்ணன் முத்துநிலவன்.
    எனக்கும் வருத்தம்தான்.
    இந்தியன் ரயில் இன்னொரு சோதனை...
    பதிவு மிக அருமை...
    வருகைக்கும் ஆதரவுக்கும் புதுகை பதிவர்களின் சார்பில் நன்றி..

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895