என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 25 மார்ச், 2018

சீதை ராமனை மன்னித்தாளா?

 

    எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் தன் வலைப் பக்கத்திற்காக    ஒரு சீதை ராமனை மன்னித்தாளா?  தலைப்பில்  கதை எழுதக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பினேன். அக்கதை அவர் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.   இன்று ஸ்ரீராம நவமி என்பதாலும் கூடுதலாக ஒரு பதிவாக இருக்கட்டும்  என்ற வகையிலும் என் வலைப் பக்கத்தில்  வெளியிடுகிறேன். ஸ்ரீராம் மன்னிப்பாராக!


சீதை ராமனை மன்னித்தாளா ?

      பட்டாபிஷேகம் முடிந்தது.அயோத்தி ஆனந்தத்தில் மூழ்கிக் திளைத்துக் கொண்டிருந்தது. .முடிசூட்டிகொண்ட ஸ்ரீராமபிரானுக்கு  பக்கத்தில்  சீதா பிராட்டியும்  அயோத்தி அரியணையில்  அமர்ந்த காட்சியைக் கண்ட அயோத்தி மக்கள் பரவச நிலையில் கிடந்தனர்  குறையிலா அழகு கொண்ட இருவரும் எவ்வளவு பொருத்தம் என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். தேவர்களைப் போல கண்ணை இமைக்காத சக்தி இருக்கக் கூடாதா என்று ஏங்கினர்..'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் விண்ணை நிறைத்தது.  சீதாப்பிராட்டியின் சௌந்தர  ரூபம் விவாகத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டது. அட! அந்த ராவணன் மயங்கியதில் தவறு ஏதுமில்லை என்றே பேசிக் கொண்டனர்.
   ரிஷிகள், ஆன்றோர் சான்றோர் சக தேசத்து மன்னர்கள்  வந்து  வாழ்த்திக் கொண்டிருந்தனர்.  அனைவரும்  மனமின்றிக்  கலைந்து சென்றனர் 
       அடுத்த நாள்  காலை அரண்மனை  நந்தவனத்தில்   வாயு மைந்தன்  மண்டியிட்டுக் கண்மூடி  நேற்றைய பட்டாபிஷேகக் காட்சியை  கண்ணாரக் கண்டு கொண்டிருந்தான். அவனது திருவாய் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தது .எந்த ருசிரா இராமா ஏமி ருசிரா ராமா என்று மனம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தது 

"ஆஞ்ச நேயா!" குரல் கேட்டு கண் திறந்தான் ஹனுமான்
எதிரே லட்சுமணன் நின்று கொண்டிருந்தான்.

" தாங்களா  என்னை அழைத்தீர்கள்?. தங்கள் திருமுகத்தில் ஏதோ குழப்பம் உள்ளதாக தெரிகிறதே. "

"ஆம் மாருதி. மனம் சஞ்சலமாக உள்ளது. என் சஞ்சலம் நீக்க இருவரால் மட்டுமே முடியும். ஒருவர்  சீதாப் பிராட்டியார். இன்னொருவர் நீ  சீதம்மையிடம் கேட்க என் தன்மானம் இடம் தரவில்லை .அப்படிக் கேட்பது எனது அண்ணாவுக்கு அவப் பெயராகி விடுமோ என்றும் அஞ்சினேன். அதனால் சொல்லின் செல்வனே! உன்னிடம் வந்தேன். "

    "என் நெஞ்சில் குடியிருக்கும் எம்பெருமானின் சாயலை ஒத்தவரே!தங்களின் ஐயத்தை நான் எப்படித் தீர்க்க முடியும். நான் சாதாரண ராமதாசன் தானே! என்னால் செய்ய முடிந்தது ஏதேனும் இருப்பின் ஆணையிட்டு சொல்லுங்கள் என் சிரம் கொடுத்தேனும் செய்ய சித்தமாய் இருக்கிறேன் "

       நேற்று பட்டாபிஷேகம் முடிந்ததும் நான்  மாறுவேடமிட்டு நகர்வலம் வந்தேன்.எங்கு நோக்கினும் மக்களின் பேச்சு சீதா,ராமரைப் பற்றியே இருந்தது.ராமபிரானின் மாண்பை  விட  என் அன்னைக்கு நிகரான  சீதாப் பிராட்டியின் பெருமை  பற்றியே இரவு  முழுவதும் பேசித்தீர்த்தனர்  அப்போது  ஒரு  பெண்மணி சொன்னதுதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது...."
     சற்று நிறுத்திய  லட்சுமணனை உற்று நோக்கிய ஆஞ்சநேயன், குறுக்கீடு ஏதும்  செய்யவில்லை.
       
    லட்சுமணன் தொடர்ந்தான்  "சொக்கத் தங்கமாகிய ஜானகியை தீக்குளிக்க வைத்து விட்டாரே தசரத மைந்தன்..எப்படிக் கோபம் கொள்ளாமல் சீதை ராமனை மன்னித்தாள் என்றார். ராமனின் செயல் அவ்வளவு எளிதில் மன்னிக்கக் கூடியதா? என்று அந்தப் பெண்மணி கேட்ட கேள்விதான் என் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது.

      யுத்தம் முடிந்து இராவணன் வீழ்ந்தான்.     அப்போது நீ, நான் எல்லோரும் அருகில் தானே  இருந்தோம். அசோக வனத்தில்  இருந்து  ஆவலோடு வந்த சீதா தேவியின் முகத்தைக் கூடப்பாராமல்   ராமன் சிந்திய  மொழிகள் எனக்கே கோபத்தை ஏற்படுத்தியது.  தன்னை நிருபிக்க என்னை அழைத்து விறகு கொண்டு வந்து தீமூட்ட ஆணையிட்டார் பிராட்டி. ஆனால்  அண்ணனோ கிஞ்சித்தும்  கருணை காட்டவில்லை. நான் மூட்டிய தீ அந்தக்  பதிவிரதையை ஒன்றும் செய்யவில்லை. ராமன் சீதையை ஏற்றுக் கொண்டு சொன்னது உனக்கு  இருக்கிறதா ?"
"நன்றாக நினைவுக்கிறது ஐயனே! நான் பரிட்சை வைத்தது எனக்காக அல்ல உன் புனிதத்தை உலகறியச் செய்யவே " என்றாரே கோதண்டராமன். சீதாப் பிராட்டியும் மகிழ்ச்சியோடு  ஒன்று  சேர்ந்ததை இப்பூவுலகமே அறியுமே!"

    "ஆம்!. ஆஞ்சநேயா! நானும் அண்ணன் மீது கொண்ட கோபத்தை மறந்து சமாதானம் ஆனேன்.ஆனால்  இப்போது அயோத்திப் பெண்மணி ஒருத்தி பேசியதைக் கேட்டதும் எனக்கு ஐயம் வந்துவிட்டது. பேரமைதி தவழும் பிரகாசமான  சீதாப் பிராட்டியின் முகம் அகத்தில் உள்ள கோபத்தை வெளிக்காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் என்றே அஞ்சுகிறேன். உண்மையில் என்அண்ணன்  ராமனை சீதா தேவியார் மன்னித்திருப்பாரா? நீதான்கூற வேண்டும்"
   .
  "ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின் அன்பிற்குரிய சகோதரரே! தாங்கள் அனைத்தும் உணர்ந்தவர். தங்களுக்கு எடுத்து சொல்லக் கூடிய அளவுக்கு என்னிடம் ஞானம் ஏதுமில்லை. ராமநாமம் தவிர வேறேதும் அறியாத  மூடன் நான். என்றாலும் சொல்கிறேன்.

   "இராவணன் கடத்திச் சென்ற சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கை சென்றேன்.அழகான அசோக வனத்தில் அவரைக் கண்டேன்.
. நானே தங்களை ராமனிடம் சேர்த்து விடுகிறேன். என் தோளில் அமருங்கள் என்றேன். அது என் ராமனுக்குப் பெருமை சேர்க்காது என்றார்
 அப்போது இராவணன் சொன்னதை என்னிடம் சொன்னார் ஜானகிதேவி 

    ."மாருதி! அந்த பாதகன் இராவணன் என்ன சொன்னான் தெரியுமா. அவன் மிகவும் நல்லவனாம். அவன் நல்லவனாக இருப்பதால்தால் என் சம்மதம் கேட்டு என்னை உரிமையாக்கிக் கொள்ள தன் நிலை இறங்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறானாம். ராமன் வந்து உன்னை மீட்டுச் செல்ல வாய்ப்பே இல்லை . என்னைக் கொன்ற பிறகே அது நடக்கும். அகில உலகத்தில் என்னை வெற்றி கொள்ள யாராலும் இயலாது என்று உனக்குத் தெரியாதா .மூடப் பெண்ணே! அப்படியே அவன் என்னை வென்று உன்னை மீட்டாலும் உன்னை மனமார ஏற்றுக் கொள்வான் என்றா நினைக்கிறாய்? .அன்னியர் தேசத்தில் கண்காணாது இருந்த உன்னை ஏற்றுக் கொள்ளும் உயர் குணம் எந்த மானிடனுக்கும்  இருக்காது. நீ வேண்டுமானால் பார்!." என்று சொன்னதை என்னிடம் சொன்னார்.
 ஆனால்  ஜானகியைக் கண்ட சந்தோஷத்தில் இது எனக்குப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.ஸ்ரீதேவியின் அம்சமான சீதாப் பிராட்டியின் கணையாழியை ஸ்ரீ ராமனிடம் கொண்டு சேர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியில்   இச் செய்தியை நான் ஸ்ரீ ராமபிரானிடம் தெரிவிக்கவில்லை .

      யுத்தம்  முடிந்து ராமச்சந்திர மூர்த்தி   சீதையை சந்தித்தபோது நெருப்பு வாத்தைகளை வீச,   தாங்களோ தீ மூட்டினீர் . அப்போது சீதாப் பிராட்டியார் என்னை பார்த்தார் . அந்தப் பார்வை என்னைக் கலங்க வைத்தது. ராவணன் சொன்னதை உன் இஷ்ட தெய்வம்   உண்மையாக்கி விட்டாரே! இதை நீ சொல்லவில்லையா     என்பது போல் இருந்தது. என் நாயகனுக்கு நான் எப்படி அறிவுரை சொல்ல முடியும். ஆனால் தீங்கு ஏதும் விளையாது என்று மட்டும் நம்பினேன். அப்படியே நடந்தது.ஆயினும்  இப்போது தங்களுக்கு  ஏற்பட்ட சந்தேகம் எனக்கு அப்போதே ஏற்பட்டது 

   ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை சீதையிடம் கோரினேன் . " தாயே! தங்களின் பொருள் பொதிந்த பார்வை என்னை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீராம பிரான் தங்களை சோதனைக்குள்ளாக்கியதை நானும் விரும்பவில்லை. மகா பதிவிரதையான தங்களின் கோபம் என் ஸ்ரீ ராமனை பாதித்துவிடக் கூடாது எனவே தாங்கள் என் இதய ராமனை மன்னித்தீரா என்பதை தெளிவிக்க வேண்டுகிறேன்" .

  அப்போது அவர் கூறினார்  "எல்லோரையும் மன்னிக்கும் தயாளகுணம் கொண்ட அவதார புருஷன் அல்லவா என் ஸ்ரீராமன். தன்னை வனவாசம் செய்யும் சூழ்நிலையை உருவக்கிய தசரதனை  மன்னித்தவர் அவர். பரதனுக்கு முடி சூட்ட விரும்பி ராமனைக்காட்டுக்கு அனுப்ப தசரதனை நிர்பந்தித்தத கைகேயியும் மன்னிக்கத் தயங்கவில்லை என் ராமன். அவளுக்கு துர்போதனை செய்த மந்தரையையும் சங்கடமின்றி  க்ஷமித்தவன் கோசல ராமன். அகலிகைக்கு  சாப விமோசனம்  தந்தவன் என் ராமன் . அவரது  தயாள குணமும் கருணையும் அன்பும்  பூலோகப் பிரசித்தி பெற்றவைதானே! எனக்கு பாதுப்பாக இருக்க வேண்டும்; எந்தக் காரணத்தை கொண்டு இவ்விடம் விட்டு செல்லலாகாது   என்று ஆணையை, என் நிந்தனையை பொறுக்காது வேறு வழியின்றி மீறி    என்னைத்   தனியாக விட்டுச் சென்ற லட்சுமணனையும் ராமன் மன்னித்தார்.  ஆனால் என் பிராண நாதர்  மன்னிக்கப்படும்  சூழ்நிலை ஏற்கனவே ஒரு முறை  உருவாகி விட்டதே.!

"பிராட்டியே என்ன சொல்கிறீர்கள்?

  "மாவீரன் வாலியை மறைந்து  நின்று கொன்றார் என்று நீ தானே சொன்னாய்.  யுத்த தர்மத்திற்கு எதிராக ராமன் நடந்து கொண்டதால் வாலியின் மன்னிப்பு ஸ்ரீ ராமனுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. இப்பொது என் கோபமும் வருத்தம் காரணமாக  இன்னொரு  பாவமும்   என்   ராமனை சூழ விடுவேனா? அது மட்டுமல்ல பகவான்
 ஸ்ரீராமனையே மன்னிக்கும் பேறு   கிட்டியது என்  பாக்கியம் அல்லவா? வேறு யாருக்கு இது வாய்க்கும்." என்று சீதாப் பிராட்டி சொன்னதை லட்சுமணனுக்கு கூறிய ஹனுமான் 

    "ஐயனே! ஐயம் வேண்டாம்! மேற்சொன்ன காரணங்களால்தால் "சீதை ராமனை மன்னித்தாள்"  என அமைதி கொள்வீர்!. 

  லட்சுமணன் சஞ்சலம் நீங்கி."அஞ்சனை மைந்தனே! நற்சொல் கூறினாய். என் தாய்க்கு நிகரான சீதா தேவியின் கோபம் அகத்துள் இருந்துவிடக் கூடாது என்றே அஞ்சினேன்.இப்போது தெளிந்தேன். ஜானகி தேவியாரின் நெஞ்சில் கோபம் இல்லை.  இனி ஸ்ரீராமனுக்கு அபவாதம் ஏற்படாது என நிம்மதி  கொள்வேன் " என்று உருகினான் 

"கருணா மூர்த்தியை தமையனாகக் கொண்டவனே! சீதாதேவி தாயார் ராமனை மன்னித்து விட்டார். ஆனால் ..."

"என்ன ஆனால்...." பதறினான் லட்சுமணன் 

"மன்னிப்பு கிடைக்க வேண்டியவர் இன்னொருவரும் உண்டு.""
"யார் அது? உனது சொல்லின் அர்த்தம் விளங்க வில்லையே. யார் அந்த அபாக்கிய சாலி? யார்,  யாரால் மன்னிக்கப் படவேண்டும் "

"ஸ்ரீராமன் தண்டகாருண்யம்  செல்லும்போது தாங்களும்  சீதா தேவியும் பிடிவாதமாகக் கூட சென்றீர்கள்.அதற்கு தாங்கள் அனுமதி பெற்றீர்களா"

"ஏன் இந்த சந்தேகம்? என் தந்தையிடமும்  ஸ்ரீராமனிடமும் அனுமதி பெற்றுத்தானே சென்றேன்!

"யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ அவரிடம் பெற்றாயா? அவர் எண்ணத்தை அறிந்தாயா? நீங்கள் தண்டகாருண்யம் சென்றீர்கள் ஆனால் 14 ஆண்டுகாலம்  தண்டனை இன்னொருவருக்கு அளித்ததை உணர்ந்தீர்களா? அதற்கு தங்களுக்கு  உரிமை இருக்கிறதா?

"மாருதி நீ என்ன சொல்கிறாய்....."
"நான் சொல்ல என்ன இருக்கிறது. தங்கள்  சகதர்மிணி ஊர்மிளா தேவியின் மன்னிப்பு உங்களுக்கு  கிடைத்ததா என்று எண்ணிப் பார்த்தீர்களா?  தெரிந்து வருவீர் ஐயனே!"
 என்று சொல்லி விட்டு மீண்டும் கண்ணை மூடி ராமநாமம்  ஜபிக்கத் தொடங்க 

லட்சுமணன் திகைத்து நின்றான்.


********************************************************************************




13 கருத்துகள்:

  1. எனக்கு தெரிய இந்த அண்ணன்-தம்பி பேருமே விபரம் இல்லாதவங்கே...

    இராமனை விட எனக்கு இராவணனே உயர்வானவனாக இருக்கிறான்.
    அவன் நினைத்திருந்தால் அன்றைய தினமே கொழும்பில் தனது ரேப் ஸீனை நிகழ்த்தி இருக்க முடியும் ஆனால் அனுமதி கேட்டு மன்றாடியிருக்கிறான்.

    ஆனால் சீதாவிடம் ஐயம் கொண்ட இராமன் சிறந்த கணவனா ?

    இராமன் அன்று சீதையை கொல்ல நினைத்த இராமனின் தொடக்கம் இன்றுவரை மக்கள் அயோத்தியால் ஐயோ தீ என்று இரயிலை விட்டு குதித்து செத்தார்கள்.

    இராமர் உண்மையான சக்தியுள்ள கடவுள் என்றால் வரும் ஆவணி 15-ஆம் தேதிக்குள் நல்ல தீர்வைத்தரணும்.

    இது நடந்தால் நான் தேவகோட்டையிலிருந்து அயோத்திக்கு பாதயாத்திரை போறேன் இது கோடரி மீது சத்தியம்.

    பதிலளிநீக்கு
  2. நம்ம நண்பர் கில்லர்ஜியின் எண்ணம் நிறைவேறட்டும்...!

    பதிலளிநீக்கு
  3. சகதர்மிணி ஊர்மிளா தேவியின் மன்னிப்பு ///
    ஊர்மிளா மன்னித்து இருப்பாள் அந்தக்கால பெண் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரியாக சொன்னீர்கள் .ஏகனவே எங்கள் ப்ளாக்கில் படித்து கருத்திட்டிருந்தீர்கள். மீண்டும் இங்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி மேடம்

      நீக்கு
  4. ஊர்மிளையின் கதையைத் தொடர்ந்து எழுதப் போவதாகச் சொன்னீர்கள். தொடரவில்லையே...

    பதிலளிநீக்கு
  5. முரளி சகோ அப்போதே எபியில் உங்களின் கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். இப்போது மீண்டும். ஊர்மிளை நிச்சயமாக மன்னித்திருப்பாள்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பாணியில் கதையை ரசித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
  7. சிறப்பாக இருக்கிறது.ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  8. அட! அட!! புராணகால நடையிலும் வெளுத்து வாங்குகிறீர்களே சுவாமி(?)
    அடர்ந்த விவாதம், ஆழ்ந்து கதைக்குள் இழுத்துக் கொண்டது!
    கடைசியில் லட்சுமணனுக்கு வச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு! அங்கதான் நிக்கிறாரு முரளி! ஆக, புராணக் கதையில வர்ர எல்லாருமே ஏதாவது ஒருசில தப்புப் பண்ணிட்டு மன்னிப்புக்கு மன்றாடி நிற்கிறார்கள் என்கிற மறைமுக நாத்திகம் தான் என்னைக் கவர்ந்தது
    ( அங்க அய்யய்யோங்கிறது யாரு முரளியா?)

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும்.

    தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் பதிவுகள், உணர்வுகள், சுவராசியங்கள் மற்றவர்களையும் சென்றடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    பதிலளிநீக்கு
  10. Immovable check to laskshmanan and also others... Males should learn moral from this epic. முரளி சார் முரளி தான்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895