என்னை கவனிப்பவர்கள்

கழுதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழுதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வடிவேலு வாங்கிய கழுதை


(மன்னிச்சுக்குங்க நண்பர்களே!  இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி! கற்பனை கழுதையை தட்டி விட்டுட்டேனா.அதன் விளைவுதான் சார். 
    ஆனா ஒண்ணு!  நாளைக்கு சீரியசான பதிவுதான்.
             சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள். 
  பீ கேர்ஃபுல்....  நான் என்னை சொன்னேன். ) 
   ********************************************** 
வடிவேலு வாங்கிய கழுதை 
 
     'என்னைப்  பார் யோகம் வரும்" னு எழுதி வச்ச கழுதை போட்டாவை வாங்கி மாட்டி தினமும் பாத்தா உனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று வடிவேலுவுக்கு யாரோ சொல்ல,"அப்படியாவது யோகம் அடிக்குதா பாக்கலாம்' என்று போட்டோ வாங்க கடைக்குபுறப்பட்டார் வடிவேலு.
    கடையில் படத்தை வாங்கும்போது "அண்ணே! அண்ணே!  வாங்காதீங்க!" என்று குரல் கேட்டது .வடிவேலுவின் நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள்
.
"அடேய் இங்கயும் வந்துட்டீங்களா! நீங்க சொல்றத கேக்க மாட்டேன். நானே எதையும் டீல் பண்ணிக்குவேன். நீங்க போகலாம்!
   "அண்ணே! நாங்க சொல்றத கேக்காம  ஓட்டல்ல போய் சாப்பிட்டுதானே ஏமாந்தீங்க!"
    "அதை ஏண்டா ஞாபகப் படுத்துறீங்க' என்னதாண்டா பண்ணனும்னு சொல்றீங்க!"
    "அண்ணே கழுதை ஃபோட்டா வாங்குறதுக்கு பதிலா கழுதையே வாங்கி தினமும் பாத்தா நீங்க கோடீஸ்வரர் ஆயிடுவீங்கண்ணே!"
    "ம்ம்ம்.........நீங்க சொல்றதும் சரிதான்...சரி ஒரு கழுதையத் தான் வாங்கி பாப்போம். ஏண்டா என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலியே!"
       "அண்ணே!எங்கள எப்பவுமே நம்ப மாட்டேங்கறீங்களே!"
    "உங்களை எப்படிடா நம்பறது எத்தனை முறை என்னை அடிவாங்க வச்சிருப்பீங்க! ஐடியா சொல்லிட்டீங்க இல்ல நீங்க கிளம்புங்க!நான் பாத்துக்கிறேன்.ஐடியா சொன்னதுக்கு இந்தாங்க இந்த காசை வச்சு டீ குடிச்சிட்டு போங்க!" என்று சொல்லி அவர்களை துரத்திவிட்டு ஊருக்கு ஓரமாக இருக்கும் கழுதை விற்கும் கடைக்கு சென்றார்
.
     அங்கே அழகழகான கழுதைகள் விற்பனைக்கு இருந்தன.அதைப் பார்த்த வடிவேலு "ஆஹா! எவ்வளோ கழுதைங்க! நம்மளைவிட  அழகா  இருக்கே!இதைப்பாத்தா இப்பவே யோகம் வந்துடும் போல இருக்கே!

    "ஹலோ கடையில யாரு? கழுதை என்ன விலை"
   "பிச்சைக் காரங்களுக்கெல்லாம் நான்  கழுதை விக்கறதில்ல" கடைக்காரன்  சொன்னான்!

   "என்ன எகத்தாளம்! ப்ரதர் உன் ஜட்ஜ்மெண்டு ராங். இதோ பார் எவ்வளோ பணம்?" பாக்கெட்டிலிருந்து கத்தையாக பணத்தை எடுத்துக் காட்டினார்.

    "சாரி சார்! பிச்சகாரங்க கிட்ட கூட நிறைய பணம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேனே தவிர பாத்ததில்ல இப்பதான் பாக்குறேன். உங்களைப் பாத்ததில எனக்கும் யோகம்தான் சார்!"

   வடிவேலு டென்ஷனாகி "ஹலோ ஓவரா போய்ட்டிருக்க நீ! இந்தா பணம் அதோ அந்த முடி புசுபுசுன்னு அழகா ஸ்டைலா நின்னுக்கிட்டுருக்கே அந்த கழுதைய குடு'

  வடிவேலுவிடம் நிறைய பணம் இருப்பதை தூரமாக நின்றுகொண்டிருந்த திருட்டுத் தொழில் செய்யும்அழகான இளம்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.'ஆஹா!இன்னைக்கு நல்ல கிராக்கி மாட்டி இருக்கு..இந்த சான்சை விடக் கூடாது." என்று நினைத்துக் கொண்டே வடிவேலுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  கழுதையை ஒரு கயிற்றில் கட்டி அதை வடிவேலு கையில் கொடுத்தான் கடைக்காரன், கழுதை பின்னால் வர கயிற்றைப் பிடித்துக்கொண்டு 'இனிமே நமக்கு வறப்போற அதிர்ஷ்டத்தை எந்த கொம்பனாலயும்  தடுத்து நிறுத்த முடியாது'  என்று நினைத்துக்கொண்டே நடந்தார். 

   இதைப்பார்த்த இளம் பெண் சத்தமில்லாமல் வந்து கழுதையின் கயிற்றை அவிழ்த்துவிட்டு தன கழுத்தில் அந்தக் கயிற்றைக் கட்டிக்கொண்டாள். இதை அறியாத வடிவேலு தொடர்ந்து நடக்க கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கழுதை கூடவே வருகிறதா என்று திருப்பிப் பார்க்க அங்கே கழுதைக்கு பதிலாக ஒரு பெண் இருப்பது வடிவேலுவுக்கு கண்டு அதிர்ச்சிஏற்பட்டது

ஐயோ! சொன்னா கேளு செல்லம்! நான் உன்ன வச்சுக்க முடியாது
  
  "என்னடா இது அதிசயம்!, ஏ பொண்ணு! கழுதைதானே வாங்கினேன், நீ எப்படி வந்த!"
  "எசமான் ! நான் இதுக்கு முன்னாடி கழுதையாத்தான் இருந்தேன்.உங்க கை பட்டதும் பொண்ணா மாறிட்டேன்."
    "அய்யய்யோ என்னம்மா  சொல்ற! ஒண்ணும் புரியலயே!"
  "ஆமாம் எசமான்! நான் மொதல்ல ஒரு பொண்ணாதான் இருந்தேன்.ஒரு சாமியார் கிட்ட காசு திருடிட்டனா? அவரு என்ன கழுதையா மாறிடுவேன்னு சாபம் கொடுத்துட்டார். "
      "ஆங்.. அப்புறம் "
     'நான் அவர்கிட்ட கெஞ்சி சாப விமோசனம் கேக்க. அவரு அழகா கறுப்பா ஒரு ராஜகுமாரன் வந்து உன்னை தொட்டதும் திரும்பவும் நீ பொண்ணா மாறிடுவேன்னு சொன்னாரு.அதே மாதிரி இப்போ மாறிட்டேன். எசமான்!, இனிமே நான் உங்களுக்குத்தான் சொந்தம் .நீங்கதான் என்ன கல்யாணம் பண்ணிக்கணும்."
   "அதெல்லாம் முடியாதுமா.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சி. நீ போய்டும்மா "
       "பரவால்ல முதலாளி எனக்கு ஆட்சேபனை இல்ல....."
       "சொன்ன கேளு செல்லம். நான் உன்ன வச்சுக்க முடியாது..."
     "அப்படின்னா நீங்க பையில வச்சிருக்கிற பணத்தை குடுங்க நான் போயிடறேன்..'
       "ஏன் என்ன இப்படி டார்ச்சர் பண்ற.  அவ்வவ்..."
      முடியாது என்று மறுக்க அந்தப் பெண் பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
    "இதோ பாரு மரியாதையா பணத்தை குடுத்துடு .....இல்லன்னா திருப்பி கழுதை ஆயிடுவ. கழுதை ஆயிடுவ.. அப்புறம் பொண்ணா வே மாறமாட்ட இது எங்க ஆத்தா மேல சத்தியம். அவ்வ்வ்வ்.  "  என்று சாபம் கொடுத்துக்கொண்டே துரத்தியும் பிடிக்க முடியவில்ல .

    " இந்தப் பொண்ணு நம்மள ஏமாத்திட்டாளே! கழுதையைப் பாத்தா அதிர்ஷ்டம்னு நினைச்சா இந்தக் கழுதைக்கு யோகம் வந்திடுச்சே.ஒருவேளை நம்ம மூஞ்சி கழுத மாதிரி இருக்குதோ.எதுக்கும் கண்ணாடியைப் பாத்து டெஸ்ட் பண்ணனும்."
  .
     வடிவேலு வீட்டுக்குள் நுழையும்போது வடிவேலுவின் மனைவி "அங்கயே நில்லுயா! நான் சேத்து வச்சிருந்த  பணத்தை எல்லாம் தூக்கிட்டு போய்ட்டயே!எங்க அது? எந்த கழுத கிட்டயா குடுத்த? உன்கூட எவ குடுத்தனம் பண்ணுவா... உன்ன போய் என் தலயில கட்டி வச்சுட்டாங்களே " என்று கண்டபடி திட்ட ...
  "ஏய் மரியாதையா பேசு. என்ன கட்டிக்க எத்தனை பொண்ணுங்க தயாரா இருக்காங்க  தெரியுமா... இப்பகூட ஒரு பொண்ணு என் பின்னாடி வந்தது. நாந்தாண்டி வேணாம்னு உனக்காக தியாகம் பண்ணிட்டு வந்தேன்...."
  "போய்யா போ அந்த கழுதைய கூட்டிட்டு வா ..நானும் பாக்கறேன்..."

மனதுக்குள்  'அந்தப் பொண்ணு கழுதன்னு இவளுக்கும் தெரிஞ்சு போச்சோ?'

  "போறன்டி இப்பவே போய் அந்தப் பொண்ணோட வந்து  உன் கொட்டத்தை அடக்கறேன்" சவால் விட்டுவிட்டு ஆவேசத்துடன் கிளம்பினார்

    வடிவேலு  அந்தப் பெண்ணைத் தேடி  மீண்டும் கழுதை வாங்கிய இடத்துக்கே வர அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்க்க அங்கே காலையில் வாங்கிய அதே அழகான புசு புசு கழுதை நின்றிருந்தது.
   அதைப் பார்த்த வடிவேலு அதிர்ச்சியுடன்,"ஐயோ பொண்ணே! நான் குடுத்த சாபம் பலிச்ச்சிடுச்சே. நீ எங்கிட்ட பணத்த புடுங்கினதால உன்னை கழுதையா  மாற சாபம் குடுத்தனே.நிஜமாவே திரும்பவும் கழுதையா மாறிட்டயே!"

      கழுதைய தொட்டுப் பார்த்து பெண்ணாக மாறுகிறதா என்று பார்த்துக்கொண்டே,  
  "உன்னை பொண்ணா மாத்த முடியலயே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......."
   என்று  புலம்ப தூரத்தில் மறைவாக அந்த இளம்பெண் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்

*******************************************************************
சும்மா ஒரு ஜாலிக்குத்தான் .சிரிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க  



திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நான் கழுதை



                              முட்டாள்களின்
                              உருவகம் நான்!

                              மூடர்களின்
                              உவமானம் நான்!

                              மதி குறைந்து
                              போனதால்
                              பொதி சுமக்கப்
                              பிறந்தவனாம்!

                              குரல் வளத்தில்
                              காக்கையும் நானும் 
                              கைவிடப் பட்டவர்கள்.

                              குட்டியாய் இருக்கும்போது
                              குதிரையைப் 
                              நானும்ம் அழகுதான்!   
        
                              கழுதை வளர்ந்து
                              குதிரை ஆனதா
                              குதிரை தேய்ந்து
                              கழுதை ஆனதா?
                              டார்வினிடம்தான்
                              கேட்கவேண்டும்

                              கத்திப் பேசுபவர்கள் எல்லாம்
                              எங்கள் பாலை கொஞ்சம்
                              அதிகம் குடித்தவர்களாம்.

                               "என்னைப்பார் யோகம் வரும்"
                               என் படத்தை  மாட்டி
                               எழுதி வைத்திருக்கிறீர்கள்.

                                உங்களுக்கு
                                யோகம்வரும்;
                                எனக்கு?

                                பிறரை  ஏசும்போதும்
                                என் பெயரே
                                உங்களுக்கு நினைவு வரும்!

                                மாடுகள்கூட
                                மதிப்பிழந்துபோன வேளையில்
                                கழுதைகளுக்கு ஏது கவனிப்பு?

                                எனக்கு  
                                தெரியாதுதான்;
                                கற்பூரவாசம்!

                                நான்  
                                தேடியும்  கிடைக்காதது 
                                அன்பு, நேசம்

                                கட்டிப்  பிடிக்க
                                யாரும் இல்லை!
                                அதனால் 
                                எட்டி  உதைத்து 
                                என் கோபத்தை 
                                வெளிப்படுத்துவேன்!
                                என்ன செய்வது? 

                                காலச் சுழற்சியில்
                                எங்களினம் 
                                காணாமல் போகும்!

                                ஏளனப் பொருட்களாக 
                                எங்களை பார்ப்பவர்களே!
                                உங்களிடம்
                                ஒன்றுமட்டும் சொல்கிறேன்.

                                முட்டாள்களுக்கும்
                                இந்த  மண்ணில்
                                கொஞ்சம் இடம் கொடுங்கள்

                                ஏனெனில்
                                அவர்களை வைத்துதான்
                                அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.

                *********************
கழுதைகள்  பற்றிய சில உண்மைகள்


  1. கழுதைகளின்  மூல இருப்பிடம்ஆப்ரிக்க பாலைவனங்கள் என்று கூறப்படுகிறது.
  2. சாதரணமாக கழுதைகள் 3 வகைகளில் காணப்படுகின்றன. 36 இன்ச்சுகளுக்கு குறைவானவை.சிறுகழுதைகள், 36 லிருந்து 54'' வரை நடுத்தரக் கழுதைகள்,56'' மேலுள்ளவை மம்மூத் என்று அழைக்கப்படும் பெருங்கழுதைகள்.
  3. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் மம்மூத்தை வளர்த்தவர்.
  4. கழுதைகள் உண்மையில் புத்திசாலித் தனமானவை.ஆனால்  அறிவில்லாத மிருகம் என்று தவறாகக் கருதப்படுகிறது.
  5. ஒரே அளவில் உள்ள கழுதையையும் குதிரையையும் ஒப்பிடும்போது கழுதையே வலிமையானது.
  6.  கழுதைகள் அபார ஞாபக சக்தி வாய்ந்தது.25 ஆண்டுகளுக்கு முன்னால்வாழ்ந்த இடத்தையும் உடனிருந்த கழுதையும் கண்டுபிடித்துவிடும் திறமை உடையது.
  7. கழுதையை எளிதில் பயமுறுத்தி விட முடியாது.
  8. ஆண் கழுதை ஜாக் என்றும் பெண் கழுதை ஜென்னி என்றும் அழைக்கப் படுகிறது.
  9. ஆண்  கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவை ம்யூல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
  10. பெண்  கழுதைக்கும் ஆண் குதிரைக்கும் பிறந்தவை ஹின்னீஸ்
  11.  கழுதைகளுக்கு மழையில் நனைவது பிடிக்காது.இயற்கையில் அதன்தோல் பிற விலங்குகளைப் போல் வாட்டர் ப்ரூஃப் ஆக அமையவில்லை 
  12. நன்கு  பராமரிக்கப் பட்டால் கழுதை 40 ஆண்டுகள் கூட உயிர் வாழும்.
  13. கழுதைப்பால் கிராமப் புறங்களில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
                   *******************************************

நாளை: வடிவேலு வாங்கிய கழுதை