என்னை கவனிப்பவர்கள்

குஜராத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குஜராத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை


  தலைவனுக்காக  தீக்குளிக்கவும் தயார் என்று தொண்டர்கள் சிலர் சொல்வதுண்டு சிலர் அவ்வாறே செய்யத் துணிவதும் உண்டு. ஆனால் தங்கள் விசுவாசத்தை நிருபிப்பதற்காக கொதிக்கும் எண்ணையில் தங்கள் கையை விட்டவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? அந்தச் செய்தியைப் படித்தது நான் அதிர்ந்துதான் போனேன்.

 குஜராத்  மாநிலத்தில் சபர்கந்த் மாவட்டத்தில் உள்ள தேரியா என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடை பெற்றுள்ளது.
காரணம்  என்ன?
  கிராம உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று  வாக்கு எண்ணிக்கை அப்போதுதான் முடிந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தினேஷ் பரமர் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மேல்ஜி பரமர் என்பவரிடம் தோற்றுப் போனார். தன் இன மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள் என்று  அதிருப்தியும் கோபமும் அடைந்தார் 

 அவரை சமாதானப் படுத்த அவரது இன மக்கள் சிலர்   தினேஷுக்குத்தான் வாக்களித்தோம் என்றும் கூறி உள்ளனர். மேலும்  20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முன்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு தங்கள் கையை சுட்டுக் கொண்டு கடுமையான காயங்களுடன் துடித்தனர்.  உண்மையில் தினேஷ் பரமருக்கு  ஓட்டுப் போட்டிருந்ததாலும் உண்மையைச் சொன்னதால்  கொதிக்கும் எண்ணையால் அவர்கள் கைக்கு பாதிப்பு வராது என்றும் பொய் சொன்னால்தான் கை வெந்து போகும் என்றும்  நம்பிய மூடத்தனமே இதற்கு காரணமாம்  
  இதை தட்டிக் கேட்கவோ தடுக்கவோ யாரும் முன் வராததும் மனிதாபிமானத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு வேடிக்கை பாரத்து கொண்டிருந்ததும்  வெட்கித் தலைகுனிய வேண்டிய  விஷயமே! 

  அவ்வூர் கோவிலின் முன்னே இக்கொடுமை நடைபெற்றுள்ளது. இந்த மூடநம்பிக்கை ஆழமாக இம்மக்களிடையே வேரூன்றி உள்ளதாம் தினேஷ் பரமரையும் இதற்கு தூண்டு கோலாக இருந்த அம்ருத் பரமர் என்பவரையும்   கைது செய்திருக்கிறது போலீஸ்.

கைது செய்த போலிசை பாராட்டி இருக்கிறார் நரேந்திர மோடி. தினேஷ் பரமரோ அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர்களைப் போன்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக் கூடாது.

  அந்த  மக்கள் மீது பரிதாபத்தைவிட கோபம்தான் அதிகமாக வந்தது. அப்படி என்ன இவர்களுக்காக சாதித்து விட்டார் அந்த பாழாய்ப் போன தினேஷ் பரமர் என்று தெரியவில்லை. இது போன்று நடைபெறுவது இப்பகுதிகளில் சகஜமாம்.  "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்." என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது. 
  இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதரணமாக நடக்கிறது என்கின்றனர். ஒரு வயதான கிழவியையும் அவரது மகளையும் திருட்டுக் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க இதேபோல் கொதிக்கும் எண்ணையில் கைவிடச் சொன்ன நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம். இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் இது போன்று நடைபெறுவது வேதனைக்குரியது.
 .
 குஜராத் அபாரமான வளர்ச்சி கண்டுள்ளதாக  பத்திரிகைகளும் ஊடகங்களும் தெரிவிக்கின்றன. எத்தனை  தொழில் வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் வந்தால் என்ன? அடிமை எண்ணம் மாறாமல் வாழும் மக்களின் பரிதாப நிலையை என்னென்பது.

 அறிவியல் தொழில் நுட்பங்கள்   மக்களின் அறியாமையைப் போக்கவில்லை என்றால் அது எப்படி உண்மையான வளர்ச்சி ஆகும்.?

 இது ஒரு உதாரணம்தான் இப்படி இன்னும் எத்தனை மக்கள் நம் நாட்டில் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்களோ? சுயநல அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அரசாங்கம் பொதுநல அமைப்புகள், மூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து  செயல் பட்டால் மட்டுமே  இத்தகைய முட்டாள் தனங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

மனதை திடப் படுத்திகொண்டு கையை சுட்டுக் கொண்டவர்களை இந்த செய்தித் தொலைக் காட்சிக் காணொளியில் பாருங்கள்



********************************************************************************
 இதை படித்து விட்டீர்களா?
ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!