என்னை கவனிப்பவர்கள்

கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை


  தலைவனுக்காக  தீக்குளிக்கவும் தயார் என்று தொண்டர்கள் சிலர் சொல்வதுண்டு சிலர் அவ்வாறே செய்யத் துணிவதும் உண்டு. ஆனால் தங்கள் விசுவாசத்தை நிருபிப்பதற்காக கொதிக்கும் எண்ணையில் தங்கள் கையை விட்டவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டதுண்டா? அந்தச் செய்தியைப் படித்தது நான் அதிர்ந்துதான் போனேன்.

 குஜராத்  மாநிலத்தில் சபர்கந்த் மாவட்டத்தில் உள்ள தேரியா என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடை பெற்றுள்ளது.
காரணம்  என்ன?
  கிராம உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று  வாக்கு எண்ணிக்கை அப்போதுதான் முடிந்தது. ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் தினேஷ் பரமர் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மேல்ஜி பரமர் என்பவரிடம் தோற்றுப் போனார். தன் இன மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துவிட்டார்கள் என்று  அதிருப்தியும் கோபமும் அடைந்தார் 

 அவரை சமாதானப் படுத்த அவரது இன மக்கள் சிலர்   தினேஷுக்குத்தான் வாக்களித்தோம் என்றும் கூறி உள்ளனர். மேலும்  20க்கும் மேற்பட்டவர்கள் பேர் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க முன்வந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு தங்கள் கையை சுட்டுக் கொண்டு கடுமையான காயங்களுடன் துடித்தனர்.  உண்மையில் தினேஷ் பரமருக்கு  ஓட்டுப் போட்டிருந்ததாலும் உண்மையைச் சொன்னதால்  கொதிக்கும் எண்ணையால் அவர்கள் கைக்கு பாதிப்பு வராது என்றும் பொய் சொன்னால்தான் கை வெந்து போகும் என்றும்  நம்பிய மூடத்தனமே இதற்கு காரணமாம்  
  இதை தட்டிக் கேட்கவோ தடுக்கவோ யாரும் முன் வராததும் மனிதாபிமானத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு வேடிக்கை பாரத்து கொண்டிருந்ததும்  வெட்கித் தலைகுனிய வேண்டிய  விஷயமே! 

  அவ்வூர் கோவிலின் முன்னே இக்கொடுமை நடைபெற்றுள்ளது. இந்த மூடநம்பிக்கை ஆழமாக இம்மக்களிடையே வேரூன்றி உள்ளதாம் தினேஷ் பரமரையும் இதற்கு தூண்டு கோலாக இருந்த அம்ருத் பரமர் என்பவரையும்   கைது செய்திருக்கிறது போலீஸ்.

கைது செய்த போலிசை பாராட்டி இருக்கிறார் நரேந்திர மோடி. தினேஷ் பரமரோ அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர்களைப் போன்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடக் கூடாது.

  அந்த  மக்கள் மீது பரிதாபத்தைவிட கோபம்தான் அதிகமாக வந்தது. அப்படி என்ன இவர்களுக்காக சாதித்து விட்டார் அந்த பாழாய்ப் போன தினேஷ் பரமர் என்று தெரியவில்லை. இது போன்று நடைபெறுவது இப்பகுதிகளில் சகஜமாம்.  "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்." என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது. 
  இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதரணமாக நடக்கிறது என்கின்றனர். ஒரு வயதான கிழவியையும் அவரது மகளையும் திருட்டுக் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க இதேபோல் கொதிக்கும் எண்ணையில் கைவிடச் சொன்ன நிகழ்வும் சமீபத்தில் நடந்ததாம். இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் இது போன்று நடைபெறுவது வேதனைக்குரியது.
 .
 குஜராத் அபாரமான வளர்ச்சி கண்டுள்ளதாக  பத்திரிகைகளும் ஊடகங்களும் தெரிவிக்கின்றன. எத்தனை  தொழில் வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் வந்தால் என்ன? அடிமை எண்ணம் மாறாமல் வாழும் மக்களின் பரிதாப நிலையை என்னென்பது.

 அறிவியல் தொழில் நுட்பங்கள்   மக்களின் அறியாமையைப் போக்கவில்லை என்றால் அது எப்படி உண்மையான வளர்ச்சி ஆகும்.?

 இது ஒரு உதாரணம்தான் இப்படி இன்னும் எத்தனை மக்கள் நம் நாட்டில் வாழ்ந்து  கொண்டிருக்கிறார்களோ? சுயநல அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அரசாங்கம் பொதுநல அமைப்புகள், மூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து  செயல் பட்டால் மட்டுமே  இத்தகைய முட்டாள் தனங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

மனதை திடப் படுத்திகொண்டு கையை சுட்டுக் கொண்டவர்களை இந்த செய்தித் தொலைக் காட்சிக் காணொளியில் பாருங்கள்



********************************************************************************
 இதை படித்து விட்டீர்களா?
ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!

வியாழன், 15 மார்ச், 2012

இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?

விசித்திர நோயின் பிடியில்
  சிலவற்றைப் பார்க்கும்போதோ அல்லது  படிக்கும்போதோ மனம் பதறுகிறது. நம்மையும் அறியாமல் கலங்குகிறது. சமீபத்தில் வெளியான பிரபாகரனின் இளைய மகன் குண்டடி பட்டு இறந்து கிடக்கும் புகைப்படம்  கண்டு கலங்காத மனமும் இருக்க முடியம்?.
    இறப்பு மட்டுமல்ல வாழ்ந்து கொண்டிருக்கும் சிலருடைய வாழ்க்கை கேள்விக்குறிகளாக அமைந்திருப்பதும் இதயத்தை சங்கடப் படுத்துகிறது.
      நம்முடைய ஆசைகள் ஒன்றிரண்டு நிறைவேறாவிட்டாலும் நமக்கு மட்டும் ஏனிந்த நிலை என்று புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால் அன்றாடம் துன்பத்தில் உழன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி எதிர்காலம் என்னவென்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உண்டு என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 

   இதோ இந்தப் பெண்களைப் பாருங்கள். இவர்களுடைய சிக்கல் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆம் முடிதான் இவர்கள் பிரச்சனை. ஹைபர்ட்ரிகோசிஸ் (hypertrichosis)  என்ற நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உலகில் மிகவும் அரிதான நோய்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதிலும்  சுமார் 50 பேர்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் சொல்கிறது. இவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?  
   பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் வசிக்கும் அனிதா சம்பாஜி என்பவருக்கு ஆறு மகள்கள். இவர் கணவனை இழந்தவர். ஆறு மகள்களில் மூவரை இந்த நோய் தாக்கி இருக்கிறது. சவிதா மோனிஷா,சாவித்திரி, என்ற மூவரின் வாழ்க்கையில்தான் விதி விளையாடி வருகிறது. அதிசய மரபணு நோயின் பிடியில் சிக்கி வாடிக்கொண்டிருக்கும் மகள்களை பார்த்து நாளும் கண்ணீர் வடிக்கும் அந்தத் தாயின் நிலையை சொல்ல வார்த்தைகள் ஏது?
  இந்த நோய் எப்படி வந்தது? இந்தப் பெண்களுடைய தந்தைக்கு இந்த நோய் இருந்ததாம். அதை மறைத்து அனிதாவுக்கு திருமணம் செய்து  வைத்திருக்கிறார்கள். திருமணமாகுபோது இவருக்கு வயது 12 திருமணத்தின் போதுதான் மணமகனை முதன் முதலாக பார்த்தாராம். என்ன செய்வது? பெரும்பாலான கிராமப் பெண்களைப்போல் சகித்துக் கொண்டு வாழ்ந்தார். 2007 இல்  கணவனும் இறந்துவிட ஆறு பெண்களுடன் வாழ்க்கை கேள்விக்குறியானது.
   ஒரே ஒரு சின்ன ஆறுதல் என்னவெனில் ஆறு பெண்களில் மூன்று பெண்களுக்கு இந்த வியாதி இல்லை என்பதே.
      இவர்களைப் பார்த்து ஓநாய் சகோதரிகள் என்று கிண்டலடிப்பார்களாம். சிறுமி சாவித்திரி பள்ளிக்கு போகும்பொழுது. மற்ற மாணவிகள் பக்கத்தில் உட்காராதே என்று துரத்தி விடுவார்களாம்.
   "இவர்களுக்கு திருமணம் நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நான்  இருக்கும்வரை எப்படியாவது இவர்களைக் காப்பாற்றுவேன். ஆனால் எனக்குப் பிறகு இவர்கள் வாழ்வு என்னவாகும்" என்று தாய் கண்கலங்கும் போது கடவுளே உனக்கு கண் இல்லையா என்று கேட்கத்  தோன்றுகிறது.
       பலவித மருந்துகளும் க்ரீம்களும் பயன்படுத்தியும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
         இதற்கு சிகிச்சையே இல்லையா? இருக்கிறது . லேசர் சிகிச்சை ஒன்றே நிரந்தர வழி. ஆனால். ஒருவருக்கு 3.5 லட்சம் செல்வாகுமாகும்.
       அன்றாட உணவுக்கே போராடும் நிலையில் மூவருக்கும் சேர்த்து பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் எப்படி செலவு செய்ய முடியும்?.
    இவர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்நேஹ் குப்தா என்பவர் இவர்களைப் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை இவர்களுடைய சிகிச்சைக்கு அளிக்கப் போகிறாராம்.
     எனக்கு ஒன்று புரியவில்லை. குப்தா இவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறாரா?  அல்லது  இவர்களை வைத்து பணமும் புகழும் பெற வேண்டுமென்று நினைக்கிறாரா?
      உண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடைய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கவேண்டும். 10 லட்ச ரூபாய் திரட்ட முடியாத நிதி அல்ல.
     தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,மகளிர் அமைப்புகள்,ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அதற்கு மேலாக அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இந்த அரிதிலும் அரிய நோயால் அவதிப்படும் குடும்பத்திற்கு அரசிடமிருந்து ஏதாவது உதவித் தொகை கிடைக்க வழி இருக்கிறதா?
      கோடிகளில் புரளும் செல்வந்தர்களும் விளயாட்டு வீரர்களும் நடிக நடிகையர்களும்  நிறைந்த பூனே,மும்பை பகுதிகளில் இவர்கள் துயர் தீர்க்க யாருமே முன் வரவில்லையா?  இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா?
       இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கவில்லை.
  தினமலர் இணையதளத்தில் இந்த செய்தியைப் படித்து  விட்டு துபாயில் வசிக்கும் சுப்பிரமணியம் என்பவர் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய தொலைபேசி எண்ணை கமெண்ட் பகுதியில் கேட்டிருக்கிறார். அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார், தினமலர் திரு சுப்ரமணியத்திற்கு முகவரியை வழங்கியதா என்று தெரியவில்லை.
       முதலில் உதவ முன்வந்த அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
       மற்றவர்களை உதவி செய்யச் சொல்லும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம். நானும் என்னாலியன்ற ஒரு சிறு தொகையை வழங்க  தயாராக இருக்கிறேன்.
      இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாராவது அவர்களுடைய முகவரியை கண்டு பிடித்து இயற்கையின் சாபத்திற்கு ஆளான அந்தப் பெண்களின் தாயின் பெயரில் வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தால் நேரடியாக வங்கிக்கு பணத்தை அனுப்ப ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும். எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளன.
     அரசாங்கம் செய்யாவிட்டால் என்ன நம்மால் இயன்றதைச் செய்வோம். 
  
*************************************************************