என்னை கவனிப்பவர்கள்

தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 அக்டோபர், 2012

தமிழ்மணத்தில் ஓராண்டு


(அடடா! நம்ம நேரம் பாருங்க இன்னைக்கு தமிழ்மணம் வேலை செய்யல.)
 (அனைவருக்கும் சரஸ்வதி பூஜை ஆய்த பூஜை நல வாழ்த்துகள்)
 
  இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஆம் தமிழ்மணத்துடன்   இணைந்து ஓராண்டு இன்றுடன்(23.10.2012) நிறைவடைந்துள்ளது. தமிழ்மணம்  மூலமாக இவ்வளவு பேர் பதிவுகளைப் பார்ப்பார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. தமிழ்மணம்  தர வரிசையில் நூறுக்குள்  வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஓராண்டுக்குள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்று எனது தமிழ்மண தரவரிசை 12. உண்மையிலேயே அதற்குத் தகுதி உடையவன்தானா என்ற ஐயம் இருந்தாலும் மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.. ஓராண்டு பதிவுலக அனுபவங்கள் ஏராளம். முன்னணிப் பதிவர்கள் முதல் புதியவர்கள் வரை பல்வேறு பதிவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பலரை பதிவர் சந்திப்பின் போது பார்த்திருந்தாலும் இன்னும் சிலரது நட்பு மாய நட்பாக(Virtual Friendship) இருப்பினும்  நேய நட்பாகவே தொடர்கிறது.

   பத்திரிகையில் எழுதுபவர்களை விட பதிவுலகில் எழுதுபவர்களுக்கு கஷ்டங்கள் அதிகம். உண்மையில் சரக்கு அதிகம் இருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு பதிவுகளாவது எழுதினால்தான் நினைவில் வைத்துக் கொள்ளப் படுவார்கள்.அடுத்த பதிவு என்ன போடலாம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டு எதையும் அழகான பதிவாக்கும் திறன் ஒரு சிலருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.அது அவர்களை வெற்றிப் பதிவாளர்களாக வலம் வரச்  செய்து கொண்டிருக்கிறது. (நமக்கு அந்த திறமை வரமாட்டேங்குது)

   பிழைப்புக்காக பல்வேறு  தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் சமூகம்  கலை இலக்கியம் அரசியல் இன்னும் பலவற்றைப் பற்றிய நமது எண்ணங்களையும் அனுபவங்களையும் படைப்புகளையும் பகிர்ந்து கொள்வது நமக்கு ஒரு வடிகாலாகவும்  மற்றவர்களுடைய அனுபவங்களும் அறிவும் நமக்கு பயன் தக்கதாக அமைந்திருப்பதும் பதிவுலகின் சிறப்பு. 
   இத்தனைக்கும் மேலாக தமிழ்ப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவு அளித்து இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவிடும் தமிழ்மணத்திற்கு நன்றி.தமிழ்மணம் மூலமாக வருகை தந்ததோடு வாக்கும் அளித்து உற்சாகமூட்டிய அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

 முதன்  முதலில் நான் தமிழ்மணத்தில் இணைத்த பதிவை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சிலர் மட்டும்தான் அதைப் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வெற்றிக்கு  வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்


நம்பிக்கைச் செடியை
நட்டு வை


உழைப்பு என்ற
நீரை ஊற்று


நாணயம் என்ற
நல்லுரம் இடு


உறுதி என்ற
வேலி போடு


எதிர்ப்பு என்ற
களைகளை
 எச்சரிக்கையுடன்
அகற்று


பொறுமையாய்
காவல் இரு


பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!


ஆம்!
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில் 
************* 



திங்கள், 17 செப்டம்பர், 2012

தமிழ் மணம் வாசகர் பரிந்துரை சரியா?+கேபிளின் கவிதை விமர்சனம்


இது எனது 150 வது பதிவு
 கடந்த  வாரத்தில் பதிவுகள் தொடர்பாக  மூன்று பதிவுகள் படித்தேன். ஒன்று அதிரடி ஹாஜா வின் "தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்". மற்றொன்று ரசீம் கசாலியின்  "இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல." மூன்றாவது மதுமதியின் 'இப்படித் தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?'

  அதிரடி ஹாஜா தனது பதிவில் "வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர் பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் மொக்கையான பதிவாக இருந்தாலும் நண்பர்கள் ஒட்டு போட்டுவிடுவதால் வாசகர் பரிந்துறையில் இடம் பெற்று விடுகிறார்கள் இதனால் வாக்கு பெற முடியாத புதிய பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறார்.

   அவர் சொல்வது உண்மை என்றாலும் பதிவுலகைப் பொருத்தவரை எனக்குத் தெரிந்து நெருங்கிய நண்பர்கள் கலந்து பேசி வலைப்பூக்கள் ஆரம்பித்து தங்களுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்வது இல்லை. பதிவுலகில் நுழைந்த பின்னேதான் நண்பர்களாகிறார்கள். . ஒத்த அலைவரிசை உடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் மற்றவர் பதிவுகளுக்கு கருத்திடுவதும் வாக்களிப்பதுமாக இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு ஒட்டு போட்டது யார் என்று  தெரியாமலிருக்கும். எனக்கு வாக்களித்த ஒரு சிலரை நான் பதிவர் சந்திப்பின்போதுதான் நேரில் பார்த்தேன்.

  ஏழு பேர் மட்டும் வாக்களித்தால் எப்படி வாசகர் பரிந்துரையாகும் என்பது சரி என்றாலும் ஏதாவது ஒரு அளவுகோல் வேண்டுமல்லவா!,அந்த அளவுகோல் ஏழாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தமிழ் 10 இல் பத்து வாக்குகள் பெற்றால்தான் பிரசுரமானவை தலைப்பில் வெளியாகும். அதற்கு கீழ் உள்ளவை காத்திருப்பவை பட்டியலில்தான் இருக்கும்.

  ஏழு வாக்குகள் பெறுவது சாதாரண விஷயம் இல்லையென்றாலும் புதிய பதிவர்களும் கொஞ்சம் முயற்சித்தால் ஏழு வாக்குகள் பெற்றுவிட முடியும்.இன்னும் அதிக வாக்குகளை நிர்ணயித்தால் புதிய பதிவர்களுக்கு மேலும் சிக்கல்தான். இன்னும் குறைத்தால் பரிந்துரைக்கு அர்த்தம் இல்லாமலே போய்விடும்.வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக வேறு பெயர் வேண்டுமானால் வைக்கலாம்.

  இந்த ஏழு வாக்கு விஷயத்தில்  தமிழ்மணம் கடைபிடிக்கும் நடைமுறை புதியவர்களுக்கு உதவும் வகையில்தான் உள்ளது என்று கருதுகிறேன். ஏனென்றால் இப்பகுதியில் வெளியாகும் பதிவுகள் வாக்குகளின் எண்ணிக்கைப் படி வரிசைப் படுத்தப்படுவதில்லை. ஏழு வாக்குகள் பெற்றதும் உடனே வெளியாகி விடுகிறது.பின்னர் வாக்குகள் பெற்றாலும் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை. 50 வாக்குகள் பெற்றாலும் பின்னேதான் செல்லும்.அடுத்து 7 வாக்குகள் பெறுவது முதலிடத்தில் வருகிறது.

  அதனால்  புதியவர்கள் (என்னையும் சேர்த்துத்தான் ) பல பதிவுகளைப் படித்து சரியான பின்னூட்டம் இட்டாலே வாக்குகள் கிடைக்க வழி கிடைக்கும்.

  நூறு  நூற்றி ஐம்பது ஹிட்ஸ் கிடைத்தால் வாசகர் பரிந்துரையாக இருக்கவேண்டும் என்று சொல்லும் ஹாஜாவிற்கு கசாலி சொன்னது போல  இவ்வளவு ஹிட்ஸ் பிரபல பதிவர்களுக்கே கிடைக்கும்  புதிய பதிவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இன்னும் அரிதாகும். 

  பிரபல பதிவர்களுக்கு கண்மூடித்தனமாக வாக்குகளும் கம்மென்ட்சும் குவிகின்றன என்பது உண்மைதான்.(உதாரணம்:கேபிளாரின் என்டர் கவிதை. விமர்சனம் இந்தப் பதிவின் இறுதியில் காண்க!)  ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எவ்வளவு உழைத்திருப்பார்கள் என்பதை உணரவேண்டும்.ஆரம்பத்தில் அவர்கள் இட்ட நல்ல பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்திருக்கக் கூடும்.

  .கடந்த அக்டோபரில் தமிழ் மணத்தில் இணைந்த   நான் எனது நிறைய பதிவுகளுக்கு ஏழு ஓட்டுக்கள் பெற்றதில்லை. பெரும்பாலும் எனது வோட்டுக்களை எனக்காக போடுவதில்லை. ஏழு ஓட்டுக்கள் பெற்றால் வாசகர் பரிந்துரையில் இடம் பெறும் என்பதை தாமதமாகத்தான்  தெரிந்து கொண்டேன்.எப்படியோ தட்டுத் தடுமாறி  இன்று தமிழ் மணத்தின் தரவரிசையில் 23 வதாக இருக்கிறேன்.

  ஒரு சினிமாவைப் போலவே பதிவுகளின் ஹிட்டும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. நாம் எதிர் பாராத வகையில் சில பதிவுகள் ஹிட்டாகி விடுகின்றன.என்றாலும் மினிமம் கேரண்டியாக 100 முதல்150 பேர் வரை பார்க்க வைக்க நல்ல பதிவுகளை எழுதினால் மட்டுமே முடியும் என்பதை எனது குறைந்த வலைப்பதிவு அனுபவத்தின் மூலம் அறிய முடிகிறது. சில நேரங்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பதிவிற்கு குறைவான வாக்குகள் விழுவதும் உண்டு. எனது சமீபத்திய ஒரு  பதிவு மட்டும் இரண்டாயிரம்  பேருக்கு மேல் பார்வை இடப்பட்டது. அதிக கருத்துகளும் கிடைத்தன, ஆனால்  வாக்குகளோ 6 மட்டுமே  கிடைத்தன. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு எனது கொள்கையை மாற்றிக்கொண்டு ஏழாவது வாக்கை நானே போட்டேன். ஏற்கனவே அதிகம் பேர் பார்த்து விட்டதால் அதற்கு மேல் அதிக பயன் ஒன்றும் விளைய வில்லை. 

  முதலில் நட்புக்காக வாக்களிப்பவர்கள் எப்போதும் தொடர்ந்து எல்லா பதிவுகளுக்கும் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.பதிவுகளின் தரம் மட்டுமே வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

  புதிய பதிவர்களுக்கு தனி பகுதி தொடங்கலாம் என்ற பிரபல பதிவர் கஸாலி சொன்னஆலோசனை ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் ஆனால அதிலும் சிக்கல் உண்டு, புதிய பதிவர் என்பதை எப்படி வரையறுப்பது பதிவுகளை எண்ணிக்கை வைத்தா? தமிழ் மணத்தில் சேர்ந்ததை வைத்தா? காலத்தை வைத்தா என்ற கேள்வி எழுகிறது. எந்த முறையிலும் அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது.

   புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பணியை எனக்குத் தெரிந்து மூன்று பேர் செய்துவருகிறார்கள்.ஒருவர் "தீதும்  நன்றும் பிறர் தர வாரா" ரமணி, திண்டுக்கல்  தனபாலன்,"வரலாற்றுச் சுவடுகள்" போன்றோர் எந்தப் பதிவாக இருந்தாலும் அதில் சிறப்பு அம்சத்தை தேடிப்  பாராட்டுவதோடு யாராக இருந்தாலும் வாக்களிக்கிறார்கள்,. அவர்களது வாக்குகள் பிறரையும் வாக்களிக்கத் தூண்டுகிறது என்பதில் ஐயமில்லை. அதனால் பல புதியவர்கள் முன்னணிக்கு வருகிறார்கள்.

   ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகள் அதிகம் பேரால் படிக்கப் பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது  இயல்புதான். அதற்கு முழுழுக்க தமிழ் மணத்தையே சார்ந்து இருக்காமல் நம்முடைய  பதிவுகளை நம்புவோம், தமிழ்மணத்தை துணையாகக் கொண்டு முன்னணிக்கு வர முயற்சி செய்வோம்.

                 ****************************************************
  மிகவும் பிரபல பதிவர் கேபிள் சங்கரை அறியாதவர்கள் பதிவுலகில் இருக்க மாட்டார்கள். அவரது சமீபத்திய என்டர்  கவிதை ஒன்று 50 வாக்குகள் பெற்று தமிழ்மணத்தில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக இருந்தது. அதை  அவரது பிரபலத்திற்கு கிடைத்த பரிசாக எடுத்துக் கொள்ளலாம். அது மிகச் சுமாரான கவிதை. அதை உறுதிப் படுத்தும் விதமாகவே அதற்கு இடப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கின்றன.  இனி கவிதை எழுத வேண்டாம் என்றும் அன்புக் கட்டளைகூட  இட்டுள்ளனர்.ஆனால் கேபிள் அத்தனை கருத்துக்களையும் வெளியிட்டிருந்த நேர்மை பாராட்டுக் குரியது. இதே கவிதை வேறு யாரேனும் எழுதி இருந்தால் பாராட்டுக்கள் கிடைத்திருக்கலாம்.ஆனால் அவர் மீது அதிக எதிர் பார்ப்புகளே விமர்சனங்களுக்கு காரணம் 
குட்டி  விமர்சனம்
கேபிள் ஜி மன்னிப்பாராக!
அந்தக் கவிதை
அடர் மழை
மூடிய கார் கதவுகளுக்குள் 
ஏஸியின் குளிர்
நிர்வாணமாய் கால் அகட்டி
தொங்கும் தந்தூரி சிக்கன்
மழைக்கு ஒதுங்கிய 
முழுக்க நனைந்த வெண்ணுடை 
டைட் ஸ்லீவ் பெண்
யார் கண்ணுக்கும் 
தந்தூரி சிக்கன் தெரியவில்லை.
இந்தக்  கவிதையில் மூடிய கார் கதவுகளுக்குள் ஏஸியின் குளிர்.இது தேவயில்லை என்று கருதுகிறேன். தந்தூரி சிக்கன் இருமுறை வந்துள்ளது.இதையும் தவிர்த்திருக்கலாம்.டைட் ஸ்லீவ் இதுவும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காகவே தெரிகிறது. முழுக்க நனைந்த வெண்ணுடை பெண் இதுவே போதுமானது.
மாற்றி அமைத்தால் கவிதை எப்படி இருக்கும்.?
             அடர் மழை!
             மழைக்கு ஒதுங்கிய
             முழுக்க நனைந்த
             வெண்ணுடை பெண்!
             யார் கண்ணுக்கும்
             தெரியவில்லை
             நிர்வாணமாய் கால் அகட்டி
             தொங்கும் தந்தூரி சிக்கன்!


இப்படி இருந்திருந்தால் ஒருவேளை கவிதையாகி இருக்குமோ. (இந்தப் பாணி சுஜாதா விடமிருந்து கற்றுக் கொண்டது)  
************************************************************************************** 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

அதிர்ச்சி செய்தி!


   ஒரு சில தினங்களுக்கு முன்பு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் ஆக விருப்பம் கேட்டு ஓர் மின்னஞ்சல் கிடைக்க  பெற்றேன். கரும்பு தின்னக் கூலியா? சம்மதம்  தெரிவித்து பதில் அனுப்பினேன்.

   நாளை முதல் 20.08.2012 முதல் 26.08.2012 வரை ஒரு வாரம் தமிழ்மணம்
நட்சத்திரப் பதிவராக பதிவுகள் இட இருக்கிறேன்.(இப்ப தெரியுதா என்ன அதிர்ச்சின்னு ஹிஹிஹி )
   திரட்டிகளில் தமிழ்மணத்திற்கே முதலிடம் என்பது பதிவுலகம் அறிந்த உண்மை.தமிழ் மணத்தின் மூலம் கிடைத்த  அங்கீகாரம்  உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.எனது பதிவுகள் இன்னும் அதிக பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

  முன்னதாக திரு கோவி கண்ணன் அவர்கள் என்னை நட்சத்திரப் பதிவராக பரிந்துரைக்க சம்மதம் கேட்டிருதார். அவர் சொன்ன  தேதியில் நட்சத்திரப் பதிவராக இருக்க இயலாத சூழ்நிலை இருந்தது. எனது சூழலை தெரிவித்தேன்.அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு 20.08.2012 முதல் ஒரு வாரம்  நடச்சத்திரப் பதிவராக இருக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.
அவருக்கு  என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   23.10.2011 அன்றுதான் தமிழ்மணத்தில் இணைந்தேன். ஓராண்டிற்குள் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக்  கருதுகிறேன்.பரிந்துரைக்குத் தகுதியானவனாக என்னை மேம்படுத்திக் கொள்வேன்.

  தமிழ் மணத்தின்  தரவரிசையில் 2000 த்திற்கும் மேல் இருந்து மெதுவாக முன்னேறி இன்று 48 இல்  உள்ளேன். அலெக்சா தர வரிசை முன்னேற்றத்திற்கும் தமிழ்மணமே காரணம்.பலருடைய நல்ல பதிவுகளை நமக்கு அறிமுகப்படுத்தியும் நமது பதிவுகளை பிறருக்கும் அறிமுகப்படுத்தும்  அரிய  செயலை தமிழ்மணம் செய்து வருகிறது.

    இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி.தினமும் ஒரு பதிவை கவிதை நகைச்சுவை இலக்கியம் என்று பல்சுவையும் கலந்து கொடுக்க விரும்புகிறேன். இவற்றைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை  தெரிவித்து என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

   தொடர்ந்து தமிழ் மணத்தின் முகப்பு பக்கத்தில் நட்சத்திரப் பதிவாக பதிவுகள் தெரியச் செய்வதற்கான  வாய்ப்பமைத்துக் கொடுத்த தமிழ்மணத்திற்கு  என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த வாரங்களில் ஜொலித்த 10 நட்சத்திரப் பதிவர்கள் 

  1. .அறிவன்#11802717200764379909
  2.  Prabu Krishna
  3.  பக்றுளி ஆறு
  4. DrPKandaswamyPhD 
  5. Ramani 
  6. பழமைபேசி 
  7. தேனம்மை லெக்ஷ்மணன் 
  8. சசிகுமார் 
  9. Federation of Tamil Sangams of North America (FeTNA)
  10. BHARATHIRAJA

 இன்னும் அனைத்து  நட்சத்திரப் பதிவர்களை அறிந்துகொள்ள கீழே க்ளிக் செய்யவும் 

நாளை சந்திப்போம்!

திங்கள், 26 டிசம்பர், 2011

தமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்


இதையும் படியுங்க
புதிர் கணக்கு! விடை-வடிவேலுக்கு உதவியது யார்?
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!நிறைவு பகுதி

******************************************************************************************************************************

    
     
         எனது Blogg ன் இன்றைய தமிழ்மணம் தரவரிசை  982
                         அலெக்சா தர வரிசை                 1652971

(மொக்கையா கொஞ்சம் பதிவுகளை போட்டுட்டு  அரச மரத்தடிய சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பார்க்கிற மாதிரி தினமும் ரேங்க் முன்னேறிடும் நினைக்கறது நியாயமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழாம இல்ல.. இருந்தாலும் ..... )

    நான் எனது வலைப் பதிவை 10.09.2010 அன்று துவக்கினேன். தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் நான் முயற்சிக்கவில்லை. மற்ற வலைப்பதிவுகள்  பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. புதிய தலை முறை இதழில் வலைப் பதிவுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றின்மூலம் கேபிள் சங்கர் என்பவர் ஒரு முன்னணிப் பதிவர்களில் ஒருவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலில் நேரடியாக URL டைப் அடித்து  பார்த்த வலைப் பதிவு அவருடையதுதான். பிறகு ஒரு சில பதிவர்கள் பற்றியும் வலைப் பதிவுகளைப் பற்றியும், கொஞ்சம் அறிந்து  கொண்டேன். பின்னர் வலைப்பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2011 வரை நான் இட்ட பதிவுகள் எட்டு  மட்டுமே. அதன் பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை  அதிகரித்தேன். அப்பொழுது திரட்டிகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான் வலைப்பதிவுகளில் தமிழ் மத்தின் கருவிப்பட்டை இணைத்திருப்பதைக்  கண்டேன். நானும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைத்தேன். இதன் பிறகுதான் எனது வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்டலி,தமிழ் 10 ஆகிய திரட்டிகளிலும் எனது பதிவுகளை பகிரத் தொடங்கினேன்.
       எனது வலைப்பூவின் தர வரிசையை அறிந்துகொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2000 த்திற்கு  மேல்  இருந்தேன். படிப்படியாக 943 ஆக எனது தரவரிசை ஆனது. ஆனால் முன்பைவிட பார்வையாளர்கள் அதிகம்( அதிகம்னா இருவது முப்பது பேறு. ஹிஹி......) இருந்தும். தர வரிசையில் பின்னேற்றம் அடைந்தது. சில நேரங்களில் பதிவிடும்  நாட்களில் தரவரிசையில் பின்னோக்கியும்  பதிவிடாத நாட்களில் முன் நோக்கியும் செல்வது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.

       முதலில் தமிழ்மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எனது பதிவுகள் முதலில் பகிரப்படுவது தமிழ்மத்தின்  மூலமே.

       எனது நோக்கம் தமிழ்மணத்தின் தர வரிசையில் இரு நூறு இடங்களுக்குள் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே.

       ஆனால் கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை கூட எப்படின்னு கண்டுபிடித்து விடலாம்.. ஆனால் தமிழ் மணத்தின் தர வரிசை கணிப்பு ஒன்றும் புரியவில்லை .

            சில பதிவர்கள் அலெக்சா ரேங்கிங் பற்றி பெருமையாக சொன்னதால் எனது அலெக்சா தரவரிசையில் எந்த இடத்தில்  உள்ளது என்று பார்த்தேன். (உனக்கு இதெல்லாம் தேவையா?) .
        நான் சில வலைபதிவுகளின் தரவரிசையை அலக்சா மற்றும் தமிழ்மணம்  தர வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது. (இந்த வெட்டி வேலைக்கு பதிலா நல்ல பதிவு போட்டா  நாலுபேர் பாப்பாங்க).

      உலக அளவில் கணக்கிடப்படும் அலெக்சா  ரேங்கிங் கிற்கும் தமிழ்மணம் ரேங்கிங் கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவற்றில் ஒருசிலவற்றை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.   

*************************************************************************************************************************


உங்க கமெண்ட்டால
                       கொஞ்சம் தட்டுங்க !
             நிறைய திட்டுங்க !
             தாராளமா குட்டுங்க! 

இதை படிச்சீங்களா