என்னை கவனிப்பவர்கள்

விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 செப்டம்பர், 2012

பிள்ளையார் படைக்கும் கலைஞர்

                பிள்ளையார் படைக்கும் கலைஞர் 

   நான் பிள்ளையாரின் தீவிர பக்தன் அல்ல.ஆனாலும் சிறுவயதில் இருந்தே எனக்கு பிள்ளையாரை பிடிக்கும். அதற்கு காரணம் என்னவென்று தெரியவிலை. எங்கள் ஊரில் அம்மன் கோவிலும் உண்டு. அம்மன் கோவிலைப் பார்த்தால் பள்ளி செல்லும் வயதில் எனக்கு பயமாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அம்மன் திருவிழாவில் ஆடு கோழி பலி இடுவார்கள். சாலை ஓரத்தில் கோவில் உள்ளதால் மறுநாள் பள்ளி செல்லும் வழியில் கோவிலுக்கு எதிரே மண் சாலையின் நடுவில் முந்திய நாள் பலியிடப்பட ஆடு கோழிகளின் ரத்தம் மண்ணில் தெரியும். அதைப் பார்க்க பயந்து வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வேகமாக அதைக் கடந்து சென்று விடுவேன். அதனால் அம்மன் கோவில் மீது  சற்று பயம் உண்டு. மற்ற கடவுளர்களும் நம்மை விட்டு சற்றுவிலகி இருப்பதாகவே படுகிறது.. 

   ஆனால் பிள்ளையார் கோவில் அப்படி இல்லை. நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதாகவே தோன்றும் . இவரைப் பார்ப்பதற்காக நாம் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. ஆடம்பரம் ஏது மின்றி அரச மரத்தடியோ தெருக்களின் மூலையோ, சுற்றுசுவரின் ஓரமோ  இவரே நமக்கு காத்திருப்பது போல்தான் தோன்றுகிறது.
பிள்ளையாரின் பலமே அவரது எளிமைதான். பிடித்து வைத்தால் போதும் அதுவே பிள்ளையார்.

பிள்ளையாரை நினைத்த வுடனே எனக்கு என் அம்மா சொல்லிகொடுத்த
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

என்ற அவ்வையின் செய்யுள் நினைவுக்கு வரும். அவர்  இன்று உயிருடன் இல்லை.என்றாலும் விநாயகர் சதுர்த்தி அதை நினைக்க வைக்கிறது.
   ஔவையார் முருக பக்தர்.எளிய பாடல்கள் தந்த தமிழ்ப் புலவர்.அவர் முருகனிடம் கேட்காமல் பிள்ளியாரிடம் சங்கத் தமிழை கேட்கிறாரே என்று நினைப்பதுண்டு. அதனால் பிள்ளையாரை எனக்கும் பிடித்துவிட்டது.இந்த செய்யுள்தான் நான் தட்டுத் தடுமாறி கவிதை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் பிள்ளையார் எனக்கு கருணையும் உங்களுக்கு சோதனையும் கொடுத்தார் என்று சொல்லலாம்.

  பத்தாம் வகுப்பு வரை தமிழ்  மீடியத்தில் படித்த நான் பதினோராம் வகுப்பு (+1) ஆங்கில மீடியத்தில் சேர்க்க்கப் பட்டேன் புரிந்து கொள்வதில் அதிக சிரமம் இருந்தது.  ஔவை  இன்று இருந்தால் இந்த செய்யுளை இப்படி எழுதி இருப்பார் என்று என் நண்பனிடம் நாள் சொல்வதுண்டு. 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
ஆங்கில  மும்தமி ழும்தா  

    இதை கேள்விப் பட்ட என் தமிழாசிரியர் நறுக்கென்று தலையில் குட்டினார்.
    சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி வந்தால்  விட்டால் கொண்டாட்டம்தான். காலையில் களிமண் பிள்ளையாரை வாங்கி மனைமீது வைத்து தூக்கிக் கொண்டு  வரும்போது ஒருமகிழ்ச்சி ஏற்படும்.
   அதைவிட  எனது தந்தைக்கு ஒரு பழக்கம் உண்டு பிள்ளையார் குடையை வீட்டில்தான் செய்வார். ஒரு வாரம் முன்னதாகவே மூங்கில் பட்டைகள் வண்ண காகிதங்கள் இவற்றை எல்லாம் வாங்கி வந்து பண்டிகை அன்று காலை குடை செய்ய உட்கார்ந்து விடுவார். ஐந்தாறு குடைகள் செய்து காய்வதற்காக அதை ஜன்னலோரத்தில் குத்தி வைப்பார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அப்போது அதை நான் உணர்ந்ததில்லை.
  அம்மா சொல்வார், 'காசு கொடுத்தால் இதைவிட அழகான குடைகள் கடையில் கிடைக்கும். இதுக்கு செய்யற செலவைவிட அது குறைவு அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்' என்பார்.ஆனாலும் அப்பா கேட்க மாட்டார். யாருடைய பாராட்டையும் அவர் எதிர் பார்த்ததில்லை.
  உடல் நிலை நன்றாக இருக்கும் வரை அவர் குடை செய்ததை விட்டதில்லை.ஒரு படைப்பை தானே உருவாக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அது மிகச் சாதாரணமானதாக இருந்தாலும் கூட என்பதை இன்று பதிவுலகில் நுழைந்த பின் உணரமுடிகிறது. ஆனால் அதை அவரிடம்  சொல்ல இன்று அவர் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான்  இறந்து விட்டார். என்னதான் அழகான வித்தியாசமான குடைகளை கடைகளில் பார்த்தாலும் என் தந்தை செய்த குடைதான் இன்றும் என் நினைவுக்கு வருகிறது.


 விதம் விதமாக கொழுக்கட்டை சுண்டல் பலகாரங்களும் விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு என்றாலும் அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. 

இவரைத் தாண்டிச் செல்லும் ஒரு சிலர் தலையில் லேசாகக் குட்டிக் கொண்டு தோப்புக் கர்ணம் போடுவது போல் செய்து விட்டுச் செல்வது வேடிக்கையாக இருக்கும். ஒரு தவறு செய்தால் தலையில் குட்டி கொள்ளும்  வழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும்,அதை உண்டாகியது பிள்ளையார்தானே?

 களிமண், அருகம்புல் , எருக்கம்பூ  மாலை,குடை  இவற்றை விற்று ஒரு நாள் பிழைக்க வழி செய்யும் பிள்ளையார் இன்று தெருவுக்கு தெரு பிரம்மாண்டமாக   அமர்ந்து , பக்தர்கள் என்று சொல்லிக்  கொள்பவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஊர் வலத்தின்போது இன்னும் என்ன படாத பாடு படப் போகிறாரோ?
  
 யானை முகத்தை கொண்டதாக இருப்பதால் சிறு பிள்ளையாக இருந்தபோது மனதைக் கவர்ந்த இவர் இன்றும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.


 உங்கள் கவனத்திற்கு: இன்று பல தொலைக்காட்சிகள் விநாயகர்  சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி  பரப்புகிறது. ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும் 
*********************************************************************************
இதைப் படிச்சாச்சா?