என்னை கவனிப்பவர்கள்

புதன், 19 செப்டம்பர், 2012

பிள்ளையார் படைக்கும் கலைஞர்

                பிள்ளையார் படைக்கும் கலைஞர் 

   நான் பிள்ளையாரின் தீவிர பக்தன் அல்ல.ஆனாலும் சிறுவயதில் இருந்தே எனக்கு பிள்ளையாரை பிடிக்கும். அதற்கு காரணம் என்னவென்று தெரியவிலை. எங்கள் ஊரில் அம்மன் கோவிலும் உண்டு. அம்மன் கோவிலைப் பார்த்தால் பள்ளி செல்லும் வயதில் எனக்கு பயமாக இருக்கும்.ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அம்மன் திருவிழாவில் ஆடு கோழி பலி இடுவார்கள். சாலை ஓரத்தில் கோவில் உள்ளதால் மறுநாள் பள்ளி செல்லும் வழியில் கோவிலுக்கு எதிரே மண் சாலையின் நடுவில் முந்திய நாள் பலியிடப்பட ஆடு கோழிகளின் ரத்தம் மண்ணில் தெரியும். அதைப் பார்க்க பயந்து வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வேகமாக அதைக் கடந்து சென்று விடுவேன். அதனால் அம்மன் கோவில் மீது  சற்று பயம் உண்டு. மற்ற கடவுளர்களும் நம்மை விட்டு சற்றுவிலகி இருப்பதாகவே படுகிறது.. 

   ஆனால் பிள்ளையார் கோவில் அப்படி இல்லை. நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதாகவே தோன்றும் . இவரைப் பார்ப்பதற்காக நாம் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. ஆடம்பரம் ஏது மின்றி அரச மரத்தடியோ தெருக்களின் மூலையோ, சுற்றுசுவரின் ஓரமோ  இவரே நமக்கு காத்திருப்பது போல்தான் தோன்றுகிறது.
பிள்ளையாரின் பலமே அவரது எளிமைதான். பிடித்து வைத்தால் போதும் அதுவே பிள்ளையார்.

பிள்ளையாரை நினைத்த வுடனே எனக்கு என் அம்மா சொல்லிகொடுத்த
 
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

என்ற அவ்வையின் செய்யுள் நினைவுக்கு வரும். அவர்  இன்று உயிருடன் இல்லை.என்றாலும் விநாயகர் சதுர்த்தி அதை நினைக்க வைக்கிறது.
   ஔவையார் முருக பக்தர்.எளிய பாடல்கள் தந்த தமிழ்ப் புலவர்.அவர் முருகனிடம் கேட்காமல் பிள்ளியாரிடம் சங்கத் தமிழை கேட்கிறாரே என்று நினைப்பதுண்டு. அதனால் பிள்ளையாரை எனக்கும் பிடித்துவிட்டது.இந்த செய்யுள்தான் நான் தட்டுத் தடுமாறி கவிதை எழுதுவதற்கு காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த வகையில் பிள்ளையார் எனக்கு கருணையும் உங்களுக்கு சோதனையும் கொடுத்தார் என்று சொல்லலாம்.

  பத்தாம் வகுப்பு வரை தமிழ்  மீடியத்தில் படித்த நான் பதினோராம் வகுப்பு (+1) ஆங்கில மீடியத்தில் சேர்க்க்கப் பட்டேன் புரிந்து கொள்வதில் அதிக சிரமம் இருந்தது.  ஔவை  இன்று இருந்தால் இந்த செய்யுளை இப்படி எழுதி இருப்பார் என்று என் நண்பனிடம் நாள் சொல்வதுண்டு. 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
ஆங்கில  மும்தமி ழும்தா  

    இதை கேள்விப் பட்ட என் தமிழாசிரியர் நறுக்கென்று தலையில் குட்டினார்.
    சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி வந்தால்  விட்டால் கொண்டாட்டம்தான். காலையில் களிமண் பிள்ளையாரை வாங்கி மனைமீது வைத்து தூக்கிக் கொண்டு  வரும்போது ஒருமகிழ்ச்சி ஏற்படும்.
   அதைவிட  எனது தந்தைக்கு ஒரு பழக்கம் உண்டு பிள்ளையார் குடையை வீட்டில்தான் செய்வார். ஒரு வாரம் முன்னதாகவே மூங்கில் பட்டைகள் வண்ண காகிதங்கள் இவற்றை எல்லாம் வாங்கி வந்து பண்டிகை அன்று காலை குடை செய்ய உட்கார்ந்து விடுவார். ஐந்தாறு குடைகள் செய்து காய்வதற்காக அதை ஜன்னலோரத்தில் குத்தி வைப்பார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அப்போது அதை நான் உணர்ந்ததில்லை.
  அம்மா சொல்வார், 'காசு கொடுத்தால் இதைவிட அழகான குடைகள் கடையில் கிடைக்கும். இதுக்கு செய்யற செலவைவிட அது குறைவு அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்' என்பார்.ஆனாலும் அப்பா கேட்க மாட்டார். யாருடைய பாராட்டையும் அவர் எதிர் பார்த்ததில்லை.
  உடல் நிலை நன்றாக இருக்கும் வரை அவர் குடை செய்ததை விட்டதில்லை.ஒரு படைப்பை தானே உருவாக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அது மிகச் சாதாரணமானதாக இருந்தாலும் கூட என்பதை இன்று பதிவுலகில் நுழைந்த பின் உணரமுடிகிறது. ஆனால் அதை அவரிடம்  சொல்ல இன்று அவர் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான்  இறந்து விட்டார். என்னதான் அழகான வித்தியாசமான குடைகளை கடைகளில் பார்த்தாலும் என் தந்தை செய்த குடைதான் இன்றும் என் நினைவுக்கு வருகிறது.


 விதம் விதமாக கொழுக்கட்டை சுண்டல் பலகாரங்களும் விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு என்றாலும் அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. 

இவரைத் தாண்டிச் செல்லும் ஒரு சிலர் தலையில் லேசாகக் குட்டிக் கொண்டு தோப்புக் கர்ணம் போடுவது போல் செய்து விட்டுச் செல்வது வேடிக்கையாக இருக்கும். ஒரு தவறு செய்தால் தலையில் குட்டி கொள்ளும்  வழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும்,அதை உண்டாகியது பிள்ளையார்தானே?

 களிமண், அருகம்புல் , எருக்கம்பூ  மாலை,குடை  இவற்றை விற்று ஒரு நாள் பிழைக்க வழி செய்யும் பிள்ளையார் இன்று தெருவுக்கு தெரு பிரம்மாண்டமாக   அமர்ந்து , பக்தர்கள் என்று சொல்லிக்  கொள்பவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. ஊர் வலத்தின்போது இன்னும் என்ன படாத பாடு படப் போகிறாரோ?
  
 யானை முகத்தை கொண்டதாக இருப்பதால் சிறு பிள்ளையாக இருந்தபோது மனதைக் கவர்ந்த இவர் இன்றும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.


 உங்கள் கவனத்திற்கு: இன்று பல தொலைக்காட்சிகள் விநாயகர்  சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி  பரப்புகிறது. ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும் 
*********************************************************************************
இதைப் படிச்சாச்சா?

33 கருத்துகள்:

  1. பண்டிகைகளில் பங்கீட்டில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. அதன் தத்துவங்களும் அரசியலும் புரிந்துகொண்டால் சீ என்று இருக்கிறது. மக்கள் அதே பங்கீட்டை பொதுநல செயல்களுக்கு திசை திருப்பினால்தான் முன்னேற்றம் காண முடியும்.

    பதிலளிநீக்கு
  2. // ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும்//

    ஹி ஹி அவங்க எப்பவும் அப்படித்தான்

    பதிலளிநீக்கு
  3. மரளிதரன் ஐயா... வெண்பாவில்
    அழகான ஈற்றடி கொடுத்திருக்கிறீர்கள்.

    எனக்கும் ஏனோ தெரியவில்லை பிள்ளையாரை மட்டும்பிடிக்கும். நானும் கணபதியைத் தோழா என்று விளித்தே விருத்தம் ஒன்று எழுதியிருக்கிறேன்.

    உங்களின் பதிவை வாசிக்க நிறைவாக இருந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு

  4. மலரும் நினைகள்! இளமைக் கால நிகழ்வுகள்
    மனதிற்கு இதம் தரும் ஒன்றே!

    பதிலளிநீக்கு
  5. விடுமுறை தினத்தில் கலைஞருக்கும்,பிள்ளையாருக்கும் என்ன தொடர்பு என அதிசயித்தேன்!
    நன்று
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

    பதிலளிநீக்கு
  6. தலைப்பையும்.. உங்கள் கவனத்திற்க்கையும் நினைத்து பார்த்து சிரிக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு
  7. தலைப்பைப் பார்த்ததும் வைரமுத்துசார் கவிதையில்..ஒரு வரி ஞாபகத்துக்கு வந்தது..

    ( வைரமுத்து சாரின் இந்தக் கவிதையை மட்டும்தான் இதுவரை படித்துள்ளேன் அதுவும் ஓடியோவாக வந்ததால்)

    உன்னால் முடியும் கடவுளையே படைத்தவன் நீ.. இதுதான் அந்த வரிகள்..

    அழகான நினைவுகள்

    பதிலளிநீக்கு
  8. ரசித்து வாசித்தேன்.ஊருக்குக் கூட்டிப்போனீர்கள்.ஆனாலும் எம்மூரில் நான் இப்படியான வழக்கமுறையைக் காணவில்லை.பெரிதாகப் பக்தி இல்லாவிட்டாலும் ‘அப்பனே பிள்ளையாரே’ என்று சொல்லும் பழக்கமிருக்கிறது என்னிடம் !

    பதிலளிநீக்கு
  9. சதுர்த்தி தின சிறப்புப் பதிவு
    சிறப்பாகவும் இருந்தது
    வித்தியாசமாகவும் இருந்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. //
    பிள்ளையார் படைக்கும் கலைஞர்// ஹா ஹா ஹா ரசித்தேன்

    அருமையான படைப்பு சார்

    பதிலளிநீக்கு
  11. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
    ஆங்கில மும்தமி ழும்தா //

    நான் பிள்ளையாரிடம் இந்த பாடலைப்பாடி ஆங்கிலமும், கணக்கும் கேட்டு இருக்கிறேன்,
    அம்மாவின் நினைவுகள், அப்பாவின் நினைவுகள் எல்லாம் மறக்க முடியாதவை.

    அப்பா தானே குடை செய்வது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். என் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த் பிள்ளையார் பதிவில் என் மகன் செய்த பிள்ளையாரை பகிந்து கொண்டு இருக்கிறேன் மறுமுறை நேரம் இருந்தால் பாருங்கள். நாமே செய்யும் போது அதில் ஆனந்தம் தான் இல்லையா!
    என் கணவர் சரஸ்வதி பூஜைக்கு சரஸ்வதி முகம் செய்வார்கள் அதை வைத்து தான் எங்கள் வீட்டில் பூஜை நடக்கும்.

    சிறு பிள்ளையாக இருந்தபோது மனதைக் கவர்ந்த இவர் இன்றும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.// சிறு குழந்தைகளுக்கு பிள்ளையாரைத்தான் பிடிக்கும். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.


    பதிவு மிக நன்றாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
  12. மிக அருமை...அப்படியே பழைய நினைவுகளை எண்ணி பார்க்க வைக்கிறது...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    பதிலளிநீக்கு
  13. அருமை. நான் சிறுவனாய் இருக்கும்போது எங்கள் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழங்கப் படும் சுண்டல், தேங்காய் சில், நறுக்கிய வாழைப்பழம் போன்ற பிரசாதங்களை பெறுவதற்கு முண்டியடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அதை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் ஒரு தெரு விளக்கு கம்பத்தின் கீழே சிறுவர்களாகிய நாங்கள் ஒன்று கூடி பங்கிட்டு தின்போம். மற்ற கடவுளர்களை விட பிள்ளையார் மட்டும் சிறுவர்களோடு மிக நெருக்கமாக வந்து விடுவதன் காரணம் அவருடைய யானை முகத் தோற்றமும் ஏராளமான தின்பண்டகளுடைய வேடிக்கையான கடவுளாகவும் அவர் இருப்பதால்தான். அதனால்தான் எனக்கும் கூட மிகவும் பிடித்தவராக இருக்கிறார் இந்த அறிவுக் கடவுள்.

    பதிலளிநீக்கு
  14. நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

    ஆயினும், உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    ‘ஆங்கிலமும் தமிழும் தா’--- ஈற்றடி அருமை!

    பதிலளிநீக்கு
  15. விநாயக சதுர்த்தி பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு
  16. குலவுசனப்பிரியன் said...
    பண்டிகைகளில் பங்கீட்டில்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. அதன் தத்துவங்களும் அரசியலும் புரிந்துகொண்டால் சீ என்று இருக்கிறது. மக்கள் அதே பங்கீட்டை பொதுநல செயல்களுக்கு திசை திருப்பினால்தான் முன்னேற்றம் காண முடியும்.//
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலவுசனப்பிரியன்

    பதிலளிநீக்கு
  17. மோகன் குமார் said...
    // ஒரே ஒரு தொலைக் காட்சி மட்டும் இது போன்ற நாட்களில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில்தான் ஒளிபரப்பும்//
    ஹி ஹி அவங்க எப்பவும் அப்படித்தான்//

    கொள்கை! கொள்கை!

    பதிலளிநீக்கு
  18. அருணா செல்வம் said...

    மரளிதரன் ஐயா... வெண்பாவில்
    அழகான ஈற்றடி கொடுத்திருக்கிறீர்கள்.

    எனக்கும் ஏனோ தெரியவில்லை பிள்ளையாரை மட்டும்பிடிக்கும். நானும் கணபதியைத் தோழா என்று விளித்தே விருத்தம் ஒன்று எழுதியிருக்கிறேன்.

    உங்களின் பதிவை வாசிக்க நிறைவாக இருந்தது.
    நன்றி.//
    நன்றி அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
  19. புலவர் சா இராமாநுசம் said...
    மலரும் நினைகள்! இளமைக் கால நிகழ்வுகள்
    மனதிற்கு இதம் தரும் ஒன்றே!//
    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  20. குட்டன் said...
    விடுமுறை தினத்தில் கலைஞருக்கும்,பிள்ளையாருக்கும் என்ன தொடர்பு என அதிசயித்தேன்!
    நன்று
    இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”//
    நன்றி குட்டன்.

    பதிலளிநீக்கு
  21. வரலாற்று சுவடுகள் said...
    தலைப்பையும்.. உங்கள் கவனத்திற்க்கையும் நினைத்து பார்த்து சிரிக்கிறேன்! :)//
    தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வசு

    பதிலளிநீக்கு
  22. சிட்டுக்குருவி said...
    தலைப்பைப் பார்த்ததும் வைரமுத்துசார் கவிதையில்..ஒரு வரி ஞாபகத்துக்கு வந்தது..
    ( வைரமுத்து சாரின் இந்தக் கவிதையை மட்டும்தான் இதுவரை படித்துள்ளேன் அதுவும் ஓடியோவாக வந்ததால்)
    உன்னால் முடியும் கடவுளையே படைத்தவன் நீ.. இதுதான் அந்த வரிகள்..
    அழகான நினைவுகள்//
    நன்றி சிட்டுக்குருவி

    பதிலளிநீக்கு
  23. ஹேமா said...
    ரசித்து வாசித்தேன்.ஊருக்குக் கூட்டிப்போனீர்கள்.ஆனாலும் எம்மூரில் நான் இப்படியான வழக்கமுறையைக் காணவில்லை.பெரிதாகப் பக்தி இல்லாவிட்டாலும் ‘அப்பனே பிள்ளையாரே’ என்று சொல்லும் பழக்கமிருக்கிறது என்னிடம் !//
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு
  24. Ramani said...
    \
    சதுர்த்தி தின சிறப்புப் பதிவு
    சிறப்பாகவும் இருந்தது
    வித்தியாசமாகவும் இருந்தது
    வாழ்த்துக்கள்//
    நன்றி ரமணி சார்.

    பதிலளிநீக்கு
  25. சீனு said...
    பிள்ளையார் படைக்கும் கலைஞர்// ஹா ஹா ஹா ரசித்தேன்
    அருமையான படைப்பு சார்//
    விநாயகர் தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் கௌரவம் குறைந்துவிடுமே.

    பதிலளிநீக்கு
  26. கோமதி அரசு said...
    பதிவு மிக நன்றாக இருக்கிறது.//
    நன்றி மேடம் பார்த்தேன் மேடம்உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. தமிழ் காமெடி உலகம் said...
    மிக அருமை...அப்படியே பழைய நினைவுகளை எண்ணி பார்க்க வைக்கிறது...

    நன்றி,
    மலர்//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மலர்

    பதிலளிநீக்கு
  28. Vivek raja said...
    அருமை. நான் சிறுவனாய் இருக்கும்போது எங்கள் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் வழங்கப் படும் சுண்டல், தேங்காய் சில், நறுக்கிய வாழைப்பழம் போன்ற பிரசாதங்களை பெறுவதற்கு முண்டியடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. அதை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் ஒரு தெரு விளக்கு கம்பத்தின் கீழே சிறுவர்களாகிய நாங்கள் ஒன்று கூடி பங்கிட்டு தின்போம். மற்ற கடவுளர்களை விட பிள்ளையார் மட்டும் சிறுவர்களோடு மிக நெருக்கமாக வந்து விடுவதன் காரணம் அவருடைய யானை முகத் தோற்றமும் ஏராளமான தின்பண்டகளுடைய வேடிக்கையான கடவுளாகவும் அவர் இருப்பதால்தான். அதனால்தான் எனக்கும் கூட மிகவும் பிடித்தவராக இருக்கிறார் இந்த அறிவுக் கடவுள்.//
    நன்றி விவேக்

    பதிலளிநீக்கு
  29. அறுவை மருத்துவன் said...
    நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.
    ஆயினும், உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
    ‘ஆங்கிலமும் தமிழும் தா’--- ஈற்றடி அருமை!//
    நன்றி அறுவை மருத்துவன்.


    பதிலளிநீக்கு
  30. மாதேவி said...
    விநாயக சதுர்த்தி பகிர்வு நன்று.//
    முதல்முறை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி

    பதிலளிநீக்கு
  31. ஆங்கிலமும் தமிழும் தா - ரசித்தேன்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895