என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 14 நவம்பர், 2014

இது பெரியவர்களுக்கு!

                       


   இன்று குழந்தைகள் தினம்!


   இன்றைய குழந்தைகள் பெற்றோரின் ஆசைகளை திணித்து வைக்கும் மூட்டைகள். பந்தயத்தில் வெல்லத் தயார் செய்யும் பந்தயக் குதிரைகள். விளையாட்டையும் வேடிக்கையையும் இழப்பது கூடத் தெரியாமல் இழந்து கிடக்கும் பிஞ்சுகள். கீ கொடுத்தால் இயங்கும் பொம்மைகள். அளவுக்கு மீறிய பாச வன்முறையால் தன்னொளி தர இயலாத  நிலவுகள்.  

 எதிர்காலத்தை உறுதிப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களுடைய நிகழ்காலத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறோம் 

இதோ ஒரு குழந்தையின் குரல். செவி சாய்த்துப் பார்ப்போம் வாருங்கள் 

நான் மக்குப் பாப்பாவா?

                     மக்குப் பாப்பா நான்தானாம்
                          மறதி அதிகம் கொள்வேனாம்
                     பக்கத்து வீட்டுப் பாப்பாதான்
                           படிப்பில் என்றும் படுஜோராம்

                     எண்பது மார்க்குகள்  போதாதாம் 
                          இன்னும் கொஞ்சம் எடுக்கணுமாம் 
                     முதல் மார்க்  வாங்கத் தெரியாத
                            முட்டாள் குழந்தை நான்தானாம்

                      அம்மா என்று அழைத்தாலே
                             மம்மிக்கு கொஞ்சமும் பிடிக்காது
                      அப்பா என்று கூப்பிட்டால்
                              சாக்லேட் எனக்கு கிடைக்காது

                       எடுத்த இடத்தில் மீண்டும்தான்
                              பொருளை வைக்கத் தெரியாதாம்
                       கொடுத்த பொருட்கள் எல்லாமே
                               உடனே  உடைத்து விடுவேனாம்

                        மண்ணில் ஆட ஆசைதான்
                                மம்மியின் அனுமதி கிடைக்காது
                        கண்ணில் தூசு விழுந்திடுமாம்
                                கைகால் அசுத்தம் ஆகிடுமாம்

                        துணியை வெளுக்க முடியாத
                                அழுக்காய் ஆக்கி வருவேனாம்
                        தனியாய் உண்ணப் பழகலையாம்
                                தவறை திருத்தத் தெரியலையாம்

                         பாட்டி எனக்குக் கதை சொல்வார்
                                 போதும் போய்ப்படி என்பார்கள்
                         போட்டி நாளை நடக்கிறதாம்
                                 பயிற்சி இன்னும் போதாதாம்

                          புத்தகக் காட்சிக்கு சென்றோமே
                                 சுற்றி சுற்றிப் பார்த்தோமே
                          வித்தகக் கதைகள் பல கூறும்
                                   புத்த கங்கள் கண்டேனே

                            எனக்குப் பிடித்த கதை உள்ள
                                  புத்தகம் வாங்கக் கேட்டேனே
                             உனக்கு அறிவு அதனாலே
                                    வளராதென்று சொல்லி விட்டு

                            முன்பு வாங்கிய அகராதி
                                    மூலையில் கிடப்பதை அறியாமல்
                             புத்தம் புதிய அகராதி
                                      வாங்கிக் கொடுத்தார் படித்திடவே

                             அப்பா அம்மாஎன்மேலே
                                     சாட்டும் குற்றங்கள் ஏராளம்
                            இப்போ தெனக்கு   நேரமில்லை
                                   ஞாயிறு சனியில் சொல்கின்றேன்

                            ஊஹூம்! ஊஹூம்! முடியாது
                                  சனியில் கராத்தே கிளாஸ் உண்டு
                            ஞாயிற்றுக் கிழமையும் முடியாது
                                    யோகா வகுப்பு அன்றுண்டு

                             தந்தை தாயின் கனவுகளை 
                                   பொதியாய் நானும் சுமக்கின்றேன்.
                             அந்தப் பொதியை இறக்கியதும் 
                                     மீதம் உள்ளதை சொல்கின்றேன் 

                      ************************************



      குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 


இதையும் படித்துப் பாருங்கள் 



25 கருத்துகள்:

  1. குழந்தைகளின் இயல்பு அறிந்து எழுதிய அருமையான கவிதை! எல்லா பெற்றோரும் படித்தல் நன்று!

    பதிலளிநீக்கு
  2. இந்த கவிதையை எல்லா பெற்றோர்களுக்கும் சமர்ப்பணம் செய்யலாம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. தந்தை தாயின் கனவுகளை
    பொதியாய் நானும் சுமக்கின்றேன்.//உண்மை

    பதிலளிநீக்கு
  4. அற்புதமாக.. எத்தனை சிறப்பாக இருக்கிறது உங்கள் கவிதை!

    ஒரு குழந்தையாக அதன் மனநிலைக்குச் சென்று பாடிப் பார்க்க
    மனது வலித்து கண்கள் கரைந்தன சகோதரரே!

    பெற்றாரின் கனவுகளை பொதிகளாகச் சுமக்கின்ற குழந்தை..!
    இந்த வரி ஒன்றே போதும்! கவிதையும் பொருளும் உச்சம்!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  5. இன்றைய குழந்தைகளின் நிலையை நிதர்சனமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அண்ணா!!!
    மிக அருமையான பாடல். இது டெம்ப்ளேட் வாசகம் அல்ல!!!! ஆனா இப்படி குழந்தைகளின் தனித்திறனில் அக்கறை காட்டும் போதும், மதிப்பெண் குறைந்தால் அடிக்கவில்லை என்றும் என் தோழி நான் பொறுப்பா பிள்ளை வளர்க்கலை என்கிறாளே!! நீ டீச்சர், உன் பெண்ணை ஏ கிரேட் வாங்கவைக்க முடியலையே என்கிறாள். அவளுக்கு என்ன தெரியும் பத்தாம் வகுப்புவரை நானும் சராசரிக்கும் கீழே அல்லவா இருந்தேன்:) குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு அவசியமான பதிவுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைதிலி கவலை வேண்டாம்! தங்கள் குழந்தைகள் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்! அவர்கள் வாழ்க்கையை ரசித்து, வாழக் கற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பமான துறையில் ஒளிரட்டும்....ரோபோக்களாக மாற வேண்டாம். தங்கள் வளர்ப்பு மிகவும் சரியே பாராட்டுக்கள்! - கீதா

      நீக்கு
  7. குழந்தைகள் நலன் மற்றும் அவர்கள் எதிர்காலம் என்றே நினைத்து
    அவர்களின் நிகழ்காலத்தை வெறுமையாக்கி விடாதீர்கள் என்று
    தீட்சண்யமாக உரைக்கும் பதிவு....

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகளை குழந்தைகளாய் நினைத்து பார்க்க வைத்த பாடல். நாம் குழந்தைகளாய் / சிறுவர்களாய் இருந்தபோது செய்தவற்றை கொஞ்சம் நினைத்து பார்த்தோமானால் இந்தநிலை வராது. அந்த குழந்தைத்தனங்களை மறந்துவிட்டால் பின் நாம் பெரியவர்களாகிவிட்டோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.

    பதிலளிநீக்கு
  9. யதார்த்த நிலையை விளக்கும் பாடல். நீங்களும் அநேக பெற்றோர் செய்யும் தவறைச் செய்யவில்லைதானே.

    பதிலளிநீக்கு
  10. தந்தை தாயின் கனவுகளை
    பொதியாய் நானும் சுமக்கின்றேன்......
    என்ன தான் செய்ய முடியும்!
    பெற்றோர்களாகத் திருந்த வேண்டும்.
    நல்ல பதிவு...திருந்துபவர்கள் திருந்தட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. நச்... மனதில் படியும் படியான பாடல்

    பதிலளிநீக்கு
  12. இன்றைய குழந்தைகளின் மனதை அப்படியே படம்பிடித்தது கவிதை! பெற்றோர்கள் இதை படித்தாவது திருந்த வேண்டும்! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. "எடுத்த இடத்தில் மீண்டும் தான்
    பொருளை வைக்கத் தெரியாதாம்
    கொடுத்த பொருட்கள் எல்லாமே
    உடனே உடைத்து விடுவேனாம்" என
    அழகாகக் கையாளப்பட்ட
    குழந்தைகளுக்கான பாடல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. பிள்ளை என் விளையாட்டெல்லாம் தொல்லை என்கிறீர்
    தொல்லை கொண்ட தோரணங்களாக்கி என்னை
    தொங்கக் கட்டுகிறீர்
    பிள்ளைப் பருவம் தாண்டித்தானே பெற்றவரானீர் கற்றுணர்ந்தவர்தானே பெற்றேரே நீவிர் கல்லாதவரென்றுமை எப்படி எடுத்துரைப்பேன்
    ஆசை உமக்கும் உண்டென்பதை அறிவேன்
    அதற்கொரு கால நேர அட்டவணை குறித்திட்டால்
    அதன்படி நடப்பேன்
    எனக்கும் ஒரு இதயம் இருக்கிது
    ஏன் மறந்தீர் பெற்றோரே...

    முரளிதரன் தங்களின் – இக் கவிதை
    மக்குப் பாப்பா அல்ல மதிநுட்பம் கொண்ட பாப்பா அழகோ அழகு இக் கவிதைச் சாரலில்
    நன்கே நனந்து மகிழ்வுற்றேன்....

    ValvaiSuyen@gmail.com
    KavignarValvaiSuyen.blogspot.ch

    பதிலளிநீக்கு
  15. தந்தை தாயின் கனவுகளை
    பொதியாய் நானும் சுமக்கின்றேன்.
    அந்தப் பொதியை இறக்கியதும்
    மீதம் உள்ளதை சொல்கின்றேன் //

    உண்மை, நன்றாக சொன்னீர்கள். பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான ப்திவு நண்பரே! பாடல் அருமை! குழந்தைகள் கீ கொடுத்தால் இயங்கும் பொம்மைகளோ, ரோபோக்களோ அல்ல. அவர்கள் கொத்தடிமைகள் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டால் நல்லது! அருமை அருமை!

    பதிலளிநீக்கு
  17. எனது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ..
    கலக்கீட்டீங்க
    கிழிச்சுக் கோத்துட்டீங்க ..
    தம 12b

    பதிலளிநீக்கு
  18. அருமை முரளி. மிகவும் அருமை. (என் பின்னூட்டத்தில் நீங்கள் சுட்டிய அருமை இல்லிங்கோ.. இது உண்மையாலுமே அருமை)
    குழந்தைகளின் குழந்தைமையைத் தொலைத்துவிட்டு பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் பெரியவர்களின் குழந்தைத்தனத்தை என்னென்பது? அருமையான குழந்தைகளுக்கேற்ற மாச்சீர் மாச்சீர் காய்ச்சீர் எனும் அறுசீரில் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.. என் இனிய பாராட்டுகள். இதே பொருளில் நானும் ஒன்னு எழுதியிருப்பதைப் பார்க்க அழைக்கிறேன் - http://valarumkavithai.blogspot.com/search? அல்லது அல்லது என்வலையின் தேடுதல் பெட்டிக்குச் சென்று “முட்டாள் மாணவர் யாருமில்ல“ என்று போட்டுப் பார்க்க வேண்டுகிறேன். நன்றி .

    பதிலளிநீக்கு
  19. இதைப் படித்த பின், குழந்தையாயிருந்து சற்றே வளர்ந்து குமரியாகவும் ஆகாத ஒரு பதின்பருவச் சிறுமியின் குழப்ப மனநிலை... ரொம்ப நாளைக்குப்பிறகு எனக்குள் ஒரு கவிதையாய்ப் பூத்தது.. நாளை வந்து பார்க்கவும் .உங்களைப் போல நல்ல ஆசிரியர்- அலுவலர் -அப்பாவும் ஆன ஒருவர்க்குத்தான் அது பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    அண்ணா.
    நல்ல கவி மூலம் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  21. ஐயா,.............உண்மையில்குழந்தைகளின்பாட்டை கண்முன்காண்பிதீர்கள்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895