என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

புதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்தது

  

புதுக் கோட்டை வலைப் பதிவர் சந்திப்பு  பற்றி பெரும்பாலோர் எழுதி விட்டனர்.ஏனோ என்னால் உடனடியாக எழுத இயலவில்லை.மிக தாமதமாக எழுதியதற்கு  காரணம் சொல்வது நன்றாக இருக்காது. அதனால் மன்னிப்பு மட்டும்  கேட்டுக் கொண்டு சுருக்கமாக விழா பற்றி கூறிவிடுகிறேன்.
  வலைப் பதிவர் திருவிழாவிற்கு புதுக்கோட்டைசெல்லுமுன்   கைபேசியை சில மணி நேரம் அணைத்து விட்டேன். சனிக்கிழமைகளிலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக அழைப்பது வழக்கமாக இருந்ததன் விளைவே அது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா தமிழ்ப் பதிவுலகை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. நாளொரு போட்டியும் பொழுதொரு அறிவுப்புமாக களைகட்டிக் கொண்டிருந்ததை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது 

    ஒருங்கிணைப்பாளராக  பொறுபேற்றுக் கொண்ட கவிஞர் முத்து நிலவன் பம்பரமாய்  சுழன்றார். அவருக்கு உறுதுணையாக புதுக்கோட்டை பதிவர்களை சாட்டையின்றி சுழல வைத்தார். 
     இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகள் பதிவர்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடியதாய் அமைந்திருந்தது...பதிவர்கள் ஒருவரை ஒருவர்  சந்தித்து கருத்த்துகளை பரிமாறிக் கொள்வதே பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு வலையுலகில் தமிழை முதன்மை இடத்திற்கு கொண்டு வரப்படவேண்டும் என்ற நோக்கத்தையும் கூடுதலாக கொண்டு அமைந்திருந்தது குறிப்பிட தக்கது. அதற்கான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல் வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது.செலவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் துணிந்து செயலில் இறங்கியது முத்துநிலவன் தலைமையிலான புதுக்கோட்டைப் படை. இவர்களோடு இணைந்து  பங்கேற்பாளர் படிவம் வடிவமைத்தது தொடங்கி விழா நேரடி ஒளிபரப்பு செய்வது வரை  திண்டுக்கல் தனபாலனின் பங்கு அசாதாரணமானது என்பது எல்லோரும் அறிந்ததே
       ஏற்கனவே  முந்தைய பதிவர் சந்திப்புகளுக்கு தனி வலைப்பூ தொடங்கி விழா தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன என்றாலும் புதுக்கோட்டை விழா வலைப்பூ ஒரு தனி இடத்தை பெற்றது எனலாம். விழா பற்றிய  பதிவுகள், போட்டிகள் பற்றிய விவரங்கள் , குறிப்புகள் அறிவிப்புகள் என 45 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது/ 
     .
  கடந்த மூன்று வலைப் பதிவர் சந்திப்புகளிலும் தவறாமல் கலந்து கொண்ட நான் இதில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் , தடை ஏதும் வந்துவிடக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நல்ல வேலை அப்படி ஏதும் நடக்கவில்லை 
   சென்னையில் இருந்ததால் அழைப்பிதழை தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநருக்கும் இணை இயக்குநருக்கும் சேர்த்துவிடும்படி முத்துநிலவன் அவர்கள் என்னிடம் கூறி இருந்தார். ( தமிழ் இணைய கல்விக் கழகத்துடன் நீச்சல் காரன் மூலம் ஏற்பட தொடர்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். முத்துநிலவன். அதன் விளைவே போட்டி அறிவிப்புகள்) இயக்குநர் அவர்களிடம் விழா அழைப்பிதழை அளித்துவிட்டு  விட்டு வீடு திரும்பி இரவு சிலம்பு எக்ஸ்பிரசில் புறப்பட்டேன்..  
    நீச்சல்காரன்,புலவர் ராமானுஜம், சேட்டைக்காரன் அதே ரயிலில் வருவதாக அறிந்தோம். உடல் சிரமங்களைப் பாராமல் வந்த புலவர் அவர்களின் ஆர்வம் ஆச்சர்யப் பட வைத்தது. பதிவர்களை ஒருங்கிணைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு உள்ளவர் அல்லவா?
    அதிகாலை ரயில் புதுக்கோட்டை அடைய  மலர்த்தரு கஸ்தூரி ரங்கனும்,அரும்புகள் மலரட்டும் பாண்டியன் உள்ளிட்ட விழாக் குழுவினர் இன்முகத்துடன் வரவேற்க தேநீர் அருந்திவிட்டு தங்கும் விடுதியை அடைந்தோம். அதே ஹோட்டலில்தான் , மூத்த பதிவர்கள் ரமணி, ,ராய செல்லப்பா , கவியாழி கண்ணதாசன்  ஆகியோரையும் சந்தித்தோம்... சிறிது நேரம் சேட்டைக்காரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க நேரம்போனதே  தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாலகணேஷ் அவர்களும் வந்து சேர குளித்துவிட்டு ஆட்டோவில் விழா அரங்கிற்கு புறப்பட்டோம்.
    சீருடையுடன்   அணிந்த விழாக் குழுவினர் சுறுசுறுப்பாக வலம் வந்து வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தனர், பெயரைப் பதிவு செய்து  ஒரு அடையாள கைப்பை ஒன்றை அளித்தனர். அதில் பெரு முயற்சியுடன் தயாரிக்கப் பட்ட வலைப் பதிவர் கையேடு , பேனா, குறிப்பு நோட்டு, அடங்கிய  கைப்பை ஒன்றை வழங்கினார்  .
  கவிதை ஓவியக் காட்சியை புலவர் ராமானுஜம் அவர்கள் திறந்து வைத்தார். ஓவியங்களும் கவிதையும்  தங்களில் சிறந்தவர் யார் என்று பட்டிமன்றம்  நடத்திக் கொண்டிருந்தன. அதில் தளிர் சுரேஷ்,சேட்டைக்காரன்  அரசன், என நானறிந்த நண்பர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன.
      சிறிது நேரத்தில் தங்கம் மூர்த்தி அவர்கள் கம்பீரமான குரலில் அழகு தமிழில்  தொகுப்புரை வழங்க  விழா தொடங்கியது. முத்து நிலவன் இங்கும் அங்குமாக நிற்க நேரமின்றி பணியாற்றிக் கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை கணினி தமிழ் சங்கத்துக்கு வித்திட்ட முதன்மைக் கல்வி அலுவ்லர் அருள் முருகன், தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் தமிழ்ப்பரிதி , விக்கி பீடியா திட்ட இயக்குனர் ரவிசங்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் சிறப்பான உரையாற்றினர்.  இடை இடையே பதிவர் அறிமுகமும் நடை பெற்றுக்  கொண்டிருந்தது. 
    விக்கி பீடியாவில் 200 கட்டுரைகள் எழுதி சாதனை புரிந்த முனைவர் ஜம்புலிங்கம், அன்பு நண்பர் ஜோதிஜி,கரந்தை ஜெயகுமார்,தமிழ் இளங்கோ ,ஜி.எம்.பி, பழனி கந்தசாமி, குடந்தையூர் சரவணன், துளசி தரன்,நிகழ்காலம் எழில்.அன்பே சிவம் சிவசக்தி, திருப்பதி மகேஷ்,கோவை,ஆவி, அரசன்,சீனு,தமிழ்வாசி பிரகாஷ், கவிஞர் மதுமதி, கடற்கரை விஜயன், பகவான்ஜிஅசத்தல் பதிவுகளால் கலக்கிக் கொண்டிருக்கும் கூட்டாஞ்சோறு எஸ்.பி.செந்தில் குமார்  உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியது  மகிழ்ச்சி அளித்தது 

   பாண்டியன்,மைதிலி,கஸ்தூரி ரங்கன்,கீதா, ஜெயலட்சுமி ஆகியோர் விழா  பணிகளுக்கிடையேயும் நம்மிடையே உரையாடிவிட்டு சென்றனர்.
அம்மாதான் பெஸ்ட் குக் என்று சொன்ன குட்டிப் பதிவரும் மைதிலி -கஸ்தூரி ரங்கன் செல்லப் பெண்ணுமான நிறைமதி  . தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட தன்னாலியன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். இனிமையான குரலில் தமிழ்ப் பாடல்கள் பாடியவரும் கவிஞர் பேச்சாளருமான   மகாசுந்தரின் இனிய மகள் சுபாஷிணி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். 

கரந்தை ஜெயகுமார் அவர்களின் வித்தகர்கள் நூல் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. அதில் இடம் பெற்றுள்ள வித்தகர்கள் கர்னல் கணேசன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் பங்கு பெற்று பேசியது சிறப்புக்குரியது . நம் பதிவுலக நண்பர் ரூபன் அவர்களின் கவிதை நூலான "ஜன்னலோரத்து நிலா" வெளியிடப் பட்டது. திண்டுக்கல் தனபாலன் நூலைப் பெற்றுக் கொள்ள ரமணி அவர்கள் நூல்பற்றி பேசினார். நூல் வெளியிட்ட இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 மாலையில் எழுத்தாளர்  எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். பதிவர்கள் என்ன  எழுத வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும்  ஆக்க பூர்வமான கருத்துகளையும் கூறினார். உரைக்குப் பின்னர் பதிவர்களின் கேள்விகளுக்கு   பதில் அளித்தார். காலையில் இருந்து மாலை வரை அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது குறிப்பிடத் தக்கது.
  மதிய உணவும் மலையில் வழங்கப்பட்ட குழிப் பணியாரத்தின்  சுவையும் அவை அன்புடன் பரிமாறப் பட்ட விதமும் இதை விட சிறப்பான உணவை உண்ணும் வரை நாவிலும்  நினைவிலும்  இருக்கும்.
இத்தனை நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா என்று தொடக்கத்தில் சந்தேகம் வந்தது என்னவோ உண்மை. அத்தனை நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள்   நடத்தி காட்டியது புதுக்கோட்டை விழாக் குழு.
     போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்  இணையக் கல்விக் கழகத்துடன் இனிது நடத்திய போட்டிகளில் ஒன்றில் என்னை நடுவாராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு அக்குறையப் போக்கியது 

   கஸ்தூரி ரங்கன் ரயில் ஏறும் வரை கூடவே இருந்து நேரம் போவதே தெரியாமல் சுவையான தகவல்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு  வழி அனுப்பி வைத்த பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.
பல நாட்கள் திட்டமிட்டு பாடுபட்டு எப்போதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு விழாவை வெற்றிகரமாக நடத்திய முத்துநிலவன் தலைமையிலான விழாக் குழுவினருக்கு பதிவர்கள் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டிகளில் வென்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 
  விழாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும், பெயர் வெளியில் தெரியாமலும் பங்காற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. வலையுலகை சாராத பல்வேறு தரப்பினரையும் தமிழ்ப் பதிவுலகை உற்று நோக்க வைத்த பெருமை இந்த விழாவுக்கு கிடைத்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்.  

*******************************************************************************

34 கருத்துகள்:

  1. எங்கே இந்த மூங்கில் காற்றைக் காணோமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். சரியாகத் தமிழ்நாட்டில் வடகிழக்கு(?) பருவமழை தொடங்கிய நாளில் காற்றுவீசுகிறது! எப்போதும்போல (வெற்றுப் புகழ்ச்சியோ, விதண்டாவாதக் குறிப்புகளோ இல்லாமல்) சமநிலையில் நின்று விழாவைப்பற்றிய பதிவு மிகவும் மனநிறைவைத் தந்தது முரளி அய்யா. சென்னையில் தாங்கள் தஇக இயக்குநரை நேரில் பார்க்கும்போது எப்படி நேரில் வந்து உதவிசெய்தீர்களோ அவ்வாறே அழைப்பிதழை நேரில் தந்தும் உதவியிருக்கிறீர்கள். விழாக்குழுவின் சார்பில் நன்றி. அனேகமாக விழாவைப் பற்றிய நிறைவுப் பதிவும் தங்களுடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வந்தவர்களுக்கு மட்டுமின்றி, நடத்தியவர்களுக்கும் இது நெஞ்சில் நிற்கும் விழாவே தான் ! நன்றி முரளி. தொடர்ந்து பயணிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் விரிவாகத் தான் எழுத நினைத்திருந்தேன். என்னுடைய பங்கேற்பு இன்னும் இருந்திருக்கலாமோ என்ற குறை எனக்குண்டு. நன்றி

      நீக்கு
    2. //...அனேகமாக விழாவைப் பற்றிய நிறைவுப் பதிவும் தங்களுடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
      அப்படியெல்லாம் விட முடியாதுங்க. நிறைய பேர் விழா அனுபத்தை இன்னும் பதிவு செய்யவே இல்லை. எத்தனை மாதம் தாமதித்தாலும் கட்டாயம் எழுதுவோம்.

      நீக்கு
  2. தங்களை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சென்னையில் இருந்தும் சந்திக்க முடியவில்லை. நேரம் வாய்க்கும்போது மீண்டும் சந்திப்போம்

      நீக்கு
  3. ஒருங்கிணைப்பாளராக பொறுபேற்றுக் கொண்ட கவிஞர் முத்து நிலவன் பம்பரமாய் சுழன்றார். அவருக்கு உறுதுணையாக புதுக்கோட்டை பதிவர்களை சாட்டையின்றி சுழல வைத்தார். //

    உண்மை உண்மை மிகையல்ல. உங்கள் வரிகளையும் மிக ரசித்தோம்...

    நிச்சயமாக பதிவர் உலகை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை இந்தப் பதிவர் விழாவிற்கு உண்டு.

    முதல் இரண்டு விழாக்களில் கலந்து கொள்ளவில்லை அப்போது நாங்கள் பதிவராக இல்லை. மதுரை விழாவிற்குக் கடைசி நிமிடத்தில் பயணம் தடைபட்டது. இட்னஹ் விழாவில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இறுதியில் கலந்து கொண்டு பலரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

    தங்களையும் சந்தித்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

    நல்லதொரு பதிவு.

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் துளசி தரன் சார் தங்கள் பெயர் விடுபட்டுவிட்டது. சேர்த்துவிட்டேன்.. தங்களுடன் பேசியதில் மிக்க மகிச்சி

      நீக்கு
  4. விழா பற்றிய அருமையான செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் ஐயா
    தங்களைச் சந்தித்ததில்மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான நூலை வெளியிட்டீர்கள். தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

      நீக்கு
  5. வணக்கம் சார்.
    தங்களது பதிவு மீண்டும் என்னை விழா நாளுக்குக்கடத்தி சென்று அதன் இனிமையை உணரச்செய்தது...அனைவருடனும் நிறைவாகப்பேச முடியவில்லை என்ற குறை மட்டுமே மனதில் உள்ளது.தங்களது கடுமையான பணிகளுக்கிடையேயும் விழா குறித்து எழுதியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சுருக்கமாக இருந்தாலும், எதையும் விடுபடாமல் அழகாக அருமையாக சொல்லி உள்ளீர்கள்... நன்றி... விரைவில் காரைக்குடியில் சந்திப்போம்...!

    பதிலளிநீக்கு
  7. காற்று புகாத இடங்களில்லை...ஆயினும் மூங்கிலுக்குள் புகுந்துவரும்போது இசையாகிறது....அசைபோடுதலே இசையாக இருக்கும் உங்கள் பதிவு...எங்களை மீண்டும் மீண்டும் விழாவிற்குள் விழவைக்கிறது...உங்கள் வருகை எங்கள் பெருமை...பதிவோ அருமை.....

    பதிலளிநீக்கு
  8. உங்கள் பங்குக் கட்டுரையையும் வாசித்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி...தங்கள் பதிவிற்கு
    எல்லாம் அறிந்து மகிழ்வடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  10. நிறைய சிரமப்பட்டும் இரண்டுவருடங்களாக இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை! புதுக்கோட்டை பதிவர்களை சந்திக்க முடியாமல் போன வருத்தம் இன்னும் நீங்கவில்லை! சிறப்பான தொகுப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. விழா பற்றிய நிகழ்வுகளை அருமையாகத் தங்கள் பார்வையில் தொகுத்து அளித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் பதிவர் விழாவுக்குள் நுளைந்து வந்தேன் நன்று நன்றி நண்பரே
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  13. லேட் என்றாலும் லேட்டஸ்ட் தகவல்கள் :)

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    அண்ணா.

    நிகழ்வை மிக அருமையாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள் இருந்தாலும்
    நிகழ்வில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்ட மறந்து விட்டீர்கள் அண்ணா.... த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மன்னிக்கவும். ரூபன். இப்போது சேர்த்து விடுகிறேன். சிறிது நேரத்திற்கு முன்புதான் அன்பே சிவம் சிவ சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.நீங்கள் வலைப்பக்கம் பார்வையிடுவதற்குள் உங்கள் நூல் வெளியீட்டு செய்தியை சேர்த்துவிடவேண்டும் என்றுநினைத்தேன். இதோ சேர்த்துவிடுகிறேன்.

      நீக்கு
  15. உங்கள் கட்டுரை இன்னும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசி பத்தியில் நீங்கள் சொன்ன கருத்துக்களை அப்படியே வழிமொழிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. "வலையுலகை சாராத பல்வேறு தரப்பினரையும் தமிழ்ப் பதிவுலகை உற்று நோக்க வைத்த பெருமை இந்த விழாவுக்கு கிடைத்துள்ளது என்பதை உறுதியாக சொல்லலாம்." என்ற தங்கள் கருத்தோடு "புதுக்கோட்டை - பதிவர் சந்திப்பு, இனிவரும் பதிவர் சந்திப்புகளுக்குச் சிறந்த வழிகாட்டல்" என்பதையும் மறக்க இயலாதே!

    பதிலளிநீக்கு
  18. பதிவுகள் வழியாகவே சந்தித்துக் கொண்டிருந்த தங்களை நேரில் சந்தித்தது, எனக்கு தெரியாத பல பதிவர்களை தங்கள் மூலமும் ஜோதிஜி மூலமும் அறிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி!
    மறக்கமுடியாத நிகழ்வு! எனக்கும் நேரம் கிடைக்காததால் இன்னும் விழாவைப் பற்றி எழுதவில்லை. அனேகமாக நின்று எழுதிவிடுவேன். என்னுடைய பதிவுதான் கடைசி பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி . போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள்

      நீக்கு
  19. இன்று என்று மாற்றி வாசிக்கவும்.
    த ம 10

    பதிலளிநீக்கு
  20. வரவேண்டும் என்று ரொம்பவும் முயற்சி செய்தும் வரமுடியவில்லை. இத்தனை கோலாகலமான விழாவில் எனக்குப் பரிசு கிடைத்திருந்தும் கலந்துகொள்ள முடியவில்லை என்ற மனவருத்தம் உங்களின் இந்தப் பதிவு படித்து சற்று தீர்ந்தது. நானும் சென்னையில் நடந்த முதல் இரண்டு பதிவர் திருவிழாக்களுக்கும் வந்திருந்தேன். இரண்டாவது வருடத்தில் உங்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.
    நேரடி ஒளிபரப்பைப் பார்த்ததில் ஓரளவு குறை தீர்ந்தது.

    பதிலளிநீக்கு
  21. முதலில் பெரியவர்கள் என்னை மன்னிக்க. நாம் எழுதும் பதிவு வாசகரை சென்றடைந்தது என்பதற்கு பதிவில் இடப்படும் பின்னூட்டங்களே சாட்சி. ஒரு பதிவை என்னதான் ஆயிரக்கணக்கான வாசகர்கள் படித்திருந்தாலும் பின்னூட்டமிடுவது சிறு எண்ணிக்கையிலானவரே. அந்த ஓரிரண்டு பின்னூட்டங்களாவது ஒழுங்காய் இருக்கிறதா. அருமை, சிறப்பா சொன்னீங்க போங்க, கொஞ்சம் நம்ம பதிவையும் படிச்சிட்டு போறது போன்ற அச்சுவார்ப்பு (template comments) பின்னூட்டங்களே மலிந்திருக்கிறது. பதிவை படிக்காதவர்கள் இருக்கட்டும், பின்னூட்டமிடுபவர்கள் உண்மையிலேயே பதிவைப் படித்துதான் இடுகிறார்களா என்ற ஐயம் என் மனதிலுள்ளது.
    இந்த பதிவில் இரண்டு திருத்தங்களை தாழ்மையுடன் முன் வைக்கிறேன்.
    1. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் பெயர் தமிழ்ப்பரிதி என்பதற்கு பதிலாக இதயசந்திரன் என்று இருக்கிறது.
    2. விக்கி மீடியா இந்திய திட்ட இயக்குனரின் பெயர் இரவீந்திரன் என குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் பெயர் இரவிசங்கர்.
    http://blog.ravidreams.net/ravishankar/
    அவரது வலைப்பூவிலுள்ள தன்விவர குறிப்பிலிருந்து சில வரிகள்
    //…ரவி-னு பேர சொன்னா, நம்ம முழு பெயர ரவிகுமார், ரவிச்சந்திரன்னு அவங்களா நினைச்சுக்கிறாங்க. :)
    வேறு சில பதிவுகளிலும் சிறப்பு அழைப்பாளர்களின் பெயர் தவறாக குறிப்பிட்டிருப்பதை கண்டேன். நானும் அவர் பெயரை முதலில் தவறுதலாக மாற்றி குறிப்பிட்டிருந்தேன், பின்னர் திருத்தி விட்டேன்.

    இந்த பதிவில் இதற்கு முன் பின்னூட்டமிட்ட விழாக் குழுவினரை தவறை சுட்டிக்காட்டததற்காக செல்லமாக மெல்லமாக வலிக்காமல் தலையில் குட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி . கட்டாயம் இவற்றை நானே சரி பார்த்திருக்க வேண்டும். மன்னிக்கவும் . தவறு என்மீதுதான் , சரிசெய்து விடுகிறேன்., இனி பெயர் குறிப்பிடும்போது கவனமாக இருப்பேன்.

      நீக்கு
  22. விழாவினைப் பற்றி நீங்கள் ஒன்றும் எழுதவில்லையே என நினைத்தேன். தாமதமாக வந்தாலும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் முரளி. இம்முறையும் கலந்து கொள்ள இயலவில்லை.... சூழல் அப்படி!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895