என்னை கவனிப்பவர்கள்

காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜூலை, 2014

பிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2


       முந்தைய பகுதி  -1

  கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை. சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதைக் குறை கூறி இப்படி  தலையங்கம் எழுதியதாம்.
"ஏற்கனவே மக்கள் வரிச் சுமையால் அவதிப் படுகிறார்கள்.அப்படி இருக்க மதிய உணவு போடுவதற்கு என்று மேலும் ஒரு வரி எவ்வளவு சிறியதாயினும் முதுகெலும்பை முறித்துவிடும். சமுதாயத்தின் பொருளியல் நிலையை வளர்த்தால் மற்றதெல்லாம் சரியாகி விடும் " என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது 

   ஆனால் மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. காமராஜர் சொன்னபடி விரிவாக பல்வேறு கூறுகளை ஆராய்ந்து திட்டம் தீட்டினார்  இயக்குநர் நெ.து.சு.
கல்வித் துறைக்கு தீட்டப்பட்ட பிற திட்டங்களை ஏற்றுக்கொண்ட  உயர் அலுவலர் குழு மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் தயக்கம் காட்டியது. அவர்களுக்கு உரிய விளக்கங்களை அளித்தார் இயக்குநர்.

    விளக்கத்தை கேட்ட திரு வர்கீஸ் என்ற அலுவலர் "உங்கள் திட்டம் சிறப்பானதுதான். மாநிலம் தழுவிய அளவில் இப்படி ஒரு திட்டம் இந்தியாவில் எங்கும் நடத்திய படிப்பினை இல்லை. அதிக செலவு பிடிக்கும் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை இந்திய அரசு கொடுக்கும் என்ற உறுதி இல்லை . நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பகல் உணவு திட்டத்தை மட்டும் ஒத்தி வைக்கலாமென்று இக் குழு பரிந்துரைக்கும் . அதற்கு இசையுங்கள் அடுத்த ஆண்டு யோசிப்போம் ' என்றார். 

      நெ.து.சு சம்மதிக்க வில்லை. விடாப்பிடியாக, "பள்ளிகளில் அதிகமான  பேர்கள் சேர வேண்டும் என்று தலைவர்கள் நினைக்கிறார்கள் . அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு மதிய உணவு இன்றியமையாதது 
"சேர்க்கைக் குறியீட்டை அப்படியே வைத்துக் கொண்டு வெற்றி பெற ஏழை பிள்ளைகளுக்கு சோறு போடுவது ஒன்றே வழி 
"மேலும் இலவச பாடநூல்,எழுதுபொருள் போன்றவை அதிக அளவில் உதவாது என்பதை கண்கூடாக கண்டிருக்கிறோம்.எனவே தயவு செய்து மதிய உணவு திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் " என்று வாதாடினார் நெ.து.சு  

   குழுவினரோ தொடர்ந்து வெவ்வேறு காரணங்களை கூறி  மறுப்பு தெரிவித்தனர் . ஆனாலும் இயக்குநர் சளைக்கவில்லை கடைசி துருப்புச்சீட்டை வீசினார்  " இது முதலமைச்சரின் திட்டம் இதை நிறைவேற்ற வேண்டும் என்று முழுமனதாக நினைக்கிறார். தனியார் பள்ளி நிர்வாகிகள் மாநாட்டில் நாடறிய அறிவித்துள்ளார். அதற்காக புது வரி கூட போடலாம் என்றுகூட தெரிவித்தார் . முன்னதாக என்னிடமும் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு திட்டம் தீட்டச்சொன்னதும் அவரே"

மேலும் "நீங்கள் இது பற்றி ஒருமித்த கருத்து கொண்டிருப்பதால் திட்டத்தை கைவிட குழு கருதுகிறது, ஆனால் இயக்குநர் அடம் பிடிக்கிறார் என்று அறிக்கையில் எழுதி விடுங்கள் அது போதும் " என்றார் அழுத்தமாக 
இதற்கு பலன் கிடைத்தது .

"இது தொடர்பான முடிவை அமைச்சரவைக்கு விட்டு விடுவோம் அமைச்சரவை என்ன சொல்கிறதோ அதன் படி செய்வோம் . இதை இயக்குநர் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் " என்றார் நிதிச் செயலாளர். 
திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதை விட இதுமேல்  என்று இசைந்தார்  நெ.து.சு சில வாரங்களில் அமைச்சரவை கூடியது. கல்வித்துறை திட்டங்கள் பற்றி  ஆலோசனை தொடங்கியது 

   நிதிச் செயலர் தொடங்கினார், "கல்வித்துறை திட்டங்கள் சிறப்பாக தீட்டப்பட்டுள்ளன. தனித் தனியாக பார்க்கும்போது குறையேதும் இல்லை. புதிய திட்டமான பகலுணவு திட்டம் பற்றி மட்டும் நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்கவேண்டும் . இப்படி ஒரு திட்டத்தை எந்த மாநில அரசும் செய்ததில்லை. பல்லாயிரக் கணக்கான சிற்றூர்களில் சோறு போடுவதை கண்காணிக்க முடியுமா?. அதற்கு எவ்வளவு பெரிய அமைப்பு தேவை எவ்வளவு செலவாகும்? செலவுத் தொகை ஆண்டுக்காண்டு பெருகிக் கொண்டே போகுமே . பல சிக்கல்கள் கொண்ட இத் திட்டத்தை தொடங்குவதற்கு பதில் ஏற்கனவே உள்ள திட்டங்களை மேம்படுத்துவதும் விரைவு படுத்துவதும் போதுமானது  என்ற கருத்தே நிலவுகிறது ." என்று முதலமைச்சரிடம் சொல்லிவிட்டு  திட்டத்தைப் பற்றி இயக்குநரை விளக்கச் சொன்னார்.

    நெ,து சு நிதானமாக திட்டத்தை விளக்கினார் . அதன் அவசியத்தை வலியுறுத்தினர் ".................... இத் திட்டம் இருந்தால்தான் சேர்க்கை குறியீட்டை எட்ட முடியும், இல்லாவிட்டால் பழையபடி தொடக்கப் படிப்பும் ஏழைகளுக்கு  எட்டாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது." என்று முடித்தார். அமைச்சரவைக் குழுவுக்கு தலைமை தாங்கிய காமராசரோ, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியமோ வேறு அமைச்சர்களோ வாய் திறப்பதற்கு முன்பாக அங்கு இருந்த மூத்த செயலாளராகிய வருவாய்த் துறை செயலாளர் ஆர்.எம்.சுந்தரம் குறுக்கிட்டார் 

  "இது இன்று எனக்கு சம்பந்தம் இல்லாதது என்றாலும் ஒரு காலத்தில் இத்தகைய திட்டத்தோடு எனக்கு தொடர்பு இருந்து. நான் லேபர் கமிஷனராக இருந்தபோது  நலத்துறை பள்ளிகளில் இருந்த பகல் உணவு திட்டத்தை கண்காணித்திருகிறேன். அப்பள்ளிகளில் போட்ட பகல் உணவால்  கான்ட்ரக்டர்கள் பிழைத்தார்கள் , ஆசிரியர்கள் பிழைத்தார்கள். மாணவர்க்கு கிடைத்த பலன் கொஞ்சமே. ஓராயிரம் பள்ளிகளில் விரயம் ஆவதைப் பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாமென்று சொல்வது என் கடமை . இத் திட்டத்தை கைவிடுவதே நல்லது." என்று முடித்தார்.

   உடனே காமராசர். "இயக்குநர் இதை குறித்துக் கொள்ளட்டும் விரிவான ஆணை பிறப்பிக்கையில் மறந்து விடாமல் இதையும் ஆணையில் சேருங்கள் . கான்ட்ரேக்ட் முறையில் நடத்தக் கூடாது. வேறு வழியை யோசித்து சொல்லுங்கள் "
என்று சொன்னதும் மீண்டும் சுந்தரம் சொன்னார் பாருங்கள்! அதைவிட ஆசிரியர்களை இழிவு படுத்த முடியாது  என்பது சந்தேகமே 

"மாணாக்கர்கள் சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்களே சாப்பிட்டு விடுவார்கள் . மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்" என்றார். 

முதலமைச்சர், கருணை மனதுடைய காமராசர்  இயக்குநரைப் பார்த்து சொன்னார் " உங்கள் திட்டத்தில் ஞாபகமாக ஒரு விதி சேர்த்துவிடுங்கள் . ஆசிரியர்களும் பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம்.அந்தக் கூடுதல் செலவு நியாயமானது ஏற்றுக் கொள்வோம்."

ஒப்பிட்டுப் பாருங்கள் கற்றுத் தேர்ந்த சுந்தரம் ஐ.சி.எஸ் இன் குறுகிய மனமும் படிக்காத மேதை காமராசரின் பரந்த மனதையும். 

இறுதியாக கொள்கை அளவில் பகல் உணவு திட்டம்  ஏற்கப் பட்டது.

    திட்டம் செயல் பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக இயக்குநர் அவர்கள்  
தூத்துக்குடியில் ஒரு ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்  ".... தமிழ் நாட்டு கிராமப் பழக்கம் என்ன? பயிரிட்டு அறுவடை செய்து பின்னர் முதல் அளவை சாமிக்கும், இரண்டாம் அளவை ஊர்க் காவலர்க்கும் மூன்றாவது அளவை உறவினர்களுக்கும் ஒதுக்குவது வழக்கம். இதில் சிறு மாறுதல் செய்யுங்கள் மூன்றாவது அளவையை பள்ளி அன்னதானத்துக்கு என்று  மாற்றுங்கள் ஏழை மாணவர்கள்  பசியாற உண்டு உங்களை வாழ்த்துவார்கள்.." என்று கூற அது  ஆசிரியர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு பொது மக்கள் மத்தியிலும் செய்தி பரவியது. கோவில்பட்டிக்கு அருகில் நாகலாபுரம் என்ற ஊர் மக்கள்  மதிய உணவுதிட்டத்தை செயல்படுத்த முனைந்தனர். இச் செய்தி காமராஜரின் காதுக்கு எட்டியது . இயக்குநரின் அருமையான பேச்சைப் பாராட்டியதோடு மேலும் பல ஊர்களுக்கு சென்று திட்டத்தை தொடங்கும்படி  முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று  பணித்தார்.

     இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் கல்வி அமைச்சர் சி சுப்பிரமணியம் அவர்களுக்கு இத்திட்டத்தில் ஆர்வம் இல்லை. அதே சமயத்தில் எதிர்க்கவும் இல்லை . அவர் நெ.து.சு அவர்களிடம் "உங்கள் நிலை தர்ம சங்கடமானது . முதலமைச்சர் சொன்னதை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்.  நீங்கள் சொல்வதற்காக பல ஊர்களில் ஊர்க்காரர்களைக் கொண்டு தொடங்குவார்கள். அப்புறம் மூடிவிடுவார்கள். உங்களுக்கு பழி வந்து சேரும் . இருந்தாலும் தொடங்குங்கள் ஆனால் அதிகம் எதிர்பார்க்காதீர்கள்." என்று அறிவுரை கூறினார் .
கல்வி அமைச்சரின் வார்த்தைகள் கலக்கமூட்டின என்றாலும் முயற்சிகளைத் தொடர்ந்தார் . 

     கோவில் பட்டிப் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் காமராசர் . அப்போது பலர் இயக்குநர் அவர்களின் வார்த்தைகளைக்  கேட்டு மதிய உணவு போடுவதற்கான ஆயத்தங்களை செய்து வைத்திருப்பதாகவும் இயக்குநர் வந்து தொடங்குவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தனர். முதல் அமைச்சரே இருக்கிறார் அவரே தொடங்கி வைக்கலாம். ஆனால் இயக்குநருக்காகக் காத்திருக்கிறோம் என்று சொன்னதும் சிறிதும் கோபப் படவில்லை காமராசர். சென்னைக்கு வந்ததும். " நெ. து. சுவை அழைத்து நிறைய ஊர்களில் பள்ளிகளில் மதிய உணவு போட ஏற்பாடு  செய்து விட்டு உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். உடனே சென்று தொடங்கி  வையுங்கள். அதைப் பார்த்து இன்னும் பல ஊர்களுக்கும் இத்திட்டம் பரவும் என்றார் அமைதியாக .

      எவ்வளவு பெரிய திட்டம் இதற்கு முன்னோடியான அவர் திறந்து வைக்காமல் தன்னை அனுப்ப நினைக்கும் காமராசரின் பெருந்தன்மையைக் கண்டு நெஞ்சாம் நெகிழ்ந்தார் நெ.து சு.

"ஐயா, இத் திட்டத்தை தங்கள் தொடங்கி வைப்பதே முறையானது .தக்க ஏற்பாடுகளை செய்து விட்டு தங்களை அழைக்க நினைத்தேன். தாங்கள் முந்திக் கொண்டு என்னை அனுப்புகிறீர்கள்.தயவு செய்து நீங்கள் வந்து மதிய உணவு மையங்களை திறந்து வைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். பலமுறை வற்புறுத்திய பின்னே காமராஜர் இசைந்தார். 

   முதலில் பாரதி படித்த எட்டயபுரம் மன்னர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் காமராஜரைக் கொண்டு பகலுணவு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது , ஆனால் எதிர்பாரா விதமாக முதலமைச்சர் சென்னையில் இருக்கவேண்டி இருந்ததால் இயக்குநரையே அனுப்பினார். அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஊர்ப் பள்ளிகளில் பகலுணவு தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன .அடுத்த நாள் வருவதாக காமராசர் தெரிவித்தார்.

முதல் மையம் தொடங்கப் பட்டது. அடுத்த நாள் முதல் நிகழ்ச்சியாக ஒரு பாலத்தை திறந்து வைத்து விட்டு  அக் கூட்டத்தில் பேசினார் முதலமைச்சர் காமராஜர். அங்கு பாலம் பற்றியோ போக்கு வரத்து பற்றியோ அதிகம் பேசவில்லை .அவரது எண்ணம் முழுவதும் ஏழைக் குழந்தைகளில் கல்வி மீதே இருந்து .

"....... யாருக்காக விடுதலை பெற்றோம் கடையரும் கடைத்தேறவே விடுதலை. அது எப்படி சாத்தியமாகும் கல்வி இல்லாமல் .... பிள்ளைகள் வயிறு காய்ந்து கிடந்தால் படிப்பு எப்படி வரும் . பள்ளிக்கு வருகிற ஏழை பிழைகளுக்கு சோறு போட்டால் , நாம் தவறவிட்ட படிப்பு, வரும் தலைமுறைகளுக்காவது கிடைக்கும்....   எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதைவிட முக்கியமான வேலை எனக்கு வேறு இருப்பதாக நான் கருதவில்லை, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஊர் ஊராக வந்து பகல் உணவு திட்டத்துக்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக இருக்கிறேன்"  என்று உணர்ச்சி பொங்கக் கூற  கூட்டம் தன்னை மறந்து எழுப்பிய கைதட்டல் ஒலி அடங்க  வெகு நேரம் பிடித்தது.

     இவ்வண்ணம்  மூவாயிரம் ஊர்களில் பகலுணவு திட்டம் தொடங்கியது.தனது எண்ணம் ஈடேறிக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். "பொது மக்களால் எது செய்ய முடியும் என்று தெரிந்து அதை அவர்களிடம் சொல்லத் தெரிந்தவர்" என்று நெ.து.சுவை மனமார பாராட்டினார் காமராசர். சில இடங்களில் இத் திட்டத்தை நெ.து.சு திட்டம் என்றே அழைத்தனர் .

    வேலூர் நகராட்சிப் பள்ளிகளில் பகலுணவு திட்டம் செயல் படுத்த வேண்டுகோள் விடுக்கப் பட்டது .  நோட்டீசில் நெ.து.சு.வின் பகல் உணவு திட்டத்திற்கு உதவுங்கள் என்று அச்சடிக்கப் பட்டிருந்தது,
அது முதல்வரின் கவனத்திற்கு வந்தது . அந்த நோட்டீசை பார்த்தார் காமராஜர் . நெ.து.சு திட்டம் என்று அடிக் கோடிடப் பட்டிருந்தது. 

முதலமைச்சர் கோபம் கொள்ளவில்லை மாறாக, "பகல்  உணவு திட்டம் நடக்கிறது.அரசு அதற்கு பொறுப்பேற்கவில்லை. செலவு செய்யவில்லை. தடுக்கவும் இல்லை.இயக்குநருக்குக் கட்டுப்பட்டு நடத்துகிறார்கள். அப்புறம் அவர் பெயரில் நடந்தால் எப்படிக் கசந்து கொள்ளலாம்" என்று நிதி அமைச்சர் காதில் விழும்படி கூறினார். 
காமராஜரின் உயர்ந்த உள்ளத்தை என்னென்பது. இப்படியும் ஒருவர் இருக்கமுடியுமா?

   இன்னும் பல்வேறு நடைமுறைகளுக்குப் பின் 01.11.1957 முதல் பகல் உணவுத் திட்டம் அரசின் ஒப்புதல் பெற்ற நிதி உதவிக்குரிய திட்டமாகிவிட்டது .

இன்னும் இத்திட்டம் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். 57 ஆண்டுகளுக்குப் பின் நிலை எப்படி இருக்கிறது? இன்று மதிய உணவு சத்துணவாக மாற்றம் பெற்றுள்ளது, தினந்தோறும் முட்டை வழங்கப் படுகிறது, நகர்ப் புறங்களில் சத்துணவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாலும். இன்றும் இதை நம்பி வரும் ஏழைக் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பல்லாயிரம் பேரை பள்ளிக்கு வரவழைத்த பெருமை காமராஜர் தொடங்கிய பகலுணவு திட்டத்தையே சாரும்.

அதை உறுதியாக செயல்படுத்திய டாக்டர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் .


நன்றி:  நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்"

*******************************************************************

பின்குறிப்பு: இது சுவாரசியம் இல்லாத பதிவாக இருக்கக் கூடும் . ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.


முதல் பகுதி 

பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன் 1



செவ்வாய், 15 ஜூலை, 2014

பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்

 
(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.)

   "பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்" நினைத்துப் பார்க்க முடியாத வார்த்தைகளை ஏழைக் குழந்தைகளுக்காக அந்தப் பெருந்தகை சொன்னார். பசி இருக்கும்போது மனம் எப்படிப் படிப்பை நினைக்கும்? . மாணவன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும்போது எண்ணம் எப்படி வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை அறிய விரும்பும்? ஒரு வேளை உணவு அவனை பள்ளிக்கு வரவைக்கும் என்றால் அதை செய்தே ஆக வேண்டும் என்று பல எதிர்ப்புகளையும் மீறி முடிவெடுத்தார் கல்விக்கண் திறந்த காமராசர். இந்த திட்டம் எப்படி உருவானது?. இன்று எளிதாக பல இலவசங்களை அறிவிக்க முடிகிறது. ஆனால் அப்போதைய நிலை என்ன? வாருங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்

  1957 இல் அப்போதைய கல்வி நிலையை ஆராயவும் தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் உருவாக்கப் பட்டது தொடக்கக் கல்விக் குழு . தொடக்கக் கல்வியை  அரசுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது இக் குழு.   இதன் உறுப்பினர்களில் ஒருவரான அப்போதைய பொதுக் கல்வி இயக்குனர் நெ.து சுந்தர வடிவேலு அவர்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது தனியார் பள்ளி நடத்துபவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இனைந்து ஒரு  மாநாடு நடத்தினர் . அந்த மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் காமராசர் அழைக்கப் பட்டார். 

அவ்விழா மேடையில் அமர்ந்திருந்தபோது நெ.து.சுந்தரவடிவேலு விடம்  பேச்சுக் கொடுத்தார்  காமராசர்.
அப்போது மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  போடப்பட்டு வந்தது. அதை மனதில் கொண்டு கல்வி இயக்குனர்  நெ.து அவர்களிடம், "முன்பு நீங்கள் சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய போது மதிய உணவு போட்டார்களே அதனால் பலன் இருந்ததா?" என்று கேட்டார்
"பள்ளிகளில் மதிய உணவுபோட்டதால் மாணவர் வருகை அதிகரித்தது ஐயா!" பதில் அளித்தார் நெ.து.சு 
"எப்படி சொல்கிறீர்கள்"
”திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு போடுகிறார்கள். சனிக்கிழமை அரை நாள் என்பதால் உணவு போடுவதில்லை அன்றைக்கு வருகை பாதிக்கும் குறைந்து விடும்"

"செலவு எவ்வளவு ஆனது?"

"சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றரை அணா செலவானது"

"இது சரியான கணக்குதானா. ஒன்றரை அணா என்பதற்கு அடிப்படை உண்டா? எப்படி சரிபார்த்தீர்கள்" என்றார் சிக்கனத்துக்குப் பெயர்போன காமராசர்."

இதை எதிர்பார்த்திருந்த நெ.து.சு.அவர்கள் "சென்ற சில ஆண்டுகளாக படி அரிசி பத்தணா விற்கிறது ஒரு படி அரிசி சமைத்தால் அந்த வயதுப் பிள்ளைகள் பத்து பேர் வயிராற உண்ணலாம் .ஒருவருக்கு செலவு 1 அணா. இதர பொருட்களுக்கு  அரையணா செலவாகும். இது சரிதானா என்பதை இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலாளியும் அபோது மாநகராட்சி உறுப்பினருமான ராமநாத ஐயரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டேன்" என்றார்.

அரசு பணம்தானே என்று நினைக்காமல் எவ்வளவு யோசித்து செயல் பட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்!

மேலும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார் கர்ம வீரர் "மாநகராட்சியில் எத்தனை பேருக்கு மதிய உணவு போட்டீர்கள்?. மாகாணம் முழுவதும் போட்டால் எத்தனை பேருக்கு தேவைப்படும் "
"சென்னையில் 15 சதவீதம் பேருக்குத்தான் போட முடிந்தது. இருபது விழுக்காடாக அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு சோறுபோட முடியும் என்று தெரிவித்தார்"

உடனே காமராஜர் " நகரத்தில் 30 விழுக்காடு என்றால் கிராமத்தில் இதைவிட அதிகமாக இருக்குமல்லவா? மூன்றில் ஒரு பங்கு இருந்தால்தான் நிறைவாக இருக்கும், அப்படி எனில் எத்தனை நாளைக்கு போட வேண்டி இருக்கும்" 
  அவரது சிந்தனை எப்படியாவது இத்திட்டத்தை செயல் படுத்திவிட வேண்டும் என்ற நிலையில் பயணித்தது. அதற்காக உடனே மனதில் நினைத்ததை ஆணையாக்கி விடவில்லை . அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர்தான் செயல்படவேண்டும் எண்ணம் உடையவராக இருந்தார் .அதனால் தன் ஐயங்களை தெளிவு படுத்தும் வண்ணம் நெ.து.சு அவர்களை கேள்வி மேல் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்

நெ.து.சு "ஐயா! ஆண்டுக்கு 210 நாட்களுக்கு போட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து இலட்சம் பேர்களுக்கு உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி செலவாகும் " என்று அப்போதே கணக்கிட்டு சொன்னார் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் அந்த செலவு இரண்டு மூன்று மடங்காக உயர்ந்து விடும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
இதை மனதில் இருத்திக் கொண்ட காமராசர் மாநாட்டில் பேசினார். தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆக்கப்பட மாட்டாது என்ற உறுதி அளித்துவிட்டு தொண்டு மனப்பான்மையுடன் கல்வியை வளர்க்க கேட்டுக் கொண்டு தொடர்ந்தார்
  "நமது உடனடி வேலை ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப் பள்ளி தொடங்குதலே ஆகும். ஆனால் பள்ளி இருக்கிற ஊர்களில் கூட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு போவது இல்லை. ஏழைப் பையன்களுக்கும் பெண்களும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தாலும் போதுமென்று ஆடு மாடு மேய்க்கப் போய் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள் அப்படிப் பட்டவர்களை பள்ளிக்கூடங்களுக்கு வரும்படி செய்வது முக்கியம்
"அதற்கு ஏற்ற வழி மாநகராட்சிப் பள்ளிகளில் போடுவது போல மதியம் பள்ளிகளிலேயே உணவு போடுவதே. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இப்போது இயக்குனருடன் கணக்கு போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் ஒரு கோடி இன்னும் சில ஆண்டுகளில் செலவு  பல மடங்காகிவிடும். பரவாயில்லை. நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல . தேவைப்பட்டால் அதற்காக தனிவரிகூடப் போடலாம் . இருக்கிற வரியிலோ புது வரியிலோ படிப்பவர்களுக்கு இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்வோம்.இதற்கு எல்லோரும் ஒத்துழைக்கும்படி விடுகிறேன்." என்ற காமராசர் இயக்குனர் பக்கம் திரும்பி இதற்கான திட்டம் ஒன்றை உடனடியாக தீட்டிக்கொண்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டார்.

 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதை குறை கூறி  தலையங்கம் எழுதியதாம்.

அப்படி என்ன எழுதியது"
 (  தொடரும்)
அடுத்த பகுதிக்கு இங்கே க்ளிக் செய்யவும் 

பின்குறிப்பு: மதிய உணவு வரலாற்றை ஒரே பதிவில் முடித்து விட நினைத்தேன், நேரமின்மை காரணமாக நாளை தொடர்கிறேன்.

இதில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் முன்னாள் பொதுக் கல்வி இயக்குனராகப் பணிபுரிந்த டாக்டர் நெ.து சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்" என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.இந்த நூலைப் படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்பட்டது. பள்ளியில் இவரது கட்டுரையை பாடமாக படித்த நினவு இருக்கிறது என்றாலும் இந்த நூலைப் படிக்கும்போது அவர்  மீது தனி மரியாதை உண்டானது. கல்வித் துறைக்கும் மாணவர்க்கும் ஆசிரியர்களுக்கும் சுயநலமின்றி எப்பேர்ப்பட்ட காரியங்கள் எல்லாம் சாதித்திருக்கிறார் என்பதை அறியும்போது வியப்பு ஏற்பட்டது. இவரைப் பற்றி ஒரு தனி கட்டுரை எழுத வேண்டும் எனது விருப்பம். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.





*********************************************************************

தொடர்புடைய பதிவு 




ஞாயிறு, 15 ஜூலை, 2012

காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.

  
    இன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது  ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 அன்று பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளை பள்ளிகளில் கொண்டாடவேண்டும். மாணவர்கள் அவரை நினைவு கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு உருப்படியான அரசாணை பிறப்பித்தார் கலைஞர். அதுவரை காங்கிரஸார் மற்றும் நாடார் சமூகத்தினர் மட்டுமே காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வந்தனர்.

        கல்விக்காக காமராஜர் ஆற்றிய பணி மகத்தானது. இன்று வோட்டுக்காக பல இலவச அறிவிப்புகள் ஒவ்வொரு ஆட்சியினராலும் அறிவிக்கப் படுகின்றன. ஆனால் உண்மையாகவே ஏழை மக்கள் கல்வி  கற்க தடையாக இருப்பது அவர்கள் வறுமையே என்பதை அறிந்தார் காமராசர். பசி வயிற்றை வாட்டும்போது  படிப்பு எப்படி வரும் என்ற எண்ணமே இலவச மதிய உணவு திட்டத்தை அவர் அறிமுகப் படுத்துவதற்கு  அடிப்படையாக அமைந்தது. சாத்தியமில்லை என்று கருதப்பட்டதை சாதித்துக் காட்டினார் அந்தப் பெருமகன். அப்போதைய பள்ளிக் கல்வி இயக்குனரும் அறிஞருமான நெ.து.சுந்தர வடிவேலு   காமராசரின் திட்டத்தை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார்.  இன்று அது சத்துணவு திட்டமாக உருமாற்றம் அடைந்துள்ளது.
 
        மாணவர்களிடையே ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்ற எண்ணத்தால் சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார்.

        தமிழகத்தின் முதல் அமைச்சராகப் பணியாற்றியாதோடு அகில இந்திய அளவிலும் திறமையை நிரூபித்தவர் காமராசர்.  படிக்காத மேதை அவரை  இந்நாளில் நினைத்துப் போற்றுவது நமது கடமை யாகும்.
              **********************************
         இன்று சன் தொலைக்காட்சியில் பாட்டு தர்பார் என்ற நிகழ்ச்சியில் காமராஜ்- கண்ணதாசன் பற்றி மதன் பாப்  சொன்ன செய்தி சுவாரசியமாக இருந்தது.
    கவியரசு கண்ணதாசன் காங்கிரசில் இருந்து விலகி இருந்த நேரம் அது. மீண்டும் காங்கிரசில் கண்ணதாசனை சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினாராம் காமராசர். நேரில் காமராசரே பேசாமல் தூது அனுப்பியது  கவிஞருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.  அந்த ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்'  என்ற படத்தில் வரும் பாடலில் சேர்த்து வெளியிட்டாராம்.

அந்தப் பாடல் வரிகள் 

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி!
என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!
வேறு  யாரோடும் நான் பேச வார்த்தை ஏதடி!
வேலன் இல்லாமல் தோகை ஏதடி!

      என்ன அருமையான பாடல்! தன் சொந்த அனுபவங்களை பாடலில் சேர்ப்பதில் கவிஞர் வல்லவர் என்பது அனைவைரும் அறிந்ததுதானே!
     காமராசரின்  தாயார் பெயர் சிவகாமியாம். இந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
          
  பின்னர் காங்கிரசில் காமராஜ் முன்னிலையில் இணைந்தாராம் கண்ணதாசன். காலத்தை வென்றவர்கள் அல்லவா இருவரும்!.
       ************************************************ 


இதைப்  படித்து விட்டீர்களா?

வெள்ளி, 27 ஜனவரி, 2012

முகம் தெரியாத முதல்வர்கள்



      63 வது 
      இனிய  
     குடியரசு தின
      வாழ்த்துக்கள்!  


      படத்தில் உள்ள இருவரும் யாரென்று தெரியுமா? இருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. முதலில் உள்ளவர் இந்திய சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்.இரண்டாவதாக உள்ளவர் நமது முதல் குடியரசு தினத்தின்போது முதல் அமைச்சராக இருந்த குமார சாமி ராஜா அவர்கள்.
      நாடெங்கிலும் குடியரசு தினவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்றைய தினத்தில் அன்றைய முதல்வர்கள் யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை தேடித் தெரிந்து கொண்டேன். என்னைப்போல் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அதற்காகவே இந்தப் பதிவு. 
    நாம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றைய தேதி வரை முதல்வர்களாக பணியாற்றியவர்களை பட்டியலிட்டிருக்கிறேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்.

         பெயர்                             பதவிக்காலம்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்        23.03.1947 முதல் 06.04.1949 வரை 
குமாரசாமி ராஜா                                 06.04.1949 முதல்  09.04.1952 வரை 
ராஜாஜி                                  04.04.1952 முதல் 13.04.1954 வரை 
காமராஜர்                               13.04.1954 முதல் 31.03.1957 வரை 
காமராஜர்                               13.04.1957 முதல் 01.03.1962 வரை 
காமராஜர்                                15.03.1962 முதல் 02.10.1963 வரை 
பக்தவச்சலம்                            02.10.1963 முதல் 06.03.1967 வரை 
அண்ணாதுரை                          06.03.1967 முதல் 03.02.1969 வரை 
நெடுஞ் செழியன்                       03.02.1969 முதல் 10.02.1969 வரை 
மு.கருணாநிதி                          10.02.1969 முதல் 04.01.1971 வரை 
மு.கருணாநிதி                          15.03.1971 முதல் 31.01.1976 வரை 
எம்.ஜி.ஆர்.                               30.6.1977 முதல் 17.2.1980 வரை
எம்.ஜி.ஆர்.                               9.6.1980 முதல் 15.11.1984 வரை
எம்.ஜி.ஆர்.                              10.2.1985 முதல் 24.12.1987 வரை
நெடுஞ் செழியன்                       24.12.1987 முதல் 7.1.1988 வரை
ஜானகி எம்.ஜி.ஆர்.                     7.1.1988 முதல் 30.1.1988 வரை
மு.கருணாநிதி                         27.1.1989 முதல் 30.1.1991 வரை
ஜெ.ஜெயலலிதா                        24.6.1991 முதல் 12.5.1996 வரை
மு.கருணாநிதி                         13.5.1996 முதல் 13.5.2001 வரை
ஜெ.ஜெயலலிதா                       14.5.2001 முதல் 21.9.2001 வரை
ஓ.பன்னீர்செல்வம்                     21.9.2001 முதல் 1.3.2002 வரை
ஜெ.ஜெயலலிதா                       2.3.2001 முதல் 13.5.2006 வரை
மு.கருணாநிதி                         13.5.2006 முதல் 15.5.2011 வரை
ஜெ.ஜெயலலிதா                       16.5.2011 முதல் 


*********************************************************************************************