என்னை கவனிப்பவர்கள்

சனி, 13 ஏப்ரல், 2013

வடிவேலு இப்படி செய்யலாமா?


    நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு நம் உள்ளங்களை கொள்ளை கொண்டு சிரிக்க வைத்தவர் வைகைப் புயல் வடிவேலு. திரையில் இவரது பேச்சுக்களும் உடல் அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்னையும் அறியாமல் சிரிக்க வைத்துவிடும். பெயரே தெரியாத படமாக இருக்கும் ஆனால் இவர் காமெடி மட்டுமே நினைவில் இருக்கும் படங்கள் பல உண்டு. 
 
  இவரது நகைச்சுவை அடிவாங்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதிலும் பல செய்திகள் மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றும் . ஒரு படத்தில் ஒரு குத்து சண்டை வீரரிடம் அடி வாங்கிக் கொண்டு அவரிடம் இருந்து கோப்பையை பறித்து "அடி வாங்கினவன் நான் எனக்குதான் கோப்பை" என்று சொல்வதிலாகட்டும், வெங்கி மங்கி என்று தனக்கு பதிலாக இன்னொருவரை அழுவதற்காக வைத்துக் கொள்வதிலாகட்டும், "ஒரு திரிஷா இல்லைன்னா ஒரு திவ்யா" என்று சொல்வதிலாகட்டும் வாழ்க்கை யதார்த்தங்களை மறைமுகமாக எடுத்துக் காட்டுவதாகத்தான்  எனக்கு தோன்றியது.

  வேறு எந்த நடிகரையும் விட அன்றாட வாழ்வில் இவரது வசனங்களை பயன்படுத்தாதவர் மிகக் குறைவு, "ரொம்ப நல்லவன்டா" "உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிட்டாங்களே!" "அவ்வ்வ்வ்வ்வ்" "எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாண்டா", "ரொம்ப நல்லவன்டா, "இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்." "பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்", "ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க." "ஒரு ஆணியும் புடுங்க வேணாம்", "ரைட்டு". "எவ்வள நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது" இப்படி பல பிரபல நகைச்சுவை வசனங்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இப்போதைய சூழ்நிலையில் விவேக்கின் வசனமான எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனமே பொருந்துகிறது என்று நினைக்கிறேன்.

   சமீபத்தில் ஆனந்த விகடனில் வடிவேலு வீட்டுக் கல்யாணம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது. சினிமா பிரபலங்கள் .அரசியல்வாதிகள், திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் உட்பட  உட்பட யாரையுமே அழைக்காமல் தன் மகளின் திருமணத்தை நடத்தி இருக்கிறார். யாரையும் அழைக்கவில்லையே தவிர எல்லோருக்கும் தகவல் சொல்லி இருக்கிறார். 

  கல்யாணத்துக்கு  வர்றதுக்கு சிரமப் பட்டுக்காதீங்க! நானே புள்ளைகளை உங்க வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரேன் என்றும் கூறி இருக்கிறார். கட்டாயம் வருவேன் என்று அடம் பிடித்த  ராஜ்கிரண் ஆர்வி.உதயகுமார் ஆகியோரிடம் சூழ்நிலை சரியில்ல புரிஞ்சுக்கோங்கண்ணே என்று சொன்னதாகத் தெரிகிறது. வடிவேலுவின் இந்த நிலை பரிதாபமாகத்தான் இருந்தது.  எல்லோரையும் அழைத்தால் கலைஞரை அழைக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்டுக் கிடக்கும் தனக்கு மேலும் அது சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று நினைத்திருப்பார் போலும்.தன்னை திடீரென்று ஓரம் கட்டிய சினிமாத் துறையினர் மீது கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கலாம். 

  இந்த திருமணத்தை தனது சூழ்நிலையை சரியாக்கிக் கொள்ள வடிவேலு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அரசியலில் நிரந்தர எதிரிகளும் யாருமில்லை. அதுபோல கலைஞர்களும் நிரந்தர பகைவர்களாக யாரையும் கருதக் கூடாது. அனைவரையும் அழைத்து நடத்தி இருந்தால் யார் உண்மையாகவும் யார் ஒப்புக்காகவும் நட்புடன் இருந்தார்கள் என்பதை வடிவேலு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.
 
  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள், இப்போது புறக்கணிப்பது என்பது வருத்தம் தரக் கூடியதுதான். இது பல பிரபலங்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான் என்றாலும் திரையுலகம் வடிவேலுவை ஒரேயடியாக  புறக்கணித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு சீரணிக்க முடியாததாகத்தான் இருக்கிறது. வடிவேலு உச்சத்தில் இருந்தபோதும் ஆணவத்துடன் நடந்து கொண்டதாகவோ  தெரியவில்லை. (விஜயகாந்த் விஷயத்தை தவிர. அதுவும் யாரோ உசுப்பி விட்டு ரணகளமாக்கிக் கொண்டதாகத் தான் தெரிகிறது.)

   நகைச்சுவை  நடிகர்கள் ஒருமுறை மார்க்கெட்டை இழந்து விட்டால் மீண்டும் எழுச்சி பெறுவது என்பது திரை உலகில் அதிகம்  இல்லை. ஒருவேளை நாகேஷ் போல குணசித்திர நடிகராக  வேண்டுமானால் இன்னொரு சுற்று வலம் வரலாம். ஆனால் இன்னொரு நடிகர் வடிவேலுவின் இடத்தை  நிரப்பமுடியாது. இன்னொருவர் என்ன அவரே வந்தாலும்   அதே இடத்தை  மீண்டும் அடைவது கடினம். இது திரையுலக நிதர்சனம். வடிவேலு இதற்கு விதிவிலக்காவாரா? பார்ப்போம்.

  யாருக்கு எப்படியோ? எனக்கு வடிவேலு முக்கியமானவர். எனது  ஆரம்ப பதிவுகளில் வடிவேலுவை பாத்திரமாக கற்பனை செய்து நான் எழுதிய நகைச்சுவை(?) பதிவுகள் எனக்கு  ஓரளவுக்கு பதிவுலக பார்வையாளர்களை பெற்று தந்தது. அவருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். (என் கற்பனையில் வடிவேலு)

********************************** 

கொசுறு:உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணத்தில்  மொய் வாங்கக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் வடிவேலு.

**********************************************************************************
ஏற்கனவே படிக்காதவர்கள் நேரம்  இருந்தால் இவற்றைப் படியுங்கள்
 



38 கருத்துகள்:

  1. மறுபடியும் வந்தால்....? வரட்டும்... இயல்பான நகைச்சுவைகள் தரட்டும்... குழந்தைகளுக்கும் பிடித்த புயல்...!

    பதிலளிநீக்கு
  2. நல்ல நகைச்சுவை நடிகரின் நிலை இப்படியானது பரிதாபம்தான்! மீண்டு வரட்டும்! இனிய் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. //ஆனால் இன்னொரு நடிகர் வடிவேலுவின் இடத்தை நிரப்பமுடியாது.// உண்மை.

    // இன்னொருவர் என்ன அவரே வந்தாலும் அதே இடத்தை மீண்டும் அடைவது கடினம்.// வடிவேலுவுக்கு நிகர் அவரே.

    பதிலளிநீக்கு
  4. வடிவேலுவின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் அவர் கல்யாணத்திற்கு யாரையும் அழைக்காமல் நடந்து கொண்ட விதத்தின் நியாயங்கள் நமக்குப் புரியும். வடிவேலுவின் நகைச்சுவை கான்செப்ட் நிச்சயம் ஹிட்டாகக் கூடியதுதான். மீண்டு(ம்) வருவாரா வைகைப் புயல், வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். உங்களுக்கும் நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் முரளி!

    பதிலளிநீக்கு
  5. தமிழ் சினிமாவில் நாகேஷும் வடிவேலுவும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் போல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் இவர்களை வெல்லும் திறமை கொண்ட நகைச்சுவை நடிகர்கள் இன்றுவரை பிறக்கவில்லை. (வேறு மொழிகள் எனக்குத் தெரியாது!). யார் அங்கீகரித்தாலும் இல்லாவிட்டாலும் பத்மஸ்ரீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ரசிகர்களின் மனத்தில் இருந்து இவர்களை நீக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
  6. வடிவேலுவின் புறக்கணிப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு.

    பதிலளிநீக்கு
  7. வடிவேலுவின் மார்கெட் சரிவிற்கு முதல் காரணம் சிங்கமுத்து உடன் இல்லாதது இரண்டாவது காரணம்தான் கட்சி பிரச்சாரம் விஜயகாந்த பிரச்சினை எல்லாம். மேலும் இந்த நிகழ்வைப்பார்த்தாலாவது நடிகர்களெல்லாம் திருந்தினால் சரி.

    பதிலளிநீக்கு
  8. வடிவேலுவின் நிலைக்கு காரணம் அவரே தான். அரசியல் மட்டும் காரணமில்லை. தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் கொண்ட கலைஞர்கள் அனைவருக்குமே இக்கதி வரும், எப்பொழுது அவர்களுக்கு பிரச்சினை வரும் எனப்பார்த்திருப்பார்கள், சரியா பிரச்சினையில் மாட்டியதும்,ஒரே அடியா புறக்கணிச்சிடுவாங்க.

    நடிகர் அஜீத் எப்போவோ வடிவேலை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்யவே கூடாதுனு தடைப்போட்டாச்சு,இயக்குனர் ஷங்கர் கூட வடிவேலை ,இம்சை அரசன் படத்திற்கு பின் பயன்ப்படுத்துவதில்லைனு முடிவெடுத்தார்னு செய்தியெல்லாம் வந்தது.

    எஸ்.எஸ்.சந்திரன் எல்லாம் நல்லா பிசியாக நடித்துக்கொண்டிருந்த போது,தீவிரமாக அரசியல் பிரச்சாரம் செய்தவர் தான்.

    எனவே ஒரு நடிகரின் தனிப்பட்ட பழக்கத்தினை வைத்தே பிரச்சினைகளின் போது கை கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  9. பாவம் அவரது சூழ்நிலை அப்படி .என்னமா எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இன்று சிரிக்கவும் மட்ட்ரவரை அழைக்கவும் முடியாமல் தவிக்கிறாரு
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம் பாவம்தான் இதுவும் உபயோகிக்கபடும் விடுங்க

    பதிலளிநீக்கு
  11. அரசியலையும் அரசியல்வாதிகளையும் நம்பி தனது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட ஒரு கலைஞன்...

    தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. அய்யா என்னைப் பொறுத்தவரை நடிகர்கள், தங்கள் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மக்கள் அமோக அதரவளித்து, அரியனையில் அமரச் செய்தார்கள் என்றார் , அவர் நடிகர் என்பதற்காக மட்டுமல்ல என்பதை திரையுலகினர் இன்னும் உணரவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களை நடிகராக மட்டுமல்ல தங்கள் குடும்பத்தில் ஒருவராக மக்கள் எண்ணினர்.
    ஆனால் இன்று ஐஸ்கிரீம் கடை திறப்பு விழாவிற்குச் சென்று, ஐஸ்கிரீம் திண்றுவிட்டு, இலங்கைத் தமிழரைக் காக்க உண்ணாவிரதம் இருக்க வருகிறார்கள். யார் நம்புவார்களை இவர்களை.
    வடிவேலு திரும்ப திரைக்கு வரட்டும், நகைச் சுவைகளை வாரி வழங்கட்டும். வரவேற்போம்.
    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா.

    பதிலளிநீக்கு
  13. அரசியல்..... :(

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
  15. நடிகர் வடிவேலுவைப் பற்றி மனம் நெகிழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருந்த இணைப்புகளுக்கும் சென்று படிக்கிறேன்.

    இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. ஒருவகையில் வடிவேலு செய்தது சரியே என்று தோன்றுகிறது. மீண்டும் அவர் வந்து வெற்றிக் கொடி கட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

    உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் மூங்கில்காற்று சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. ரஜினி, கமல் மாதிரி யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்க கிட்ட போயி ஒட்டிக்கணும்.............

    பதிலளிநீக்கு
  18. எண்ணன்னே பன்றது நாக்கை அடக்கி ஆளனும்னு சும்மாவா சொன்னங்க பெரியவங்க

    பதிலளிநீக்கு

  19. Hayat boyunca kendimizi geliştirmek ve yeni bilgiler edinmek adına çeşitli kaynaklara ihtiyacımız var. Bu nedenle, okunması gereken kitaplar listesine zaman zaman göz atmak faydalı olur. Böylece, hem kişisel hem de mesleki açıdan ilerleme kaydedebiliriz. Herkesin ilgi alanına göre farklı öneriler olsa da, bu liste genel anlamda doğru yönlendirmeleri sağlar. Okuma alışkanlığı kazanmak, yaşam kalitemizi artırmanın en etkili yollarından biridir.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895