என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 10 மே, 2015

மக்களின் முதல்வர் யார்?

                


                 அன்னையர் தின வாழ்த்துகள் 


                 'பண்'ணையே படைத்து சிறந்தால்
                          பாக்களின் முதல்வ ராவார்
                  மண்ணையே ஆள்வோர் சிலரோ
                           தேர்தலால் முதல்வ ராவார்
                  தன்னையே வருத்திப் பெற்ற
                            பிள்ளையைக் காக்கும் நல்ல
                  அன்னையே என்றும் அவரவர்
                              மக்களின் முதல் வராவார் 

தலைப்பை வேறுமாதிரியாக நினைத்து வந்தவர்கள் மன்னிக்கவும்.இது முழுக்க முழுக்க  உண்மையாக அன்னையர் தினத்துக்காக எழுதப்பட்ட கவிதைதாங்க. தொடர்ந்து அன்னையின் அருமையைப் படிங்க 


                 சொல்லவே முடியாத் துயரில்
                      சோர்ந்தே விழுந்த போதும் 
                  மெல்ல எடுத் தணைத்து
                       மழலையை  இதமாய்த் தூக்கி 
                  வெல்லக் கட்டி என்றும்
                         வேங்கையின் மகனே என்றும்
                  செல்லமாய்த் தமிழில் கொஞ்சி
                        சேயினைக் காப்பாள் அன்றோ?            

                   காலை  எழுந்த  உடன்
                          கடிகாரம் கடிது ஓட
                   சேலையை சரியாய்க்  கட்ட
                          சிறிதுமே நேரமும் இன்றி
                   வேலை செய்து கொண்டே
                          விரைவாய் இடையில் வந்து
                    பாலை வாயில் இட்டு
                            பக்குவமாய்  சுவைக்க வைப்பாள்        

                     சத்துணவு நமக்கே தந்து
                            சுவையுணவு  மறந்த போதும்
                     பத்தியம் பலவா றிருந்து
                              பகலிரவாய் விழித்த போதும்
                      நித்திய வாழ்க்கை தன்னில்
                              நிம்மதி இழந்த போதும்
                      சத்தியத்  தாய் தன் அன்பில்
                             சரித்திரம்  படைத்து நிற்பாள்        

                     
                       பேய்க்குணம் கொண்டே பிள்ளை
                                பெருந்துயர் தந்திட் டாலும் 
                       சேய்க்குணம் சிறிதும் இன்றி
                                சிறுமையை அளித்திட் டாலும்
                        நாய்க்குணம் மனதில் கொண்டே
                                நல்லன மறந்திட் டாலும்
                        தாய்க்குணம்  மாறா தம்மா
                                 தரணியில் உயர்ந்த தம்மா!                

                      பச்சிளம் பாலகன் தன்னை
                             அம்மா என்றழைக்கும் போதும்
                      அச்சிறுவன் வளர்ந்து பின்னர்
                             அறிஞனாய் ஆகும் போதும்
                      மெச்சி அவன் புகழை
                               மேலோர்கள் சொல்லும் போதும்
                       உச்சியே குளிர்ந்து போவாள்
                                உவகையில் திளைத்து நிற்பாள்        

                        விண்ணைத் தொடும் அளவு
                               வளர்ந்திட்ட தென்னை போல்
                        என்னையே எடுத்துக் கொள்
                                என்றீயும்   வாழை     போல்
                        தன்னையே நினையா நெஞ்சம்
                                தன்னலம் பாரா நெஞ்சம்
                        அன்னையின் அன்பு நெஞ்சம்
                               அவனியில் இதை எது மிஞ்சும்?       





*********************************************************************************

31 கருத்துகள்:

  1. உலகத்தில் சிறந்தது தாய்மை ,அது தூய்மை ,அது வாய்மை :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை! முரளி! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. முரளி அண்ணா
    அன்னையர் தினத்தில் அன்னைக்கு வடித்த பாக்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளது... படம் மிக அழகு..
    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அன்னைக்கு ஈடுயிணை எதுவுமில்லை...

    அருமை... அருமை... அன்னையர் தின நல்வாழ்த்துகள் என்றும்...

    பதிலளிநீக்கு
  5. அன்னையை பற்றிய அழகான கவிதை!

    த ம +1

    பதிலளிநீக்கு
  6. அறுசீர் விருத்தப்பாக்கள் வடிவில் அன்னையர் தின வாழ்த்து அருமை ஐயா!

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். படித்த அறுசீர் விருத்தங்களின் ஓசை அடிப்படியில் மெட்டுக்கு பாட்டெழுதுவது போலவே எழுதியிருக்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

      நீக்கு
  7. அன்னையர் தினத்தில் அருமையாக பாடல் படைத்திட்ட தங்களுக்குப் பாராட்டும் வாழ்த்துகளும்.

    த ம 10.

    பதிலளிநீக்கு
  8. தாயைப்போற்றிய அருமையான கவிதை எனது கவிதையையும் காண வாருங்கள் நண்பரே..
    தமிழ் மணம் காலையில் மூணாவது.

    பதிலளிநீக்கு
  9. அன்னையர் தினத்தில்
    அற்புதப் பாடல்
    நன்றி ஐயா
    தம 11

    பதிலளிநீக்கு
  10. பத்து மாதம் சுமந்த பாவத்திற்கு, வாழ்நாள் முழுதும் தண்டணையா? படத்தில் உள்ள அந்த தாய் செய்த பாவம்தான் என்ன? அன்னையின் பெருமையை விளக்கும் கவிதை.
    HAPPY MOTHER’S DAY

    த.ம.11

    பதிலளிநீக்கு
  11. அன்னையின் பெருமை பேசும் கவிதை, தங்கள் பாணியில். தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் குழப்பம் இருந்தது. படித்ததும் குழப்பம் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  12. அய்யா,
    வணக்கம் அன்னையர் தினத்தில் தங்கள் பாட்டு கண்டு இன்புற்றேன்.
    உனதரு தவப்பயன் உலகிலே பிறந்தது
    உனதுடல் படுதுயர் உளமது கரைவது
    மனத்திரு நினைவுகள் மடியினும் மடியுமோ?
    கனலிடை மெழுகென உருகுமே நினைவிலே
    அன்னையர் தினத்தில் நினைவுகளை மீட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கே உரிய “எதிர்பார்ப்பைக் கிளப்பும்“ பாணியில் உள்ளே இழுத்து, நல்ல நல்ல செய்திகளைக் கவிதையாக்கித் தந்திருக்கிறீர்கள். வெகுசில இடங்களில் சிலசில சொற்களை மாற்றியமைத்தால் அழகழகான அறுசீர் ஆசிரியப்பா கிடைத்திருக்கும்ல? எனினும் கவிதை அழகுதான். நன்றி த.ம.கூ.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா!
      அறுசீர் விருத்தத்தின் முழுமையான இலக்கணம் அறியேன். பள்ளியில் படித்த அறுசீர் விருத்தம்,எண்சீர் விருத்தம், வெண்பா ,ஆசிர்யப்பா ஆகிய பாக்களின் ஓசை அடிப்படையில் மட்டுமே எழுதி இருக்கிறேன்.
      வெண்பாக்களும் அப்படித்தான் எழுதுகிறேன். வெண்பா தளை தட்டாமல் எழுத மட்டுமே அறிவேன் பிற இலக்கண விதிகளை கற்க முயற்சிப்பேன்.
      நீங்கள் அல்லது விஜூ வலை தளத்தில் யாப்பிலக்கணம் கற்பித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

      நீக்கு
  14. கவிதை அருமையாக இருக்கு. முதல்வர் அப்போதும் அன்னைதான்.

    பதிலளிநீக்கு

  15. மக்களின் ஆசிரியராக உள்ள நீங்கள் எழுதிய கவிதை அருமை. இதை நீங்கள் நேற்று எழுதி வெளியிட்டு இருக்கிறீர்கள் ஆனால் அது எனது தள ரீடிங் லீஸ்டில் சற்று முன்புதான் காணக்கிடைத்தது அது எப்படிங்க?

    பதிலளிநீக்கு
  16. அன்னையர் அனைவருக்குமே உச்சி குளிர்ந்திருக்கும் இப்பாடல் கண்டு அவ்வளவு கருத்துச் சிறப்புக்களுடன் அமைந்துள்ளது அறுசீர் விருத்தம். viju அவர்களின் பதிவில் யாப்பு பற்றி யாப்பிலக்கணம் 5 வரை இட்டுள்ளாரே இலகுவான முறையில் பார்த்து சந்தேககங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் சகோ ! நன்றி தொடருங்கள் கவிதைகள் மேலும் தாருங்கள்.
    ஆமா என் பக்கம் வரக்கூடாது என்று ஏதாவது விரதமா என்ன. ஓ பிஸியா அப்பசரி ...

    பதிலளிநீக்கு

  17. அறுசீர் விருத்தப் பாவரிகளில்
    அன்னையர் பணி மீட்டலா
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. நானும் அரசியல் பதிவு என்று நினைத்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
  19. வெல்லக் கட்டி என்றும்
    வேங்கையின் மகனே என்றும்
    தாயால் மட்டுமே இப்படியெல்லாம் புகழ முடியும். அழகாக உள்ளது தங்கள் கவி. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா17 மே, 2015 அன்று PM 4:47

    அருமை அன்னையர் தினப் பா.
    ஆம் அன்னையரே முதல்வர்.
    என்னிடமும் வலராமே!.

    பதிலளிநீக்கு
  21. மக்களின் முதல்வர், மீண்டும் அரசியல் ரீதியாக முதல்வராகப் போகும் நாளில் உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்தது. அழகான கவிதை! - இராய செல்லப்பா சென்னை.

    பதிலளிநீக்கு
  22. எங்கள் ஊரிலும் ஒன் மக்க என்ன பண்றாக என்று கேப்பாங்க. மக்கள் என்றால் குழந்தைகள். மிக அருமையான கவிதை. அதிலும் தென்னையும் வாழையுமாய் தன்னை முழுமையாகத் தாய் ஈந்து செல்வது சிறப்பு :)

    பதிலளிநீக்கு
  23. நண்பரே...

    தலைப்பை பார்த்து திடுக்கிட்டேன் (?!) என்பது உண்மை...

    மிக அருமையான, மனதை உருக்கும் கவிதை... முதல் படத்திலிருந்து என் மனதை மீட்க முடியவில்லை !

    நன்றி நண்பரே...
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  24. மிகவும் அருமையான தாய்மை போற்றும் கவிதை!

    பதிலளிநீக்கு
  25. அருமையான கவிதை! ரசித்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895