என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 1 மே, 2016

எம்.எல்.ஏ.ஆகிறாள் சரிதா-தேர்தல் ஸ்பெஷல்

   
       நண்பர் பாலகணேஷைப் போலவே அவரது வலைப்பூ மின்னல் வரிகள் பிரபலமானது. அவரது சரிதாயணக்  கதைகள் சிரிப்பு என்றால் என்ன என்று கேட்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும். கதையின் நாயகி சரிதாவிடம் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைக் கதைகள்தான் சரிதாயணம் .
  உங்களுக்கு நினைவிருக்கலாம்! இரண்டு ஆண்டுகளுக்கு முன் எம்.பி.ஆகிறாள் சரிதா என்ற கதையை அவர் பாணியில் எழுத முயற்சி செய்து எழுதி அனுப்பி அவரது வலையில் வெளியிடச் சொல்லி கேட்டுக் கொண்டேன். அவரும் சில தேர்ந்த பத்திரிகை ஆசிரியரைப் போல சிறப்பாக  எடிட் செய்து வெளியிட்டு இந்தக் கதையை எழுதியது யார் கண்டு பிடியுங்கள் என்று ஒரு போட்டி வைத்தார். ஆனால் யாருமே நான்தான் எழுதியது கண்டு பிடிக்கவில்லை.  எனக்கும் நகைச்சுவைக்கும் ரொம்பதூரம் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.அதற்கான புத்தகப் பரிசை எனக்கே கொடுத்தார் பாலகணேஷ்.  சரிதாயணம் இரண்டாம் பகுதியில் இந்தக் கதையும் சேர்த்திருந்தார். அவருக்கு நன்றி.  தற்போதைய பரபரப்பான தேர்தல் சூழலுக்காக  சில மாற்றங்களுடன்  வெளியிடப்படுகிறது.

லைப்பைப் படித்ததும் ஒருகணம் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யித்தீர்கள்தானே...? உங்களுக்கென்னங்க... தூரத்திலிருந்துகொண்டு ஆச்சர்யப்படலாம். நான் அடுக்கடுக்காய் அனுபவித்த அவஸ்தைகள் எனக்குத்தானே தெரியும்...? வழக்கம்போல் என் கம்ப்யூட்டரில் ஒரு புத்தக அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டிருந்த நேரம்... புயலென அருகில் வந்தாள் சரிதா. “என்னங்க... நீங்க இப்ப நடக்கப்போற எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.பி.. ஆகணும்...

திகைத்தேன். ‘ழே என்று விழித்தேன். “அதுநடக்கற காரியமில்ல! சரி! திடீர்னு ஏனிந்த ஆசை?"

“அது நடக்கற காரியமில்ல... நிக்கிற காரியம்னு எனக்கும் தெரியும். என் பிரண்டு ஜெயந்தியோட ஹஸ்பென்ட் எலக்ஷன்ல நிக்ககறாராம். அவ பெருசா பீத்திக்கறா. என் ஹஸ்பெண்டை எலக்ஷன்ல நிக்கவச்சு அவளோட ஹஸ்பெண்டை  விட ஒரு ஒட்டாவது அதிகம் வாங்கிக் காமிப்பேன்னு சபதம் போட்டுட்டு வந்திருக்கேன்  ஏன்   நீங்க நிக்கக் கூடாதா? ஜெயிச்சு எம். பி ஆக முடியாதா?

சரிதாக் கண்ணு! கோபப்படாதே... நீ ஒக்காந்திருக்கும்போது கூட நான் எப்பவுமே நின்னுக்கிட்டுதானே இருக்கேன். இப்ப நடக்கறது எம்.எல்.ஏ எலெக்ஷன்மா..இதுல ஜெயிச்சு .எம்.பி யா ஆகமுடியாதும்மா. அதைத்தான் சொன்னேன்.

 சரிதா முறைத்தாள்... “இந்த கேலிக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. ஓட்டுப் போடற வயசுகூட வராத ஸ்கூல் பையன்ங்க கூடல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டா இப்படிதான் இருக்கும்... என்க,‘நல்ல வேளைடா... இவ ஆவிய, சீனுவ மறந்துட்டா போல இருக்கு””’ குஷியானது மனஸ்.

அதில்ல சரி... நான் எந்த கட்சியில நிக்க முடியும்? எனக்கு யாரும் சீட்டு தர மாட்டாங்களே..?

“நீங்க அம்மாவுக்கு போன் போடுங்க. நான் கேக்கறேன்...

“ஒரு மாசம் இங்க தங்கிட்டு நேத்துதானே  உங்க அம்மா  ஊருக்கு போனாங்க. இன்னும்ஊருக்குக்கூட போய்ச் சேர்ந்திருக்க மாட்டாங்களே! அதுக்குள்ள எதுக்கு போன்?"

 ஐயோ... ஐயோ... உங்களை மாதிரி தத்தியை வச்சுகிட்டு என்ன பண்றது? நான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு டயல் பண்ண சொன்னேன்...

நான் (வழக்கம்போல) ‘ழே’ என்று விழிக்க... சரிதாவே, அம்மாவுக்கு போன் செய்தாள். “வணக்கம்மா..!  போனில் பேசும்போதே முதுகை வளைத்து அவள் வணக்கம் சொன்னது வேடிக்கையாக இருந்தது.... ஆச்சர்யமாகவும் கூடசரிதாவால் இவ்வளவு வளைய முடியுமா..?. ஆஹா... அம்மா கிட்டபோன்லே பேசும்போதே  என்னா பவ்யம்! ‘சபாஷ் சரிதா... நீ அரசியல்ல தேறிருவ’ என்றது மனஸ்.

“அப்படியா... அப்படியா... அப்படியா... போன் எதிர்முனையில் வைக்கப்பட்டாலும்கூட சூரியன் பட கவுண்டமணி போல பில்டப் தந்து நிறையப் பேசிவிட்டு... “அம்மா அடுத்தமுறை அவசியம் சீட் தர்றதா சொல்லிட்டாங்க. இப்ப நீங்க கலைஞர் நம்பரை தேடிக் கொடுங்கஎன்றாள்.

நிறைய மெனக்கெட்டு நம்பரைத் தேடித்தர, கலைஞருக்கு கால் போனபோது அவள் தெரியாமல் ஸ்பீக்கரை ஆன் செய்ய... “ஹலோகலைஞர்  தாத்தாவா? நான் சரிதா பேசறேன். எனக்கு ஒரு எம்.எல்.ஏ சீட் வேணும்... என்று ஏதோ குடும்ப உறுப்பினர் போல் அவள் உரிமையாக கேட்க... “எந்த சரிதாநம்ம குடும்பத்துல எல்லாருக்கும் சீட்டு குடுத்திட்டேனே.உன்னை மறந்திட்டன் போல இருக்கு  வயசாகிடிச்சா! அத்தனை பேரையும் ஞபகம் வச்சுக்க முடியலம்மா. முன்னாடியே வந்து கேக்கக் கூடாதா. இப்போதைக்கு என் மனசுலதாம்மா  இடம்கொடுக்க முடியும்" என்று கலைஞர் சொல்வது தெளிவாக கேட்டது.

 சே! என்று சலிப்பாக முனகியபடி இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள். “சரி, நான் வேணும்னா காங்கிரஸ்ல கேட்டுப் பாக்கட்டுமா?” என்றேன். “சே! காங்கிரஸ்லாம் வேணவே வேணாம். நான் வீசற பூரிக்கட்டையைவே சமாளிக்கத் தெரியாது உங்களுக்கு. அங்க போனீங்கன்னா... சண்டைல வேட்டியென்ன டவுசரே கிழிஞ்சிடும் உங்களுக்கு... என சரிதா சொல்ல... ‘சரிதாவே காங்கிரசை வேணாம்னு சொல்லற அளவுக்கு மோசமாயிடுச்சே காங்கிரஸ் மீது பரிதாபமே வந்துவிட்டது எனக்கு.

“சரி... அப்ப மோடியை காண்டாக்ட் பண்ணி தமிழக பி.ஜே.பில சீட் கேப்பமா..?

“அது சரிப்படாதுங்க. அப்புறம் என்னோட பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க

“என்னது..? உனக்கு பாய் பிரெண்ட்ஸா..? அதிர்ந்தேன் நான். “அடச்சேநீங்க நினைக்கறதில்ல... எனக்கு முஸ்லீம் பெண்கள் நிறையப் பேர் பிரெண்டுங்க இல்லயா..? அதைத்தான் சொன்னேன்.  அவங்க ஓட்டு  BJP க்கு  கிடைக்காது.
நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். 
 "அப்புறம் டி.எம் சௌந்தரராஜனுக்கு போட்டியா நான் இருக்க விரும்பல” சரிதா தொடர்ந்தாள்
"அது டி.எம் சௌந்தரராஜன் இல்லைம்மா தமிழிசை சவுந்தரராஜன்."
எல்லாம் எனக்கு தெரியும் தமிழிசையைத் தான் டி.எம் னு ஷாட்டா சொன்னேன்.சரி சரி ... அர்விந்த் அகர்வாலுக்கு போன் பண்ணுங்க...”  

“எனக்கு முன்ன சோனியா அகர்வால்... இப்ப காஜல் அகர்வால் தெரியும். ஹி... ஹி... அரவிந்த் அகர்வால் யாரு?

“கடவுளே... இப்படி பாலிடிக்ஸ்ல பூஜ்யமா இருக்கற உங்களப்போய் நம்பி சவால் விட்டுட்டுவந்தேனே... என்னைச் சொல்லணும்! அதாங்க... டெல்லியில உண்ணாவிரதம் இருந்தாரே...  ஆட்டோ டிரைவர்ட்ட அறை வாங்கினாரே... அவர்தாங்க...

“நாசமாப் போச்சுஅவர் அகர்வால்  இல்லம்மா... அர்விந்த் கெஜ்ரிவால்! ஆம் ஆத்மிங்கற கட்சியோட தலைவர்

ஏதோ ஒரு வால்! சீக்கிரம் டயல் பண்ணிக் குடுங்க நான் ஹிந்தியில பேசி தமிழக ஆம். ஆத்மி கட்சி தலைவரா உங்களை ஆக்க சொல்லி உங்களுக்காக எம்.எல்.ஏ சீட் கேக்கறேன்...” என்க., டயல் செய்து தந்தபின் அவள் பேசிய ஹிந்தியாவது :

“ஹலோ ஜி! நான் சென்னை மாம்பலம் சுயஉதவிக் குழு தலைவி சரிதா பேசறேன்ஹைமை ஹஸ்பன்ட்ஜியை தமிழக ஆம்.ஆத்மி கட்சி தளவாரக்கி எம்.எல்.ஏ சீட் வேணும் ஹை

‘என்னது...? சுய உதவியாபல் தேய்க்கற பிரஷ்ல இருந்து குளிக்கறதுக்கு சோப்பு டவல் வரை நான்ல்ல எடுத்து வைக்கணும் இவளுக்கு. அவ்வ்வ்வ்!’ என அலறியது மனஸ்.

.......................

“அவர் பக்கா ஆம்ஆத்மிஹை! நான் என்னா சொன்னாலும் ஆம் ஆம் சொல்லற  ஆத்மிஹைஅவர். உங்க கட்சிக்கு பொருத்தமா இருப்பாரு ஜி

.......................””

க்யா? அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கணுமாஜி?  அதெல்லாம் இருப்பார்... நான் பாதிநாள் சமூக சேவை செய்யறதுக்கு வெளிய போய்டுவேன்ஜி.  அப்ப அவரு உண்ணாவிரதம்தான்ஹை” ”

எப்பூடி...? ‘‘ஜி’’யும் “ஹையும் சேர்த்துக்கிட்டா அதுதான்   ஹிந்தின்னு அவ புரிஞ்சுக்கிட்டது சக‘வாச‘ தோஷத்தாலதான்! ஒருமுறை டெல்லி போனபோது சரிதாவுக்கு வாசன் ஹிந்தி கற்றுக் கொடுத்த லட்சணம் அப்படி!. ரெண்டு பேர் வாயிலும் சிக்கி ஹிந்தி படாத பாடு பட்டது  நினைவுக்கு  வந்தது. கெஜ்ரிவாலுடன் பேச்சு வார்த்தை அனுமார் வால் மாதிரி நீளமாக போய்... கடைசியில் கோபத்துடன் போனைத் தூக்கி எறிந்தாள். (பணம் கொடுத்து வாங்கியது நானல்லவா? அவ்வ்வ்!)

‘ஒருவழியா தப்பிச்சிட்டோம்டா... சிஷ்யப் பிள்ளை  சீனு 10 நாள் அமெரிக்காவில இருந்து லீவுல வந்திருக்கானே. தெறி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்துதுக்கிட்டிருக்கேன்னு சொன்னானே. சரிதாவை சமாளிச்சு எப்படிக் கிளம்பறதுன்னு தெரியலையே...’ என்று மனஸ் புலம்ப... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா, 
கேப்டனின் தூ.மு.தி.க  சாரி தே.மு.தி.க  பா.ம.க. எல்லா கட்சியிலும் சீட் கேட்டு தோல்வியில் முடிய
“ஏங்க... நான் இங்க நாயா பேயா உங்களுக்காக கத்திக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா இஞ்சி தின்ன எதுவோ மாதிரி முழிச்சிக்கிட்டிருக்கீங்க!

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இ.தி.கு வாக விழித்துக் கொண்டே நான் வாசல் பக்கம் பார்க்க அங்கே சீனுவின் தலை தெரிந்தது. அடப்பாவிநான் வர்றதுக்கு லேட்டானதால் வீட்டுக்கே வந்துட்டான் போல இருக்கே.... அதிர்ந்த நான். ‘சீனு! அப்படியே போயிடு...’ என்று ஜாடை காட்ட... அதை உள்ளே வா என்பதாகப் புரிந்து கொண்டு உள்ளேயே வந்துவிட்டான்.

“அடடே... சீனுவா? வாப்பா... என சரிதா வரவேற்றது ஆச்சர்யமாக இருந்தது . அவங்க வீட்டு ஆட்களை தவிர வேறு யார் வந்தாலும் பத்ரகாளியாக மாறி விடும் சரிதாவா இது? நம்ப முடியவில்லை. ஒருவேளை இது சரிதாவின் அரசியல் தந்திரமோ..?

“டேய் சீனுசரிதா கோவத்துல இருக்கா... உடனே ஓடிரு...” ” என்று நான் அடிக்குரலில் சொல்ல... சீனு தன் டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்து ரகசியத்தை ரகசியமாய் சொன்னான்“ஸார்! நான் போன தடவை வந்தபோது உங்க வீட்டில சாப்பிட்டனே ஞாபகம் இருக்கா? அப்பவும் அண்ணி கோபமா இருந்தாங்கள்ல... அவங்க வச்ச சுண்டக்கா சொத்தக் குழம்பை -சாரி வத்தக் குழம்பை ரொம்ப ரொம்ப சூப்பர்னு சொன்னேனே! அப்ப எனக்கு பாராட்டும் உங்களுக்கு அடியும் கிடைச்சதே மறந்து போச்சா? இப்பவும் அப்டி சமாளிச்சுருவேன்என்றான் .

சரிதா,“சீனு! உன் வாத்தியாரை எம்.எல்.ஏ. ஆக்கலாம்னு  இருக்கேன். எவ்வளவு நாள்தான்  பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லாம கம்ப்யூட்டரை தட்டிகிட்டு இருக்கறது? எந்த கட்சிக் காரனும் சீட்டு குடுக்க மாட்டேங்கறான். தனியா(சுயேச்சையா) நிக்க வைக்கலாம்னு இருக்கேன். நீதான் இவருக்காக பேஸ்புக்கு,  பேஸ் நோட்டுன்னு எல்லாத்துலயும் பிரச்சாரம் பண்ணனும். இப்ப அதுதானே ட்ரென்ட்?” ”
 "அண்ணி! சூப்பர் ஐடியா! நீங்க சொல்றமாதிரி அவருக்கு தனியா நிக்கறதுல  கஷ்டம் இருக்காது" என்று சொல்லி சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்தான்.
(போன வருஷம் தீபாவளிக்கு  சரவண ஸ்டோர்  வாசல்ல என்ன தனியா நிக்க வச்சிட்டு  புடவை வாங்க உள்ளே போன சரிதா 12 மணிநேரம் கழிச்சும் வராம போக அதுவரை தனியா நின்னுக்கிட்டிருந்த கதைய சீனு கிட்ட சொல்லி இருக்கேன். அதை எப்படி நக்கலடிக்கிறான் பய புள்ள) 

சீனு மந்தகாசப் புன்னகையுடன் தொடர்ந்தான் " அண்ணி! ஆனா ஒரு சின்னத் திருத்தம்...! சாருக்கு பதிலா நீங்களே நிக்கணும். அவரைவிட நீங்கதான் ஃபேமஸ். உங்களை வச்சுதான் அவரே பேரு வாங்கி இருக்கார்...? ”

   தெறி படத்தைவிட இங்கு நடப்பது சுவாரசியமாக இருந்ததால் சினிமாவுக்கு கூப்பிட வந்ததையே மறந்தவனாக சீனு என்னை வைத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கநான் கோபமாய் முறைக்க... சீனுப்பயல் அதைக் கண்டுகொள்ளாமல் சீரியசாக கலாய்த்துக் கொண்டிருந்தான்.  “கணேஷ் சார்  எழுதின ‘‘சரிதாயணம்’ கதைகள்ல நீங்கதான் ஹீரோயின்நான், என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களோட ரசிகர்கள்தான். உங்களுக்குத்தான் அவரைவிட அதிக ஓட்டு கிடைக்கும், தையும் தவிர. அவருக்கு எழுத தெரியுமே தவிர, அதிரடியா பேசல்லாம் தெரியாது. அதுக்கு நீங்கதாங்க சரி” ” என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
"என்னபத்தி அவ்வளோ பெருமையாவா எழுதி இருக்காரு. லூசு மாதிரி பேசுவார்னுதான் தெரியும். இப்படி எல்லாம் எழுதக் கூட தெரியுன்றது நீ சொல்லித்தான் தெரியும்." 
சீனு ஹிஹிஹி என்றான்

“அடப்பாவி! உன்னைப் பத்தின கதைகள்னு மட்டும்தானே சரிதாட்ட சொல்லி வச்சிருக்கேன். இவனால சரிதாயணத்தை முழுசா அவ படிச்சா என் கதி என்னவாகு? பயபுள்ள தெரிஞ்சே பத்த வைக்கிறானே என்று ப(க)தறியது மனஸ். சீனு அசால்ட்டாய் தொடர்ந்தான். “அண்ணி!அற்புதமா தேர்தல் அறிக்கை ஒண்ணு தயார் பண்ணனும்! நீங்க இணையத்துல பேமஸா இருகறதால நெட்டை யூஸ் பண்ற அத்தனை பேரோட வோட்டும் கிடைக்கற மாதிரி இலவசங்களை அறிவிக்கலாம்

சரிதா உற்சாகமானாள். “அட. நல்லா இருக்கே ஐடியா... சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லு பாக்கலாம்

“பேஸ் புக்கில போடற ஸ்டேடஸ்க்கு 1000 லைக் இலவசமா போடப்படும், ப்ளாக்ல எழுதற ஒவ்வொருவருக்கும் 100  விலையில்லா பாராட்டு  பின்னூட்டம் போடப்படும். இலவச இன்டர்நெட் வசதி செய்து தரப்படும்... ” என்று தொடர்ந்து சீனு அள்ளி விட... “எக்சலன்ட் சீனு! இதெல்லாம் ஏன் இவருக்கு தோணவே மாட்டேங்குது? ரைட்டு... எப்ப வேட்பு மனு தாக்கல் பண்ணலாம்?” ”

இப்பவே பண்ணலாம். ஆனா வேட்பு மனு தாக்கல் பண்ண ரெண்டு பேர் போகக்கூடாது கூட்டமா போகணும்

கூட்டத்துக்கு எங்க போறது?”

“கவலைப்படாதீங்க... இப்ப வரவழைச்சிட்றேன். ”

பயபுள்ள மொபைலில் அடுத்த விநாடியே மெசேஜ் அனுப்ப... ஸ்கூல் பையன், கோவை ஆவி,மெ.ப.சிவாரூபக்ராம்,குடந்தையூர் சரவணன், அரசன், மதுமதி, பிரபாகரன், செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே,ஆர்,பி,செந்தில், மதுரைத்தமிழன், தமிழ்வாசி பிரகாஷ் என ஒரு பெரும் படையே சில நிமிடங்களில் கூடிவிட்டது. ஒருசில நிமிடங்களில் பெருங்கூட்டத்தை கூட்டிய சீனுவின் திறமையைக் கண்டு, தன் சபதம் நிறைவேறிவிடும் என்று சரிதா சந்தோஷமானாள். “சீனு... இவரோட தங்கைகள் ராஜி. சசிகலா. பிரியா மைதிலி, கிரேஸ், இவங்களுக்கெல்லாம் போன் போடு. அவங்க மத்தவங்களக் கூப்ட்டு ஒரு மகளிர் அணிக் கூட்டத்தையே சேர்த்துடுவாங்க. நாம உடனே கிளம்பலாம்...’ ” என்றாள் குஷியாக.

அதற்குள் நான்கைந்து கார்கள் வாசலில் வந்து நின்றன. எல்லாம் இந்த உத்தமவில்லன் சீனுவின் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும். பயபுள்ளக்கி என்னைய மாட்டிவிடுறதுன்னா எப்பவும் ஸ்பீடுதான்! “அண்ணி கார்லாம் வந்துடுச்சி... வாங்க போகலாம்... போற வழில மகளிரணிய பிக்கப் பண்ணிக்கலாம்.” என்க, சரிதா என்னைப் பார்த்து, “வீட்டை பாத்துக்கோங்க. நான் தம்பிங்ககூட போய் வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டுவரேன். அதுக்குள்ள எனக்காக உருப்படியா பேனர் கட் அவுட்டையாவது  டிஸைன் பண்ணி வைங்க

நான் அந்தக் கும்பலை முறைக்க கண்டு கொள்ளாமல் அனைவரும் புறப்பட்டனர். எலே சீனு! குருவையே காமெடி  பீசாக்கிட்டியே... நீல்லாம் நல்லா வருவ லேய்... என்று நொந்து கொண்டே, காலையில் இருந்து பிரிக்கப் படாமல் இருந்த அன்றைய பேப்பரை எடுத்துப் பிரித்தேன்.  அதில் தலைப்பு செய்தியாக நேற்றோடு வேட்பு மனு தாக்கல் முடிந்ததுஎன்றிருந்தது. அதைப் படித்ததும் சந்தோஷமாக இருந்தாலும் முன் விளைவுகளே மோசமாக இருக்க, சரிதா கோபமாகித் திரும்பி வருவதால் விளையும் பின்விளைவுகளை எண்ணியதும் சற்று கலக்கமாக  இருப்பதால் கலக்கக் கூட்டணி அமைக்க யாருமின்றி  ‘ழேஎன்று விழித்தபடி அமர்ந்திருக்கிறேன் நான்.

***************************************************************************************

13 கருத்துகள்:

  1. ஹாஹாஹா தொடக்கம் முதல் கடைசிவரை நகைச்சுவை அருமை நண்பரே.... ரசித்தேன்
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா... அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு சார்...

    பதிலளிநீக்கு
  3. இப்போதைய அப்டேட்ஸ் என்னென்ன என்பதைப் படித்து ரசித்துச் சிரித்தேன் முரளி. சூப்பராப் பண்ணிட்டேள் போங்கோ...

    பதிலளிநீக்கு
  4. சரியான ஃ ப்ளோ.. சூப்பர் முரளி. கணேஷ் பதிவுலகத்துக்குத் திரும்பி வாங்க...

    பதிலளிநீக்கு
  5. Enjoyed the humour thoroughly! Nice flow from beginning to end!

    பதிலளிநீக்கு
  6. பரவாயில்லையே !இவ்வழி மேலும் தொடர்க!

    பதிலளிநீக்கு
  7. நகைச்சுவையில் நீங்கள் அனைவரையும் முந்திவிடுவீர்கள் போலுள்ளதே. அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவை மிக இயல்பாக..
    மிகவும் இரசித்துப் படித்தேன் மீண்டும்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  9. ரசித்தேன். அருமையான நகைச்சுவை!

    பதிலளிநீக்கு
  10. இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி உள்ளவரா நீங்கள்? இன்னமும் நிறைய எழுதுங்கள் முரளி.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895