என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 5



------------------------------------------------------------------------------------------------------------------------
பகுதி 5
அப்படி யாருடைய படத்தை திறக்க சொல்லிக் கேட்டனர்? 

         தெரிந்து கொள்வதற்கு முன்பு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம். ஜூலை 15 பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் அதாவது காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விழாவிற்கு பஞ்சாயத்துத் தலைவரும் ஒன்றியக் கவுன்சிலரும் வந்திருந்தனர். காமராஜர் படம் திறக்கவும் கொடி ஏற்றவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. படத்தை பஞ்சாயத்து தலைவர் திறக்க, தேசியக் கொடியினை ஏற்ற ஒன்றியக் கவுன்சிலரை அழைத்தார் தலைமை ஆசிரியை அவ்வளவுதான் வந்தது வினை. கோபித்துக் கொண்டு வெளியேறினார் பஞ்சாயத்து தலைவர். எவ்வளவு சமாதானப் படுத்தியும் முடியவில்லை. தன்னை அவமதித்தாக நினைத்தார் பஞ்சாயத்து தலைவர். இத்தனைக்கும் ஒன்றியக் கவுன்சிலரும் இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.(உண்மையில் பஞ்சாயத்து தலைவர் இல்லை. அவரது மனைவிதான் தலைவர். ஆனால் தலைவராக நடந்துகொள்வது இவர்தான்.) 
     இதற்கு ஆறு மாதத்திற்கு முன் பள்ளியில் நடந்த பிரச்சனையைக் கையில் எடுத்தார். பிரச்சனை நடந்தபோது சுமுகமாகத் தீர்த்து வைத்தவரும் இவரே. ஆனால் இப்போது நிலை வேறல்லவா? புகார் மனு பறக்க இரண்டே நாட்களில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பணிநீக்கம் முடிந்து பணியில் சேர வந்த போது தலைமை ஆசிரியரை மட்டும் பள்ளியில் சேர அனுமதிக்கவில்லை. லோக்கல் தலைவர்களே இப்படி. இதைமனதில் வைத்துக் கொண்டு காமராசர் காலத்திற்குப் போவோம். 
        அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததற்குக் காரணம் பள்ளிக் கல்வி இயக்குநர் திரு நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் திருவுருவப் படத்தை காமராசர் திறந்து வைப்பார் என அச்சடிக்கப் பட்டிருந்தது. 
    தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு அதிகாரியின் அதுவும் வயதில் இளையவரின் படத்தை திறக்க முதலமைச்சரை அழைப்பதா என வெகுண்டார் உதவியாளர். காமராசர் நிர்வாகிகளை உள்ளே அனுப்பும்படி கூறினார். அவர்களும் காமராசரைப் பார்த்து அழைபபிதழைக் கொடுத்துவிட்டு சென்றனர். காமராசரின் எண்ணத்தை அறிய இயலாத நிலையில் நெ.துசுவுக்கு தகவல் தெரிவித்தார் உதவியாளர். பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தார் நெ.து.சு.. 
         காமராசரைப் பார்த்து ”ஐயா இந்த விவகாரம் எனக்குத் தெரியாது, என்னைக் கேட்காமல் அழைப்பிதழ் அச்சடித்து விட்டார்கள். பணியில் இருப்பவரின் படத்தை திறப்பது மரபல்ல. தாங்கள் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம். படத்திறப்பை ரத்து செய்யச் சொல்லி விடுகிறேன்” என்றார், 
     அமைதியாகத் தலையை ஆட்டிவிட்டு ”ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு சுருக்கமாக முடித்து அனுப்பிவிட்டார். காமராசரின் மன ஓட்டத்தை அறிய முடியாமல் அங்கிருந்து வெளியேறினார் நெ.து.சு
      வேண்டாம் என்று பலர் தடுத்தும் காமராசர் அந்த விழாவில் கலந்து கொண்டு நெ.துசுவின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
“என்னைக் கேட்டுத்தான் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். வழக்கத்தை மீறி நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அவர் பணியின்மீது அனைவரும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். திண்ணைப் பள்ளிக்கூடம்கூட இல்லாத சின்ன கிராமத்தில் பிறந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்திருக்கிறார்.என்றால் அவர் உழைப்பையும் திறமையையும் மற்றவர் அறிய வேண்டாமா? அவரது படத்தைக் தினமும் மாணவர்கள் பார்க்கும்போது இவரைப் போல படித்து நாமும் உயர வேண்டும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் வரும். மாணவர்களின் நன்மைக்காகவே படத்தை மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கிறேன் என்று கூறினார். 
     நான் முன்பு கூறிய சம்பவத்தையும் இந்த சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சாதாரண பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு அகங்காரம் இருந்தது. ஆனால் மாநிலத்தின் முதலமைச்சருக்கோ தன் கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அலுவலர்களில் ஒருவரின் உருவப் படத்தை திறந்து வைக்கும் பெருங்குணம் இருந்தது. எப்பேர்ப்பட்ட செயல்! காமராசருக்குப் பின் வந்த தலைவர்களில் யாருக்கேனும் இதுபோன்று செய்திருப்பார்களா? அந்த அலுவலரின் நிலை என்னவாகி இருக்கும். இதுதான் காமராசர். 
    ஏழை மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராஜருக்கு துணையாய் அமைந்தது பிரதமர் நேருவின் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம்.
   மொத்த விழுக்காட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. பள்ளி இறுதி வகுப்போடு நிறுத்திக் கொண்டு குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அதிகரித்தனர்.வேலைவாய்ப்பின்மை அதிகரித்தால் சமூக சிக்கல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த நேரு வேலையில்லாத படித்தவர்களுக்கு வேலை என்ற அதிரடித் திட்டத்தை உருவாக்கினார். 
          இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்து தேர்ச்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி பள்ளி இல்லா ஊரில் பள்ளிகளைத் தொடங்கி அவர்களுக்கு ஆசிரியர் பணி அளித்து வேலைவாய்ப்பை அதிகரிப்பது. இன்னொரு கூடுதல் லாபம் பள்ளி இல்லாத ஊர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று எண்ணினார். இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில ஆயிரம் பேர்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என் அறிவிக்கப்பட்டது. 
        ஏற்கனவே கல்விக்காக என்ன செய்யலாம் என்று துடித்துக் கொண்டிருந்த காமராசர் இவ்வாய்ப்பைத் தவற விடுவாரா? இயக்குநரை முடுக்கி விட்டு அரசியல் பாரபட்சமின்றி எந்த ஊர்களுக்கு மிக அவசியமாக பள்ளிகள் தேவை என்பதைக் கண்டறிந்து எல்லா மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பள்ளிகள் திறக்க ஆணையிட்டார் 
மகராஜர் காமராஜர் வந்தார்; பள்ளிக்கூடம் வந்தது என மக்கள் வாழ்த்தினர். 
     மேலும் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து மேம்படுத்த டாக்டர் அழகப்ப செட்டியார் தலைமையில் தொடக்கக்கல்விக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்று நிலைமையை ஆராய்ந்து கருத்துகளைத் திரட்டியது. அறிஞர்கள்,அலுவலர்கள் பொதுமக்கள் என அனவைரும் தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்தனர். 
அக் குழுவில் முக்கியப் பரிந்துரை ஒன்று அதிகமாக விவாதிக்கப் பட்டது. அரசல் புரசலாக வெளியே தெரிந்த அப்பரிந்துரை அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. 


அது என்ன? 


--------------------------------------------------------------------------------------------------------------


7 கருத்துகள்:

  1. அவரைப்போல ஒரு மனிதரை, தலைவரை இனி காண்போமா என்று ஏங்க வைக்கிறது ஒவ்வொரு விஷயமும்.

    பதிலளிநீக்கு
  2. நிலையை சமாளித்த பெருந்தலைவரின் மாண்பினைப் பாராட்ட கோடி வார்த்தைகள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய நிலையை நினைத்தாலே மனம் வெதும்புகிறது...

    பதிலளிநீக்கு
  4. அன்றைய தலைவரும் இன்றைய அரசியல்வாதிகளும் - எத்தனை மாற்றம்....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கல்விக் கண் திறந்த வள்ளலின் நினைவு நாளில், அவரை போற்றுவோம், வணங்குவோம்

    பதிலளிநீக்கு
  6. காமராஜரைப் போன்ற தலைவர்களுக்கு ஒப்பாக இப்போது யார் இருக்கிறார்கள்? அவருக்கும் இப்போதையவர்களுக்கும் இடையில் தான் எத்தனை வேறுபாடுகள். இன்றைய நிலை நிஜமாகவே வேதனையையும் ஏக்கங்களையும் தருகிறதுதான்

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895