என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 10 ஜூலை, 2020

காமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 1



அது ஒரு தனியார் நிதி உதவி பெறும் பள்ளி மதிய உணவு மணி அடித்தாகி விட்டது. சத்துணவு சாப்பிட மாணவர்கள் வரிசையாக அமர்ந்து விட்டனர். மிளகு மசாலா சேர்க்கப்பட்ட முட்டையை மாணவர்களுக்கு தட்டில் வைத்தனர். பின்னர் அன்றைய மெனுவான வெஜிடபிள் பிரியாணி பரிமாறப்பட்டது .மாணவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட ஆரம்பித்தனர்.
பார்வையிட்டுக் கொண்டிருந்த நான்”வாங்க! தம்பி வணக்கம்”என்ற குரல் கேட்டு திரும்பினேன். வரவேற்றவர் பள்ளியின் கல்விக் குழு உறுப்பினர். வயது 80 க்கு மேல் இருக்கும் . நடையில் லேசான தடுமாற்றம். இருப்பினும் என்னை நோக்கி வந்தார். “மெதுவா பாத்து . நீங்க ஏன் வந்தீங்க நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“இல்ல தம்பி.பரவாயில்ல .உங்கள பாக்கலாம்னுதான் வந்தேன். நல்ல  இருக்கீங்களா?” என்று என்னுடன் இணைந்து கொண்டார். சத்துணவு உண்ணும் மாணவர்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம்.
ஒரு சிறுவன் முட்டையையும் சாப்பாட்டையும் ஸ்பூனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் வந்ததும் பெரியவர் நின்றார்.”இந்தப் பையனைப் பாக்கும்போதெல்லாம் என்னோட சின்ன வயசு ஞாபகம் வரும். நான் ஸ்கூல் படிக்கும்போது இவனை மாதிரிதான் இருந்திருப்பேன். இவனைப் போலவே எனக்கும் இடது கைப் பழக்கம். நானும் இப்படித்தான் ஸ்கூல்ல மதிய உணவு சாப்பிடுவேன்.”
நான் அப்போதுதான் கவனித்தேன் அந்த மாணவன் இடதுகையைப் பயன்படுத்தி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை.
“இதுக்காகவே ஸ்கூலுக்கு வருவேன். வீட்டில சரியா சோறு கிடைக்காது.. மத்தியானம் சாப்பிட்டதும் வீட்டுக்கு போய்டுவேன், இந்த சாப்பாடுதான் எங்கள மாதிரி இருக்கவங்கள ஸ்கூலுக்கு வர வச்சது. அரை நாள்ல போனவங்கள்லாம் முழுநாள் ஸ்கூல்ல இருக்க பழகினோம். நாலு எழுத்து கத்துகிட்டோம்.இன்னைக்கு நான் வசதியா இருக்கேன். பிள்ளைங்க பேரப் புள்ளைங்களும் நல்ல நிலையில இருக்காங்க. இருந்தாலும் பழச மறக்கக் கூடாது இல்லையா…….
”நான் அடிக்கடி ஸ்கூலுக்கு வருவேன். என் பேரன் “என்ன தாத்தா ஆஃபிசர் மாதிரி தினமும் ஸ்கூலுக்கு போற. சின்ன வயசுலகூட லீவுபோடாம போயிருக்க மாட்ட போலன்னு சொல்லிட்டு ’அம்மா தாத்தாவுக்கு லன்ச் கொடுத்து அனுப்புமான்னு கிண்டல் பண்றான். அதுக்கு என் பேத்தி, தாத்தா ஸ்கூல்ல சத்துணவு சாப்பிடுவார்னு சிரிக்கிறா. என்ன சொல்றது போங்க
“தம்பி! அவங்களுக்கு பசின்னா என்னன்னு தெரியாது. கையில ஃபோனை வச்சுகிட்டு காதுல ஒயரை மாட்டிகிட்டு காதடைச்சுப் போய்க் கெடக்காங்க. நாங்கள் வயிறு கவாங் கவாங்னு கத்த பசியில காதடச்சிப் போய் கெடந்திருக்கோம் இவங்க வறுமையை சினிமாலதான் பாத்திருப்பாங்க. போடற சட்டத் துணி கிழிஞ்சு போனா தச்சுப்போடுவோம்னு சொன்னா ஆச்சர்யமா பாக்கறாங்க. பட்டன் பிஞ்சு போனா சட்டயையே தூக்கி போட்டுடறாங்க. வீட்டில ஊசி நூலே இல்ல. சின்ன வயசுல செருப்பு போட்டதில்லன்னு சொன்னா சும்மா டூப் விடாத தாத்தான்னு சொல்றாங்க.
”படிப்புக்குத்தான் எதையும் மாத்தற சக்தி இருக்கு . எங்க ஐயா காமராஜர் எங்களைபோல இருந்தவங்களை பள்ளிக்கு வரவச்சு சாப்பாடு போட்டு படிப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்திருக்காங்க. ஆனால் அதெல்லாம் இந்தக் காலப் பசங்களுக்கு தெரியறது இல்ல. எதுவும் சுலபமா கிடைச்சுட்டா அதுக்கு மதிப்பு இல்லாம போயிடுது” என்று உருக்கமாக தொடர்ந்து தன் அனுபவங்களைக் கூறினார்.
”நீங்க காமராஜரைப் பாத்திருக்கீங்களா ” என்று கேட்டேன்.
“இல்ல அந்த அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கல.. எங்கப்பா ஒருநாள் காமராசர் கூட்டத்தில பேசறாராம். வா! போலாம்னார். அட போப்பான்னு புல்கோட்டி(கில்லி) விளையாடப் போய்ட்டேன். என்ன முட்டாளா இருந்திருக்கேன் பாருங்க.“ என்றார்.
பின்னர் பிற விஷயங்களை பேசிவிட்டு அவரிடம் விடைபெற்றேன்.
கல்வி சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் என்று எல்லாத் தலைவர்களும் நம்பினார்கள். முயற்சியும் செய்தார்கள் ஆனால் அனைவருக்கும் கல்வி கொடுப்பதில் ஏராளமான இடர்பாடுகள் ஏற்பட்டன. காமராசர் மட்டுமே அவற்றைப் பொருட்படுத்தாது முதலடியை எடுத்து வைத்தார். அவருக்கு உறுதுணையாக ஒரு அற்புதமான அதிகாரி அமைந்தார். காமராசர் எள் என்றால் அவர் எண்ணையாக நின்றார், அவர் விழியசைத்தார். இவர் வழியமைத்தார். அவர் யார்? அப்படி என்னதான் செய்தார்? நாளை பார்க்கலாம் ------------------------------------------- பகுதி 2
பகுதி 3






9 கருத்துகள்:

  1. அருமையான தொடக்கம்...

    முகநூலில் மட்டும் அல்லாது வலைத்தளத்திலும் பகிர்வீர்களோ என்ற எண்ணம் அங்கு வாசிக்கும் போது வந்தது...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு தகவல் அடங்கிய தொடர் பதிவாக வரப் போவது கண்டு சந்தோஷம் தொடக்கமே அருமையாக ஆரம்பித்து இருக்கிறது, இந்த தொடர் பதிவுகள் முடிந்த பின் அழகான புத்தகமாக வெளியிடுங்கள் முரளி... பாரட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. பெரியவரின் பேச்சு மனதில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் காலத்தை நினைவூட்டிப் போகுது...தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. தமிழக அரசியல் 1921 முதல் 2020 வரைக்கும் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளை பங்கெடுத்தவர்களைப் பற்றி தனி நூலாக எழுதிக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு பகுதியும் 25 வயதுள்ளவர் வாசிக்கும் அளவிற்கு. காமராஜர் குறித்து எழுத தேடிப்படித்த புத்தகங்களில் பல நல்ல ஆச்சரியமான தகவல்கள் இருந்தது. தொடர் சிறப்பாக வரும் என்றே நம்புகிறேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மனதைத் தொட்ட பகிர்வு. தொடராக வரப் போவது அறிந்து மகிழ்ச்சி. மேலும் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கும்பகோணம் மூர்த்திக்கலையரங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் வந்திருந்தபோது அப்போதைய காங்கிரஸ்காரரான எங்கள் தாத்தா என்னை அழைத்துச்சென்றார். காமராஜருக்கு அருகில் மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்த அந்த நாள்களை மறக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  8. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895