என்னை கவனிப்பவர்கள்

வலைப்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 அக்டோபர், 2016

திண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்


அன்பு அன்பரே!

வணக்கம்.
    திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக்   கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபாலன் என்றே மாற்றிவிட்ட அற்புதத்தைச் செய்த நீ இப்போது எங்கே இருக்கிறாய். உமது பின்னூட்டங்கள் இல்லாமல் களை இழந்து தவிக்கிறது வலைப் பதிவுகள். காலை எழுந்ததும் கணினி உன் முகத்தில் தானே விழிக்கும். சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் திண்டுக்கல் தனபாலன் அல்லவா?

    பின்னூட்டப் புயலே! என்னைப் போன்ற பலர் உனது பின்னூட்டங்களை நம்பித்தானே பதிவுகள் எழுதிக் கொண்டருந்தோம். நீ நுழையாத வலைப் பக்கங்கள் உண்டா? . வண்டு காணாத பூக்கள் இருக்கலாம். உன் பின்னூட்டம் காணாத வலைப் பூக்கள்  காண இயலாதே?  பல வலைப்பதிவுகளில் உனது பின்னூட்டம் மட்டுமே அல்லவா இருக்கும். உனது பின்னூட்டத்தால் யாரையும் காயப் படுத்தியது இல்லை. மோசமான பதிவு என்றாலும் பாரட்டித் தானே பின்னூட்டம் இடுவாய்.  பதிவு எழுதி முடிக்கும் அடுத்த வினாடி உனது பின்னூட்டம் எட்டிப் பார்க்குமே. எப்படி என்று நாங்கள் வியந்து போவோமே! 

   நீ பின்னூட்டத்தால் மட்டுமல்ல தரமான பதிவுகளாலும் அல்லவா எங்கள் உள்ளம் கவர்ந்தாய். திருக்குறளை வைத்து நீ எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்களாயிற்றே! வள்ளுவன் இருந்தால் உமது சுவாரசியமான குறள் வலைப் பதிவுகள் இல்லாதது  கண்டு  வருத்தப் பட்டிருப்பான்.   திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா?  எந்த ஒரு கருத்தாக  இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!

   அதற்கும் மேலாக வலையுலக மந்திரவாதியாக அல்லவா விளங்கினாய். உனது வலைப் பக்கத்தில் விதம் விதமான தொழில் நுட்ப வித்தைகள் காட்டி எங்களை மகிழ்வித்தாயே!  உனது வலைப்பதிவுகளில்  எழுத்துகள் நடனமாடும் . படங்கள் பாடல் பாடும்.   சுட்டியை வைத்தால் ஒரு ஜாலம் எடுத்தால் இன்னொரு ஜாலம். சொடுக்கினால் பல வித்தை . உன்க வலைப்பூ காண்களுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாக திகழ்ந்ததே!  இவற்றை எல்லாம் எப்படிக்  கற்றுக் கொண்டாய் என்று நாங்கள் வியப்பால் விழிகள் விரிப்போம். நீயோ அமைதிப் புன்னகையால் எங்களை ஆட்கொள்வாய்.

  பதிவுகளில் தொழில்நுட்ப மாயாஜாலம் செய்த நீ உனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்தததை நாங்கள் மறக்க முடியுமா? பலரது வலை வடிவமைப்பு உன்னுடைய  கைவண்ணம்தானே! தொழில் நுட்ப சிக்கல்கள் தீர்க்க  உதவி என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினால் போதும்  இருந்த இடத்தில் இருந்து மட்டுமல்ல தேவைப் பட்டால் நேரில் வந்தும் உதவும் பண்பாளர்   ஆயிற்றே. 

  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் உங்களுக்கு  வலையுலகம் சார்பாக வலைச்சித்தர் என்று பட்டம் கொடுத்தார். சித்தர்கள் திடீரென்று திடீரென்று மறைவார்கள்.காட்சியளிப்பார்களாம் அது போல ஒளிந்து நின்று ஆட்டம் காட்டுகிறாயோ!
   புதுக்கோட்டை வலைப் பதிவர் சந்திப்பின் வெற்றிக்கு காரணமானவனே!  அந்த திருவிழாவிற்குப் பின்வலைப் பதிவிலும் உன்னை சந்திக்க முடியாமல்  ஏங்குகிறோம். வலை வாசம் செய்த நீ வனவாசம் போனது ஏன்? முகநூலிலாவது முகம் காட்டிக் கொண்டிருந்தாய்.இப்போது முகநூல் பக்கமும் காணவில்லையே!

   கணினியைத் தொடாமல் உன்னால் இருக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் ஏற்றங்கள் இறக்கங்கள் இடர்பாடுகள் வந்து செல்வது வழக்கம்தான்., ஆனால் அவை  எல்லாம் வள்ளுவன் வழி அறிந்த உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிவோம்.. 
      காவிரி நீர் காணாத தமிழகம் போல உன்னனக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் வலைப் பதிவுலகம். காவிரி நீரை அணை கட்டித் தடுக்கலாம். நீதிமன்ற  ஆணை மறுக்கலாம். ஆனால்  உன்னை வலைப் பக்கம் வர விடாமல் தடுத்தது எது? சொல்! உச்ச  நீதி மன்றம் சென்று உத்தரவு  பெற்று வருகிறோம்?

                                                                                      அன்புடன் 
                                                               உந்தன் வரவை எதிர்நோக்கும் 
                                                                           வலைப்பூ நண்பர்கள் 



வியாழன், 13 நவம்பர், 2014

பின்னூட்டத்தில் நம் வலைப்பதிவிற்கு இணைப்பு கொடுப்பது எப்படி?

கற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்.




       வலைப்பூவோ முகநூலோ ட்விட்டரோ எதுவாக இருப்பினும் நாம் பதிவு செய்தவற்றை நிறையப் பேர் பார்த்தால்தான் மகிழ்ச்சி.என் கடன் பதிவு செய்து கிடப்பதே பார்ப்போர் பார்க்கட்டும் பார்க்காவிட்டால் போகட்டும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை  என்றும் நான் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன் என்றும் ஒரு சிலர் சொல்வதுண்டு.  அது ஒப்புக்கு சொல்லப் படுவதே அன்றி வேறில்லை. ஆனால் அவர்களுக்கும் நமது பதிவுகள் படிக்கப் படவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்யும் . 

       யாருமே வராத ஓட்டலுக்கு யாருக்காக மாவாட்டுவது? (எவ்வளவு நாள்தான் டீக்கடை உதாரணத்தையே சொல்வது). நாம் இருக்கிறோம் இணையத்தில் எழுதுகிறோம் என்று தெரிவிப்பது புதியவர்களுக்கு அவசியமாகிறது. அதற்கு பல வழிகளை கடைபிடிக்கிறோம். திரட்டிகளில் இணைப்பது .பிறரின் பதிவுகளில் கருத்திடுவது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் ட்விட்டர்களில் இணைப்பு  கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. சிலர் பிறருடைய கருத்துப் பெட்டியில் தன பதிவை படிக்க வருமாறு அழைப்பு விடுப்பதை பார்க்க முடியும்.அப்போது தன பதிவின் url ஐ ( உதாரணம் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html) காப்பி செய்து பின்னூட்டத்தில் இட்டு வைப்பர். தன பதிவுக்கு வருகை தந்தவரின் வலைபதிவிற்கு செல்ல அந்த முகவரியை தேர்ந்தெடுத்து காப்பிசெய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டினால் அந்தப் பதிவுக்கு சென்று படிக்க முடியும். ஆனால் இவற்றை செய்வதற்கு சோம்பல் பட்டோ அல்லது செய்யத் தெரியாமலோ சிலர் இருக்கக் கூடும். அவர் எளிதாக நமது வலைப்பதிவை அடைய வழி என்ன? பின்னூட்டத்தில் க்ளிக் செய்தால் பதிவை அடையும் வண்ணம் இணைப்பு இருந்தால் நன்றாக இருக்குமல்லவா? அதற்கான வழி ஒன்றை கூறுகிறேன். இது பெரும்பாலோருக்கு தெரிந்ததுதான் என்றாலும் ஒரு சிலருக்காவது பயனுள்ளதாக இருக்கும்
     ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும் . இதை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட ந(ண்)பர் நமது பதிவைப் படித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தால் அவருடைய வலைப்பதிவு பின்னூட்டத்தில் இதைப் உபயோகப்படுத்தலாம் . அடிக்கடி இதனை விளம்பரம் போல நாம் இடும் ஒவ்வொரு பதிவுக்கும் இதனைசெய்வதை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள் . எரிச்சல் அடையக் கூடும.அதனால்இடம்பொருள்அறிந்து இதனை பயன்படுத்துதல் சாலச் சிறந்தது 

   இப்போது வழிமுறையை பார்ப்போம். இந்த  குட்டி HTML நிரலை பயன் படுத்தலாம்  

<a href="உங்கள் பதிவின் முகவரி">பதிவின் தலைப்பு</a> 

இதை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொள்ளுங்கள் 

உதாரணத்திற்கு எனது இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  என்ற பதிவுக்கு  இணைப்பு கொடுக்க விரும்புவதாகக் கொள்வோம்.
இதன் url முகவரி 
http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html
பதிவின் தலைப்பு: இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்  
மேற்கண்ட நிரலில் நீல வண்ணத்தில் உள்ள பதிவின் முகவரிக்கு பதிலாக என்ற இடத்தில் http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html என்பதையும் பச்சை வண்ணத்தில் உள்ள பதிவின் தலைப்பு என்பதற்கு பதிலாக  இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்பதையும் இட வேண்டும் 

பதிவுக்கான இணைப்பு நிரல் இப்படி இருக்கும் 

<a href="http://www.tnmurali.com/2014/11/idli-dosai-philosophy.html">இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள்</a> 

இதை அப்ப்டியே காப்பி செய்து நண்பருடைய பின்னூட்டப் பெட்டியில் பேஸ்ட் செய்து பப்ளிஷ் செய்யுங்கள் . 
இட்லியும் தோசை சொல்லும் தத்துவங்கள் என்ற தலைப்பு மட்டும் இணைப்புடன் கருத்துப் பெட்டியில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம் . நிரலில் உள்ள   மற்ற குறியீடுகள் எழுத்துக்கள் அதில் இடம் பெறாது .இதைக் க்ளிக் செய்து பதிவை  எளிதாக அடையலாம் 

நண்பரின் பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை சொல்லி விட்டு  அது தொடர்பாக உள்ள உங்களது பதிவையும் இணைப்போடும் குறிப்பிடலாம் 
உதாரணமாக "இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்" என்ற பதிவுக்கு கீழ்க்கண்டவாறு பின்னுட்டமிட்டிருந்தார் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் .


அவர் தன்னுடைய தோசைப் பதிவின் இணைப்பையும் எனது பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம் 

கருத்துப் பெட்டியில் கீழ்க்கண்டவாறு 

 நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? <a href="http://engalblog.blogspot.in/2014/08/140804-1.html">தோசையாயணம்</a> 



என்று  டைப் செய்து பப்ளிஷ் செய்தால் 



கருத்து மேலுள்ளவாறு தோன்றும். இதில் இணைப்புப் பகுதியான தோசையாயணம்  மட்டும் மாறுபட்டு  காட்சி அளிக்கும் . அதைக் க்ளிக் செய்தால் அந்தப் பதிவுக்கு நேரடியாக சென்று விடும்.
இதை சோதித்து ப் பார்க்க  எனது இட்லி தோசை தத்துவங்கள்  பக்கத்திற்கு செல்லவும் 

குறிப்பு  



  • இந்த நிரலில் மேற்கோள்குறி <   > / போன்ற குறியீடுகள் விடுபட்டுவிடக் கூடாது.
  • இந்த மாதிரி நிரலை அப்படியே காப்பி செய்து கருத்துப்பெட்டியில் பேஸ்ட் செய்து விட்டு உங்கள் பதிவின் தலைப்பையும் URL ஐயும் அதில் ரீப்ளேஸ் செய்து கொள்ளலாம்.
  • பதிவின் முகவரியை பதிவின் அட்ரஸ் பாரில் இருந்து நிரலில் பேஸ்ட் செய்து கொள்ளலாம் அவ்வாறு செய்யும்போது http:// கூடுதலாக இடம்பெற்றுவிட்டால் இது வேலை செய்யாது.


கொசுறு:
நான் பொதுவாக எனக்கு பின்னூட்டமிட்டவரின் வலைப் பதிவிற்கு செல்ல வேண்டுமென்றால்  பின்னூட்டத்தில் அவர் பெயரை க்ளிக் செய்தால் அவரது PROFILE பக்கத்திற்கு செல்லும் . அதன் வழியாக அவரது வலைப் பக்கத்திற்கு செல்வது என் வழக்கம் . என்னைப் போன்று பலரும் செல்ல கூடும். ஆனால் பல வலைப் பதிவர்கள் கூகிள் +  கம்மென்ட்டுக்கு மாறி இருக்கிறார்கள் . இதனால் அவர்களுடைய பெயரை க்ளிக் செய்தால் அவர்களுடைய கூகிள் + 
பக்கத்திற்க்கு செல்லும் அதில் அவர்கள் பகிர்வு செய்த பிறருடைய பதிவுகளும் இடம் பெற்றிருக்கும். இதில் அவரது சமீபத்திய பதிவை கண்டறிவதில் சற்று இடர்பாடு உள்ளது . எனவே கூகிள்+ அதிகம் பயன்படுத்துபவர்கள் தவிர இதரர் பழைய ப்ளாக்கர் கம்மென்ட்ஸ் செட்டிங்க்சில் இருப்பது நல்லது  என்பது எனது கருத்து 

                                                       **************************

எச்சரிக்கை:  முரளி!ஏதோ மதுரை வலைப் பதிவர் விழாவில் தொழில் நுட்பப் பதிவர்னு சொல்லிட்டாங்க. அதுக்காக  இப்படி எல்லாமா ஜுஜுபி  பதிவ போட்டு படுத்தறது 



********************
இதர கற்றுக் குட்டிப் பதிவுகள் 






  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி?
  • முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...
  • உங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி?
  • உங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமா?
  • காபி,பேஸ்ட் செய்யப்பட்டதை அறிவது எப்படி?-பகுதி 2(250 வது பதிவு)
  •  இன்ட்லியால் ஒரு இன்னல்
  • பிற பதிவர்களின் அலெக்சா ரேங்க் அறிவது எப்படி? 
  • .காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
  • தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?




  • செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

    யாருமே படிக்காத முதல் பதிவு

    எனது முதல் பதிவு அனுபவம்.

         ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம்  போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள்  தொடர் பதிவில் இணைத்து விட்டதால் மீண்டும் இதை எழுத வேண்டியதாகி விட்டது. 
         முதல் என்ற சொல்லுக்கு தனி ஈர்ப்பு  உண்டு. முதல் பிறந்தநாள், பள்ளிக்கு போன முதல் நாள்,முதல் ரேங்க் வாங்கிய நாள் ,முதலில் பேசிய மேடை(அதற்கப்புறம் அது தொடரவில்லை என்றாலும்)முதல் திருமண நாள் என்றுபட்டியல் நீண்டு கொண்டே போகும்.
    இணைய இணைப்பு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யார் வேண்டுமானும் வலைப்பதிவு தொடங்க முடியும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. மற்றவர்களின் வலைப பதிவைப் பார்த்து வலையில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 
       கவிதைகள் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு.ஏற்கனவே சும்மா பொழுதுபோக்காக எழுதிய கவிதைகள்(?)கிட்டத்த நூறு இருந்தது. அவை பல்வேறு சூழல்களில் பள்ளியில் படிக்கும்போதில் இருந்து தொடங்கி அவ்வப்போது எழுதி வைத்தது. அவற்றை ஒரே நோட்டில் எழுதி வைக்க முடிவு செய்தேன். அப்படி எழுதும்போது ஏற்கனவே எழுதியவற்றில் எதை முதலில் எழுதுவது என்பthil எதை முதலில் எழுதுவது என்பர் குழப்பம் ஏற்பட்டது. 
       பள்ளியில் படிக்கும்போது  தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடல் மிகவும். பிடிக்கும். அவை ஓசை நயம மிக்கதாக அமைந்திருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட மதக் கடவுளைக் குறிக்காமல்  பொதுவானதாக இருக்கும். அதனால் கடவுள் வாழ்த்தை முதல் பக்கத்தில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

       கடவுள்  வாழ்த்து வெண்பாவில் எழுதவேண்டும் என்ற விபரீத ஆசை துளிர் விட்டது.  காரணம் வெண்பா வடிவத்தின் மீது ஒரு  சிறு வயதில் இருந்தே ஒரு ஒரு ஈர்ப்பு இருந்தது .

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
    துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
    சங்கத்தமிழ் மூன்றும் தா 

        என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் துவக்க வகுப்புகளில் படித்த வெண்பாக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க, பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை வைத்து துணிந்து கடவுள் வாழ்த்தை எழுதிவிட்டேன்.இவை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் இருந்ததே தவிர ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அறிந்ததில்லை. வலைப்பூ  தொடங்கியதும் முதல் பதிவாக இதையே பதிந்தேன்.இப்பதிவை ஆரம்பத்தில் யாரும் படிக்கவில்லை என்றாலும் பின்னர் அவ்வப்போது யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ படிக்கத்தான் செய்தார்கள். சில நூறு பெரியாவது இந்த பதிவு எட்டியதில் மகிழ்ச்சியே

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
    துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
    சங்கத்தமிழ் மூன்றும் தா 

    என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் 

          கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்
          பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
          உற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா!
         
    பற்றியெனைத் தூக்கி விடு. 


         எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் பொதுவாக பேரிறைவா என்று விளித்ததில் எனக்கு கொஞ்சம் திருப்தி.



    முதல்  பதிவின் இணைப்பு
       அப்படியே, சிவன், திருமால், சரஸ்வதி,மழை,தாய், தந்தை,பசு, நிலா, தமிழ், தலைப்புகளில் தட்டுத்தடுமாறி எழுதி வைத்திருந்தேன்.
    வலைப்பூ ஆரம்பித்ததும் இவை அனைத்தையும் சேர்த்து முதல் பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் நல்ல காலம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் .பொதுவான  ஒன்றை மட்டும்  இறைவாழ்த்து என்ற தலைப்பில் பதிவிட்டேன். கொஞ்ச நாளைக்கு அதை நான் மட்டுமே பார்த்தேன். படித்தேன். 

       பின்னர் எது கவிதை , இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  என்று பதிவுகள் எழுதினேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு நீண்ட நாட்கள்  யாரும் கருத்திட வில்லை, பின்னர் முதன்முறையாக ஈழன் என்பவர் இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  பதிவிற்கு கருத்திட்டார். அந்தக் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. இருந்தபோதும் பார்வையாளர் எண்ணிக்கை உயரவில்லை. உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் அப்போது அறிந்திருக்கவில்லை.


        பின்னர் பதிவிடுவதை நிறுத்திவிட்டு. "எழுத்து" தளத்தில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதி வந்தேன். இதற்குள் சில வலைப் பக்கங்கள் அறிமுகமாக , ஓராண்டுக்குப் பிறகு  பதிவெழுதும் ஆசை மீண்டும் துளிர்விட  தொடர்ந்தேன். அடுத்தடுத்து  பதிவுகள் எழுதிய போதும் பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை. தமிழ்மணம்,தமிழ்10 இன்டலி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்த பின்பு முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னணி பதிவர்கள் பலர் என் வலைப் பக்கத்திற்கு வருகை தந்ததோடு கருத்திட்டும் ஆதரவு அளித்தனர். ஆனால் ஒரு சுவாரசியம்  79 வது  பதிவில்தான் ரமணி சாரின் முதல் கருத்து கிடைத்தது பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை எனது 80 வது பதிவுதான் சந்தித்தது.  அதன் பின்னர் பலரின் தவறாது தொடர்ந்து  ஆதரவு கிடைக்க ஓரளவிற்கு மற்ற பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டேன்.  


        277 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.


        குழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட எனது அந்த சுமாரான முதல் பதிவு, இன்று வரை கொடுத்தது  என்றால் மிகையாகாது.


    *******************************************************************************

    இந்த  பதிவை எழுதுமாறு கேட்டுக் கொண்ட அம்பாளடியாள் அவர்களுக்கு என் நன்றிகள் 
    இதுவரை  முதல் பதிவைப் பற்றி  எழுதாத அனைவரையும்  எழுதும்படி அழைக்கிறேன்.


    ****************************************************************************