அன்பு அன்பரே!
வணக்கம்.
திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபாலன் என்றே மாற்றிவிட்ட அற்புதத்தைச் செய்த நீ இப்போது எங்கே இருக்கிறாய். உமது பின்னூட்டங்கள் இல்லாமல் களை இழந்து தவிக்கிறது வலைப் பதிவுகள். காலை எழுந்ததும் கணினி உன் முகத்தில் தானே விழிக்கும். சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் திண்டுக்கல் தனபாலன் அல்லவா?
பின்னூட்டப் புயலே! என்னைப் போன்ற பலர் உனது பின்னூட்டங்களை நம்பித்தானே பதிவுகள் எழுதிக் கொண்டருந்தோம். நீ நுழையாத வலைப் பக்கங்கள் உண்டா? . வண்டு காணாத பூக்கள் இருக்கலாம். உன் பின்னூட்டம் காணாத வலைப் பூக்கள் காண இயலாதே? பல வலைப்பதிவுகளில் உனது பின்னூட்டம் மட்டுமே அல்லவா இருக்கும். உனது பின்னூட்டத்தால் யாரையும் காயப் படுத்தியது இல்லை. மோசமான பதிவு என்றாலும் பாரட்டித் தானே பின்னூட்டம் இடுவாய். பதிவு எழுதி முடிக்கும் அடுத்த வினாடி உனது பின்னூட்டம் எட்டிப் பார்க்குமே. எப்படி என்று நாங்கள் வியந்து போவோமே!
நீ பின்னூட்டத்தால் மட்டுமல்ல தரமான பதிவுகளாலும் அல்லவா எங்கள் உள்ளம் கவர்ந்தாய். திருக்குறளை வைத்து நீ எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்களாயிற்றே! வள்ளுவன் இருந்தால் உமது சுவாரசியமான குறள் வலைப் பதிவுகள் இல்லாதது கண்டு வருத்தப் பட்டிருப்பான். திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா? எந்த ஒரு கருத்தாக இருப்பினும் பொருத்தமான திரைப் பாடலை சுட்டிக்காட்டி அசத்திக் கொண்டிருப்பாயே!
அதற்கும் மேலாக வலையுலக மந்திரவாதியாக அல்லவா விளங்கினாய். உனது வலைப் பக்கத்தில் விதம் விதமான தொழில் நுட்ப வித்தைகள் காட்டி எங்களை மகிழ்வித்தாயே! உனது வலைப்பதிவுகளில் எழுத்துகள் நடனமாடும் . படங்கள் பாடல் பாடும். சுட்டியை வைத்தால் ஒரு ஜாலம் எடுத்தால் இன்னொரு ஜாலம். சொடுக்கினால் பல வித்தை . உன்க வலைப்பூ காண்களுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாக திகழ்ந்ததே! இவற்றை எல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டாய் என்று நாங்கள் வியப்பால் விழிகள் விரிப்போம். நீயோ அமைதிப் புன்னகையால் எங்களை ஆட்கொள்வாய்.
பதிவுகளில் தொழில்நுட்ப மாயாஜாலம் செய்த நீ உனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்தததை நாங்கள் மறக்க முடியுமா? பலரது வலை வடிவமைப்பு உன்னுடைய கைவண்ணம்தானே! தொழில் நுட்ப சிக்கல்கள் தீர்க்க உதவி என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினால் போதும் இருந்த இடத்தில் இருந்து மட்டுமல்ல தேவைப் பட்டால் நேரில் வந்தும் உதவும் பண்பாளர் ஆயிற்றே.
கவிஞர் முத்து நிலவன் அவர்கள் உங்களுக்கு வலையுலகம் சார்பாக வலைச்சித்தர் என்று பட்டம் கொடுத்தார். சித்தர்கள் திடீரென்று திடீரென்று மறைவார்கள்.காட்சியளிப்பார்களாம் அது போல ஒளிந்து நின்று ஆட்டம் காட்டுகிறாயோ!
புதுக்கோட்டை வலைப் பதிவர் சந்திப்பின் வெற்றிக்கு காரணமானவனே! அந்த திருவிழாவிற்குப் பின்வலைப் பதிவிலும் உன்னை சந்திக்க முடியாமல் ஏங்குகிறோம். வலை வாசம் செய்த நீ வனவாசம் போனது ஏன்? முகநூலிலாவது முகம் காட்டிக் கொண்டிருந்தாய்.இப்போது முகநூல் பக்கமும் காணவில்லையே!
கணினியைத் தொடாமல் உன்னால் இருக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் ஏற்றங்கள் இறக்கங்கள் இடர்பாடுகள் வந்து செல்வது வழக்கம்தான்., ஆனால் அவை எல்லாம் வள்ளுவன் வழி அறிந்த உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிவோம்..
காவிரி நீர் காணாத தமிழகம் போல உன்னனக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் வலைப் பதிவுலகம். காவிரி நீரை அணை கட்டித் தடுக்கலாம். நீதிமன்ற ஆணை மறுக்கலாம். ஆனால் உன்னை வலைப் பக்கம் வர விடாமல் தடுத்தது எது? சொல்! உச்ச நீதி மன்றம் சென்று உத்தரவு பெற்று வருகிறோம்?
அன்புடன்
உந்தன் வரவை எதிர்நோக்கும்
வலைப்பூ நண்பர்கள்


