என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 26 டிசம்பர், 2014

பிரபல பதிவர் ஜோதிஜியின் "தொழிற்சாலைக் குறிப்புகள்"-ஒரு பார்வை


     பிரபல பதிவர் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள்"-ஒரு பார்வை

       தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள்.  2013ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக  திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில்செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்த நூல்கள் 50000 முறைக்கு மேல் பதிவிறக்கம்  செயப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது 
சமீபத்தில் வலைத்தமிழ் இணைய இதழுக்கு "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் "என்ற தொடரை இருபது வாரங்களாக எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற்சார்ந்தவற்றை எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தரமுடியாத நுணுக்கங்களை   சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்தளித்துள்ளார். இத்தொடரை வாசித்தவர்களிடம்  இருந்துவந்துள்ள விமர்சனங்களை வைத்தே இத் தொடரின் கருத்தாழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு படைப்பின் சிறப்பு. அந்த வகையில் இத் தொடர் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை 

   ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கிறது.ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை, நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.

   இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி  

   அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  அவற்றை தொடர்வதை சில இடங்களில் சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார். 

      இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாது  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில் 
    இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள் ,சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

    ஆயத்த ஆடைத் தொழிலில் ,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா என ஆச்சர்யப் பட வைக்கிறது  ஜோதிஜியின் எழுத்துக்கள்  

    அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது தவறாமல் கிடைக்கவேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தயங்காத  மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

      பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன? என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .
   
      இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூல நான் அறிந்து  கொண்ட ஒன்று  தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை என்ற உண்மையை ஓங்கி உரைக்கிறது இத் தொடர். திறமையான ஒருவர் வெளியே போனாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

      காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி..விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறைக்கு ஒரு குட்டு வைக்கிறார் ஜோதிஜி  இடை இடையே சமுதாய  நிலையை கூறவும் தவறவில்லை..

      ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறார். திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்த்துகளில்  புலப்படுகிறது  

   இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களை உளவியல் ரீதியாக விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கறேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை

      திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

      இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள்  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன்.

     ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை 

இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள்,வெற்றி தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்   ஜோடி. குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன்.

   ஒரு பயனுள்ள தொடரை வெளியிட்ட வலைத் தமிழ் இணைய தளத்திற்கும்  படைத்தளித்த ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 

டி.என்.முரளிதரன்மூங்கில் காற்று 
www.tnmurali.com

தொடரை முழுமையாக வலைத்தமிழ் இணைய தளத்தில் படிக்க கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள் 




  

21 கருத்துகள்:

  1. ஜோதிஜி ஐயா அவர்களின் பதிவினைத் தொடர்ந்து படித்தவன் என்ற முயையில், தங்கள் பதிவின் ஒவ்வொரு எழுத்துடனும், கருத்துடனும் ஒத்துப் போகின்றேன் ஐயா.
    ஜோதிஜி அவர்களின் பதிவு நிர்வாகவியல் கல்லூரியில் பாடமாக வைக்கப் பட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும்

    பதிலளிநீக்கு
  2. ஜோதிஜி திருப்பூர் – அவர்களது தொடர் பற்றி நல்ல விமர்சனம். என்னால் தொடர்ந்து படிக்க இயலாமல் போயிற்று. இது புத்தக வடிவில் வந்தால், வாங்கி படிக்கலாம் என்று இருக்கிறேன்.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  3. ஜோதிஜி அவர்களின் கட்டுரைகளை நன்கு ஆராய்ந்து அதன் மேன்மைகளை நன்கு அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    முரளி ( அண்ணா)

    ஜோதிஜி பற்றி தங்களின் பார்வையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. அவரின் ஒவ்வொரு படைப்புக்களையும் படித்து வருகிறேன்... மிகவும் திறமையானவர் இன்னும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. திரு ஜோதிஜி அவர்களின் தொடர் கட்டுரையை அழகாக விரிவாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
    அவர் கட்டுரையை வலைத்தமிழ் இணைய தளத்தில் படிக்க இணைப்பை கொடுத்தமைக்கு நன்றி.
    உங்களுக்கும், ஜோதிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தாக்கங்களை சிறப்பாக, நாசுக்காக தாக்குவதில் நிபுணர்...!

    பதிலளிநீக்கு
  7. தாங்கள் எழுதும் பதிவுகளைப் போலவே தங்களுக்கு விமர்சனக்கலையும் தெளிவாக வருகின்றது. உங்கள் அக்கறைக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  8. Thank you for a very nice introduction to and a fair review of the articles by Sri Jothiji. I immediately went to the site and randomly read two parts and am greatly impressed by the person and his in-depth knowledge of management and life itself. Will read all the parts soon. Thank you again! - R. J.

    பதிலளிநீக்கு
  9. ஜோதிஜிக்கு எங்கள் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  10. முப்பரிமாணப் பார்வை!பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. இந்த தொடரினை நானும் தொடர்ந்து வாசித்தேன்! சிறப்பாக அலசியுள்ளீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. திருப்பூரைச் சேர்ந்தவன்..இதே தொழிலில் இருப்பவன் என்ற முறையில் இந்த தொடரின் விவரிப்புகள்..எழுத்து நடை இவற்றை உண்மையிலேயே மகிழ்வோடு பாராட்டுகிறேன்...பனியன் தொழில், அதில் சிரமங்கள், பற்றி எங்கும் எழுத்தில் வராத, வர முடியாத கருத்துகளை அனுபவப் பகிர்வாக ஜோதிஜி எழுத்தாக்கி இருக்கிறார்...இது ஒரு தீப்பொறி...நம் மனம் பற்றிக்கொள்ளத் தயாராக இருந்தால் போதும்..சாதனைகள் சாதாரணம் ஆகிவிடும்..

    பதிலளிநீக்கு
  13. \\இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது . பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த ஆடைகளை பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது . வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

    ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை \\

    தங்களின் பதிவில் ஜோதிஜியின் எழுத்தாக்கம் பற்றி மிகப்பிரமாதமாக அலசியிருக்கிறீர்கள். குறிப்பாக மேற்கண்ட வரிகள்தாம் மொத்த விமரிசனத்தின் சாரமாக அமைந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு இம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்த முடிவதே படைப்பின் ஒரு படைப்பின் வெற்றியாக இருக்கமுடியும். நான் இன்னமும் அந்தத் தொடரில் படிக்கவேண்டிய பகுதிகள் மிச்சம் இருக்கின்றன. அதனையும் படித்துவிட்டுக் கருத்துத் தெரிவிக்கலாம் என்றிருந்தேன். நல்லவேளையாக உடனடியாக எல்லாவற்றையும் படித்துவிட்டு மிகச்சிறந்த ஒரு விமரிசனம் எழுதியிருக்கிறீர்கள்.
    ஜோதிஜி சமூக அக்கறைக் கொண்ட ஒரு அருமையான படைப்பாளியாய் உருவாகிவருபவர். அவர் எழுத்துக்கள் தமிழ் இணைய உலகில் பெரிதும் பேசப்படும் இடத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்டவர். நாவல் போன்ற துறைகளில் இறங்கினாரென்றால் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் நிச்சயம் இலக்கிய உலகிலும் பேசப்படுவார். சிறப்பான விமரிசனத்திற்கு உங்களுக்கும் ஒரு பாராட்டு.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
    வாழ்த்துக்கள்
    அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
    link is here click now!

    பதிலளிநீக்கு
  15. ஜோதிஜியின் எழுத்துக்களை நன்றாக படித்து புரிந்துகொண்ட எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. நானும் பல வாரங்கள் இந்த தொடரை வாசித்தேன்...நான் உணர்ந்ததை...சில சமயங்கள் நான் விட்டுவிட்டத்தையும் தொட்டுச்சென்றிருக்கிறது உங்கள் எழுத்துக்கள். நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  17. உண்மையே நண்பரே! ஜோதிஜியின் எழுத்துத் தாக்கம் ஏற்பட்டது உண்மையே! நாங்களும் தொடர்ந்து வாசித்தவர்கள். இறுதியில்தான் கருத்து சொல்ல முடியாமல் போனது. உங்கள் விமர்சனத்துடன் எங்கள் கருத்தும் ஒத்துச் செல்கின்றது. அவர் திருப்பூர் தொழிற்சாலைகள், அதில் பணிபுரிவோர், ஏற்படும் சங்கடங்கள், முடிவு எடுப்பதில் இருக்கும் கஷ்டங்கள், நேர்மையாக இருப்பதில் உள்ளத் தடங்கல்கள் என்று பலவற்றையும் அலசி கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றார்.

    தங்கள் விமர்சனமும் அருமை நண்பரே! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு

  18. Sosyal medya yönetiminde başarı sağlamak için güvenilir araçlar kullanmak oldukça önemlidir. Bu noktada smm panel gibi platformlar takipçi ve beğeni artırma konusunda büyük kolaylık sağlar. Doğru seçimler yaparak markanızın görünürlüğünü artırabilir ve hedef kitlenize daha hızlı ulaşabilirsiniz. Bu nedenle işinizi büyütmek için smm panel kullanımını değerlendirmekte fayda vardır.

    பதிலளிநீக்கு
  19. 71A84A4E03
    Many online resources can help you improve your skills and knowledge. For example, you can explore various tutorials and guides available through a trusted Website that offers valuable information. Utilizing these tools regularly can significantly enhance your learning experience and keep you updated with the latest trends. Remember to verify the credibility of the sources you use. Consistent effort and reliable resources are key to success.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895